சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm

» பல்சுவை
by rammalar Today at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Khan11

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 2:56 am

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை 1

நபி(ஸல்)அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைக்க ஆரம்பித்த சமய‌ம், அண்ணல் நபியவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும் புனித கஃஅபாவில் நுழைவதற்கும் அங்கு தொழுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர். அதை மீறிச் செல்பவர்கள் தாக்கப்பட்டனர். குறைஷிகளின் இப்படிப்பட்ட அட்டூழியங்கள் ஹிஜ்ரி 6 - ம் ஆண்டு வரை தொடர்ந்துக் கொண்டிருந்தது. அதன் உச்சக்கட்டமாக, உம்ரா செய்வதற்காக‌ வந்த மக்கா மண்ணின் மைந்தரான நபி(ஸல்)அவர்களும் அவர்களின் தோழர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். எந்த வகையிலும் முஸ்லிம்களை மக்காவினுள்ளே அனுமதிக்க மக்கத்து காஃபிர்கள் தயாராக இருக்கவில்லை. இதன் விளைவாக இந்நிகழ்ச்சியின் இறுதியில், இறைவனின் உதவியினாலும் இறைத்தூதர்(ஸல்) அவர்களது நுண்ணறிவு மிக்க நடத்தையினாலும் ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை தான் இஸ்லாமிய வரலாற்றில் 'ஹுதைபிய்யா உடன்படிக்கை' என்று அழைக்கப்படுகின்றது. ‍‍‍‍‍‍‍‍‍அந்த நிகழ்ச்சி நடந்தது, இப்போது நாம் எந்த மாதத்தில் இருந்துக் கொண்டிருக்கிறோமோ இதே 'துல்கஃதா' மாதத்தில்தான். இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என்பதாலும் அதைப்பற்றி தெரியாதவர்களும் தெரிந்துக் கொள்வதற்காகவும் ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த இந்த துல்கஃதா மாதத்தில் இதைப் பதிவிடுவது பொருத்தமாக அமையும் இன்ஷா அல்லாஹ்!


ஹிஜ்ரி 6 - ம் ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி வரும்போது அவர்களுடன் சுமார் 1500 தோழர்கள் இருந்தனர்.


"ஹுதைபிய்யா தினத்தன்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்" என்று ஜாபிர் அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.


அறிவிப்பவர்: கத்தாஹ்(ரலி); நூல்:புகாரி (இன்னொரு அறிவிப்பில் 1400 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 2:56 am

மக்கத்து நிராகரிப்பாளர்கள் முஸ்லிம்கள் வருவதைக் கேள்வியுற்று, அவர்களை மக்காவினுள்ளே உம்ரா செய்ய அனுமதிப்பது என்பது தாங்கள் அதுவரை செய்துவந்த போராட்டத்தில் தாங்கள் தோல்வியை தழுவியதாகிவிடும், முஹம்மது(ஸல்)அவர்கள் தம் பலத்தால் மக்காவினுள் நுழைந்துவிட்டார் என்று மக்கள் பேசிக் கொள்வார்கள் என்று எண்ணி, இதனைத் தடுக்க தங்களால் இயன்ற‌ அனைத்து முயற்சிகளிலும் இறங்குகிறார்கள்.




நபி(ஸல்)அவர்கள் இஹ்ராம் அணிந்து உம்ராவுக்குச் சென்று கொண்டிருந்த போது, உம்ராச் செய்யவிடாமல் தடுப்பதற்காகக் குறைஷிகள் படை திரட்டியுள்ளதாக நபி(ஸல்)அவர்கள் ஏற்படுத்தியிருந்த உளவுத் துறை மூலமாக செய்தி கிடைக்கின்றது. புகாரி கிரந்தத்தில் இதுபற்றி மிஸ்வர் பின் மக்ரமா(ரலி)அவர்கள் அறிவிக்கக்கூடிய 4179 வது ஹதீஸின் தொடர்ச்சியில்,




நபி(ஸல்)அவர்கள் அனுப்பி வைத்த உளவாளி வந்து கூறிய செய்தியை அறிந்தவுடன் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், "மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததிகளிடமும் நான்(போர் தொடுக்கச்)செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள்(போர் புரிய)வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணை வைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கிவிட்டுச் செல்வோம்" என்று கூறினார்கள்.




அப்போது அபூபக்க‌ர்(ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடிதானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே! எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் நம்மை எவன் தடுக்கின்றானோ அவனிடம் நாம் போரிடுவோம்" என்று (ஆலோசனை) கூறினார்கள். பிறகு நபி(ஸல்)அவர்கள், "அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்" என்று கூறினார்கள்.




இதனிடையே நபி(ஸல்)அவர்கள் தாங்கள் உம்ரா செய்வதற்காகதான் மக்காவிற்கு வருகிறோம் என்பதை விளக்கிச் சொல்லும்படியும், அமைதியாக உம்ரா செய்து விட்டுத் திரும்புவதாக பேச்சு வார்த்தை நடத்திவிட்டு வரும்படியும் உஸ்மான்(ரலி)அவர்களை அனுப்பி வைக்கின்றார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 2:56 am

அதற்கு முன்பு...



நபி(ஸல்)அவர்கள் குஸாஆ கிளையினரைச் சார்ந்த கிராஷ் பின் உமைய்யாவை ஸஃலப் என்ற ஒட்டகத்தின் மீது அமர்த்தி முதலில் அனுப்பி வைத்திருந்தார்கள். அவர் மக்காவிற்குள் நுழைந்ததுமே குறைஷிகள் அவரது ஒட்டகத்தை அறுத்து அவரைக் கொலை செய்யவும் நினைத்தனர். ஆனால் பனூ கினானா கிளையைச் சேர்ந்தவர்கள் அதைச் செய்யவிடாமல் குறைஷிகளைத் தடுத்துவிட்டனர். (குறைஷிகளிடமிருந்து தப்பித்த) கிராஷ், நபி(ஸல்)அவர்களிடம் வந்தார்.




இதனால் உமர்(ரலி)அவர்களை அனுப்பி வைப்பதற்காக நபி(ஸல்)அவர்கள் அழைத்தார்கள். அதற்கு உமர்(ரலி)அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். (என்னுடைய) 'பனூ அதீ' குடும்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை. நான் குறைஷிகள் மீது கொண்டிருக்கும் விரோதத்தையும் கடுமையையும் பனூ அதீ குடும்பம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றது. எனினும் நான் என்னைவிடக் கண்ணியமிக்க ஒருவரை உங்களுக்குக் காட்டுகிறேன். அவர்தான் உஸ்மான் பின் அஃப்பான்" என்று கூறினார்கள்.




உடனே நபி(ஸல்) அவர்கள், உஸ்மான்(ரலி)அவர்களை அழைத்து, தாம் போர் செய்வதற்காக வரவில்லை; கஃஅபாவின் கண்ணியத்தை மதித்தவனாக அதைச் சந்திக்கவே (உம்ரா செய்யவே) வந்திருக்கிறேன் என்று தெரிவித்து வருமாறு அவரைக் குறைஷிகளிடம் அனுப்பி வைத்தார்கள்.




உஸ்மான்(ரலி) புறப்பட்டு மக்கா வந்து சேர்ந்தார்கள். அவரை அபான் பின் ஸயீத் வந்து சந்திக்கிறார். உஸ்மான்(ரலி)அவர்களை வாகனத்திலிருந்து இறக்கி, தமது (வாகனத்தின்) முன்னால் அமர வைத்துக் கொண்டு, தான் பின்னால் இருந்து அபான் பின் ஸயீத் அடைக்கலம் கொடுக்கிறார்.




கடைசியாக உஸ்மான்(ரலி), நபி(ஸல்)அவர்கள் சொல்லியனுப்பிய‌ செய்தியைச் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பிறகு அபூ சுப்யானிடமும், மற்ற குறைஷிகளின் பெரும் புள்ளிகளிடமும் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.




அதற்கு குறைஷித் தலைவர்கள், "நீ தவாஃப் செய்ய வேண்டும் என்று விரும்பினால் தவாஃப் செய்து கொள்! (முஹம்மதின் விவகாரத்தை இங்கு பேசாதே!)" என்று சொல்லி விடுகின்றனர். அதற்கு உஸ்மான் (ரலி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்யாத வரை நான் செய்ய மாட்டேன்" என்று பதிலளிக்கிறார்கள். உடனே அவர்கள் உஸ்மான்(ரலி)அவர்களை திரும்பி வரவிடாமல் தடுத்து வைக்கின்றார்கள். அப்போது உஸ்மான்(ரலி)படுகொலை செய்யப்பட்டதாக நபி(ஸல்)அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தகவல் கிடைக்கின்றது.




அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி); நூல்: அஹ்மத்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 2:58 am

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை %5B1%5D
பைஅத்துர் ரிள்வான்:





தூதுச் சென்ற உஸ்மான்(ரலி)அவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியதும், நபி(ஸல்)அவர்களும் தோழர்களும் உஸ்மான்(ரலி)அவர்களின் உயிருக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணிப்போம் என்று உடன்படிக்கை எடுக்கிறார்கள். மேற்கொண்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறது. அப்படிப் போராடினால் அது சாதாரணமாக போராட்டமாக இருக்காது, மக்காவினுள்ளே போராடுவதாக இருந்தால் மக்கத்து நிராகரிப்பாளர்கள் இறுதிவரை போராடுவார்கள். இலகுவாக‌ பணிந்துவிட மாட்டார்கள். எனவே, அழிவு இரு புறமும் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இந்த வகையில் மரணம் உறுதியாகி விட்டாலும்கூட புறமுதுகுக் காட்டி ஓடக்கூடாது என்ற கருத்தில் நபி(ஸல்)அவர்கள் ஸஹாபாக்கள் அனைவரிடமும் பைஅத்(உறுதி மொழி)செய்கிறார்கள். ஒரு மரத்தடியில் நபி(ஸல்)அவர்கள் உட்கார்ந்திருக்க ஒவ்வொருவராக அனைவரும் வந்து பைஅத் செய்கிறார்கள். இது இஸ்லாமிய வரலாற்றில் "பைஅத்துர் ரிள்வான்"என சொல்லப்படுகிறது.

இதைப்பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது, அதில் கலந்துக் கொண்ட நபித் தோழர்களை, தான் திருப்திப்பட்டுக் கொண்டதாக கூறிக்காட்டுகிறான்.

"அந்த மரத்தினடியில் நம்பிக்கையாளர்கள் உம்மிடம் உறுதி மொழி செய்தபோது அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களது உள்ளங்களில் இருந்தவற்றை அறிந்தான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்" (அல்குர்ஆன் 48:18)

அறிவிப்பாளர் யஸீத் பின் அபீ உபைத்(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:

நான்,(இந்த செய்தியை எனக்கு அறிவித்த சலமா பின் அக்வஃ(ரலி)அவர்களிடம்) "அபூ முஸ்லிமே! அன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி(ஸல்)அவர்களிடம்) உறுதிமொழி அளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்" என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்

மேலும் இந்த உடன்படிக்கையை பாராட்டும் விதமாக, நபியவர்களிடம் தோழர்கள் செய்த உடன்படிக்கையானது தன்னிடம் செய்த உடன்படிக்கையாகும் என்றும் எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா தன‌து திருமறையிலே குறிப்பிடுகின்றான்.

"உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்." (அல்குர்ஆன் 48:10)

நபி(ஸல்)அவர்களும் தங்கள் உயிர்களை அர்ப்பணிக்கத் தயாரான தோழ‌ர்களை "பூமியில் சிறந்தவர்கள்' என்று பாராட்டுகிறார்கள்.

ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் ஹுதைபிய்யா தினத்தன்று ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது நபி(ஸல்)அவர்கள் எங்களிடம், "பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்"' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்

உஸ்மான்(ரலி)அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற தகவல் கேட்டு, அவர்க‌ளுக்காகதான் இந்த நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. ஆனால் அது வதந்தி என்று பின்னால் தெரிந்த‌ பிறகு, உஸ்மான்(ரலி)அவர்கள் ஏன் இதில் கலந்துக் கொள்ளவில்லை என்ற காரணத்தை விளக்குவதற்காக‌ (இந்த நிகழ்ச்சிகளுக்கு பிறகு) ஒருமுறை இப்னு உமர்(ரலி)அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:

"பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களை விடக் கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை) எனவே தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்பு தான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, "இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, " (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்: புகாரி

இவ்வாறு நடைப்பெற்ற இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சிக்கு பிறகு, நபி(ஸல்)அவர்கள் மக்காவை நோக்கி பயணத்தைத் தொடர்கிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:00 am

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை 1
ஒட்டகம் நகர மறுத்தது ஓர் இறை ஏற்பாடு!
இவ்வாறு நடைப்பெற்ற "பைஅத்துர் ரிள்வான்" என்ற‌ இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சிக்கு பிறகு, நபி(ஸல்)அவர்கள் மக்காவை நோக்கி பயணத்தைத் தொடர்கிறார்கள். இறைத் தூதரையும் அவர்களின் தோழரையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத மக்காவிலிருந்த நிராகரிப்பாளர்களுக்கு இருந்த ஒரே வழி யுத்தம் செய்வது மட்டுமே. எனவே, இடையிலேயே இறைத்தூதரையும் முஸ்லிம்களையும் தடுத்து நிறுத்திப் போராட மக்காவாசிகள் காலித் பின் வலீதின் கீழ் ஒரு படைப்பிரிவை அனுப்புகிறார்கள்.

மக்காவை நோக்கி நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தபோது வழியில் நபி(ஸல்)அவர்கள், "காலித் பின் வலீத், குறைஷிகளின் குதிரைப் படையுடன் 'கமீம்' என்ற இடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர் கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப்பக்கப் பாதையில் செல்லுங்கள், (காலித் பின் வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்)" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை காலித் அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக் குழுப்படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார். நூல்: புகாரி

தொடர்ந்து நபி(ஸல்)அவர்களும் அவர்களின் தோழர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் ('மிரார்' என்னுமிடத்தில்) அவர்களுடைய ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டது. மக்கள்(அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) "ஹல் ஹல்" என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்ததும் மக்கள், "கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது, கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது'' என்று கூறினார்கள். ("கஸ்வா" என்பது நபி(ஸல்)அவர்களின் ஒட்டகத்தின் பெயர்)

நபி (ஸல்) அவர்கள், "கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப்படை கஃஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கிறான்" என்று கூறினார்கள். நூல்:புகாரி


ஒட்டகம் நகர மறுத்து, படுத்துவிட்ட‌தைக் கண்ட நபி(ஸல்)அவர்கள், அது இறைவனின் ஏற்பாடு என்று புரிந்துக் கொண்டு, சமாதானத்திற்கு முதலிடம் கொடுக்கும் வகையில் மக்காவோடு ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்காக மிகவும் கவனத்தோடு, நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படுகிறார்கள்.

"என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்)கொடுப்பேன்" என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்)அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. நூல்: புகாரி

இறுதியில், ஹுதைபிய்யா பள்ளத்தாக்கின் எல்லையில் நபி(ஸல்)அவர்கள் முகாமிடுகிறார்கள். இந்த நிலையில் குறைஷிகளின் பக்கமிருந்து ஐந்து தூதுவர்கள் ஒவ்வொருவராக நபி(ஸல்)அவர்களிடத்தில் வருகிறார்கள். அந்த‌ தூதுவர்களில் நேர்மையான சிலர் இருந்தாலும் குறைஷிகள், நபி(ஸல்)அவர்களோடு பேசுவதற்கு பொருத்தமற்ற சிலரையும் அவர்களிடம் தூதுவர்களாக அனுப்புகிறார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:01 am

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை %D9%85%D9%88%D9%82%D8%B9+%D8%A7%D9%84%D8%AD%D8%AF%D9%8A%D8%A8%D9%8A%D8%A9+2
ஹுதைபிய்யா பள்ளத்தாக்கு




உம்ரா செய்வதற்காக வந்த நபி(ஸல்)அவர்கள் ஹுதைபிய்யா பள்ளத்தாக்கின் எல்லையில் முகாமிட்ட பிறகு, குறைஷிகளின் சார்பில் ஒவ்வொருவராக ஐந்து தூதுவர்கள் நபி(ஸல்)அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருகிறார்கள். அந்த‌ தூதுவர்களில் நேர்மையான சிலர் இருந்தாலும் குறைஷிகள், நபி(ஸல்)அவர்களோடு பேசுவதற்கு பொருத்தமற்ற சிலரையும் அவர்களிடம் தூதுவர்களாக அனுப்புகிறார்கள். ஆனால் நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் மோசமான எண்ணம் கொண்டிருந்தவர்கள் கூட, நபி(ஸல்)அவர்களோடு பேசிவிட்டு திரும்பும்போது அவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த‌ எண்ணங்களில் தடுமாறியவர்களாகவும், அண்ணல் நபி(ஸல்)அவர்களைக் கண்டு ஆச்சரியமுற்றவர்களாகவுமே திரும்பினார்கள்.

(முதலில்) புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களான‌) திஹாமாவாசிகளிடையே நபி(ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், "(முஹம்மத் அவர்களே!) கஅப் இப்னு லுஅய், மற்றும் ஆமிர் இப்னு லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவ சுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களை விட்டுவிட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லமான கஃஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்" என்று கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், "நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா செய்வதற்காகதான் வந்திருக்கின்றோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே (இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குத்) தடையாக இருக்கவேண்டாம். நான் வெற்றி பெற்றுவிட்டால், அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்துவிட்டால், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நடத்தியே தீருவான்" என்று கூறினார்கள்.

"நீங்கள் சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன்" என்று கூறிவிட்டு புதைல் பின் வரகா குறைஷிகளிடம் சென்று, "நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்" என்று சொன்னார்.

அப்போது அவர்களிலிருந்த அறிவிலிகள், "அவரைக் குறித்து எங்களுக்கு எதையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறினர். ஆனால், அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள், "அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்" என்று கூறினர். பிறகு புதைல், "அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்" என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

உடனே, (அப்போது இறை மறுப்பாளராயிருந்த) உர்வா இப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ எழுந்து நின்று, "என் சமுதாயத்தாரே! நீங்கள் என் தந்தையைப் போல் (என் மீது இரக்கமுடையவர்கள்) அல்லவா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தனர். உர்வா, "நான் உங்கள் மகனைப் போல் (உங்கள் நலம் நாடுபவன்) இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம் (நீங்கள் எங்கள் நலம் நாடுபவர் தாம்)" என்று பதிலளித்தனர். மேலும் அவர், "நீங்கள் என்னைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இல்லை" என்று பதிலளித்தனர்.

அப்போது உர்வா, "உக்காழ் (சந்தை) வாசிகளிடம் உங்களுக்கு உதவும்படி கேட்டதும் அவர்களால் உதவ முடியாத (நிலை ஏற்பட்ட)போது நான் என் வீட்டாரையும் என் குழந்தையையும் எனக்குக் கட்டுப்பட்டவர்களையும் உங்களிடம் கொண்டு வந்துவிட்டேன் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம் (தெரியும்)" என்று பதிலளித்தார்கள்.

அப்போது அவர், "முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். நீங்கள் (அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்ல விடுங்கள்" என்று கூறினார். அதற்கு அவர்கள், "அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்" என்று கூறினர். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:02 am

நபி(ஸல்)அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, "முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறு விதமான முடிவு ஏற்பட்டாலும்... குறைஷிகள் வென்றுவிட்டாலும்...(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களை விட்டுவிட்டு விரண்டோடக்கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன்" என்று கூறினார்.

(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, "நாங்கள் இறைத் தூதரை விட்டுவிட்டு ஓடிவிடுவோமா?" என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, "இவர் யார்?" என்று கேட்டார். மக்கள் "அபூபக்ர்" என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, "நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்" என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார். நபி(ஸல்)அவர்களுடன் பேசும்போதெல்லாம் அவர்களுடைய தாடியைப் பிடித்தபடி இருந்தார்.

அப்போது முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி(ஸல்)அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே உர்வா, நபி(ஸல்)அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்தபோதெல்லாம் முகீரா(ரலி)அவர்கள், அவரது கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, "உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து" என்று கூறிய வண்ணமிருந்தார்கள்.

அப்போது உர்வா தனது தலையை உயர்த்தி, "இவர் யார்?" என்று கேட்க மக்கள், "இவர் முகீரா பின் ஷுஅபா" என்று கூறினார்கள். உடனே உர்வா, "மோசடிக்காரரே! நீர் மோசடி செய்த போது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா?" என்று கேட்டார்.

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா அவர்களைப் பழி வாங்க முனைந்தபோது அவரது தந்தையின் சகோதரரான உர்வாதான், அவர்களை உயிரீட்டுத் தொகைக் கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்கள்.

உர்வா தன் தோழர்களிடம் சென்று, "என் சமுதாயத்தாரே! (ரோமாபுரி மன்னன்) சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. மேலும், அவர் உங்கள் முன் நேரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

உடனே பனூகினானா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், "என்னை அவரிடம் செல்லவிடுங்கள்" என்று சொன்னார். அதற்கு அவர்கள், "சரி, செல்லுங்கள்" என்று கூறினர். அவர் நபி (ஸல்)அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்தபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள், "இது இன்னார், இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக ஒட்டகங்களை கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரிடம் தியாகப் பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்" என்று சொன்னார்கள். உடனே, அவரிடம் ஒரு தியாக ஒட்டகம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. மக்கள் "தல்பியா" கூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன், "சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது சரியில்லையே" என்று (தமக்குள்) கூறிக்கொண்டார்.

(குறைஷிகளான‌) தம் தோழர்களிடம் திரும்பிச் சென்றபோது, "தியாக ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலைக் கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றை அடையாளமிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். ஆகவே, இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லை" என்று கூறினார்.

அவர்களில் மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதர் எழுந்து, "என்னை அவரிடம் போக விடுங்கள்" என்று கூறினார். மக்காவாசிகள், "சரி, நீங்கள் அவரிடம் போங்கள்" என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்றபோது நபி(ஸல்)அவர்கள், "இவன் மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன்" என்று கூறினார்கள். அவன் (வந்தவுடன்) நபி(ஸல்)அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

அவன் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் இப்னு அம்ர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார். சுஹைல் இப்னு அம்ர் வந்த போது நபி(ஸல்) அவர்கள், "உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டது" என்று ("சஹ்ல் = சுலபம்" என்னும் பொருள் கொண்ட பெயருடைய ஒருவர் வந்ததைக் குறிக்கும் வகையில்) கூறினார்கள். சுஹைல் இப்னு அம்ர் வந்து, "(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்" என்று கூறினார்.
நூல்: புகாரி (2731)

நபி(ஸல்)அவர்களின் சமாதான உடன்படிக்கைக்கான வேண்டுகோளை சுஹைல் இப்னு அம்ர் ஏற்றுக்கொண்டதும், அண்ணலவர்கள் உடன்படிக்கைகளை எழுத தயாராகிறார்கள். ஆனாலும் இருவர் தரப்பு ஒப்புதலோடும் எழுதப்படவேண்டிய ஒப்பந்தத்தை, நிராகரிப்பாளர்கள் தங்களின் இஷ்டப்படி எழுத நிபந்தனைகளை விதிக்கிறர்கள்.

அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்காக‌ முயற்சிக்கின்ற அந்த வேளை, 'மக்கா எந்த வகையிலும் முஸ்லிம்களை ஏற்கும் நிலையில் இல்லை' என்ற வகையில் இம்முயற்சியைக் குழப்பிவிடும் நோக்கம் கொண்டதாக நிராகரிப்பவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:03 am

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை 2


அண்ணல் நபி(ஸல்)அவர்கள் ஒப்பந்தத்திற்காக‌ முயற்சிக்கின்ற அந்த வேளை, 'மக்கா எந்த வகையிலும் முஸ்லிம்களை ஏற்கும் நிலையில் இல்லை' என்ற வகையில் இம்முயற்சியைக் குழப்பிவிடும் நோக்கம் கொண்டதாக நிராகரிப்பவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன. நபி(ஸல்)அவர்களோடு பேசுவதற்கு பொருத்தமற்றவர்களை அவர்களிடம் அனுப்பியவர்கள், இப்போது முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே பாதகமாகத் தோன்றக்கூடிய, அவர்களை ஆத்திரமூட்டக்கூடிய‌ நிபந்தனைகளை உடன்படிக்கையில் எழுதச் சொல்கிறார்கள். ஆரம்பிக்கும்போதே தகராறுக்காக‌ மறுத்துப் பேசுகிறார்கள் நிராகரிப்பளர்கள்.

நபி(ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், "பேரருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்..." என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான ஆரம்ப‌ வாசகத்தை)நபியவர்கள் சொன்னார்கள்.




சுஹைல், "ரஹ்மான்- கருணையன்புடையோன்" என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், "இறைவா! உன் திருப் பெயரால்..." என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல்தான் நான் எழுதுவேன்" என்றார்.

முஸ்லிம்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -அளவற்ற அருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்றுதான் இதை எழுதுவோம்" என்று கூறினார்கள்.

நபி(ஸல்)அவர்கள், "பிஸ்மிக்க அல்லாஹும்ம - இறைவா! உன் திருப்பெயரால் என்றே எழுதுங்கள்" என்று சொன்னார்கள்.

பிறகு நபி(ஸல்)அவர்கள், "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்துக் கொண்ட சமாதான ஒப்பந்தம்" என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, 'முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்று எழுதுங்கள்" என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்வதாக நீங்கள் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர்தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) 'முஹம்மத் பின் அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்றே எழுதுங்கள்" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள். நபி(ஸல்)அவர்கள், அவர்களுடன் விட்டுக்கொடுத்து ஒத்துப் போகவிட்டதற்குக் காரணம் அவர்கள், "அல்லாஹ்வினால் புனிதமாக அறிவிக்கப்பட்ட (மக்கா நகரத்)தை கண்ணியப்படுத்துகிற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்)கொடுப்பேன்" என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகதான்.


நூல்: புகாரி (2731)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:04 am

புகாரியின் மற்றொரு அறிவிப்பிலே,

ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, "இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள்" என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், "நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர்தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்" என்று கூறினார்கள். நபி(ஸல்)அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்" என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்ற வார்த்தையை அழித்துவிடுங்கள்" என்று கூறினார்கள். அலீ(ரலி), "முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்கமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள்.

நூல்: புகாரி (2699)

பிறகு ஒவ்வொரு நிபந்தனையும் சொல்லப்படும்போது அதை நிராகரிப்பவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதும் மாற்றமாக சொல்வதுமாக இருந்தனர்.

முதல் நிபந்தனை:

பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், "எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்லவிடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது" என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க)முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) 'நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்' என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்" என்று கூறி, அவ்வாறே எழுதினார்.

அதாவது, முஸ்லிம்கள் இவ்வருடம் மக்காவில் நுழைய‌க்கூடாது. அடுத்த ஆண்டு தான் உம்ராவுக்கு வரவேண்டும்.

இரண்டாவது நிபந்தனை:

குறைஷியரில் எவரேனும் உத்தரவின்றி மதீனாவுக்கு வந்துவிட்டால் அவரைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். அதற்கு மாறாக‌ முஸ்லிம்களில் எவரேனும் குறைஷிகளிடத்தில் வந்துவிட்டால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.

சுஹைல், "எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பிவிட வேண்டும்" என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், "சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்)வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?" என்று வியப்புடன் கேட்டார்கள்.

அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் இப்னு அம்ருடைய மகன் 'அபூ ஜந்தல்'(எனபவர் தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார். அவர்கள் மக்காவின் கீழ்ப்பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்.

உடனே (அவரது தந்தையான) சுஹைல், "முஹம்மதே! (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்" என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள், "நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே" என்று பதிலளித்தார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:05 am

அதற்கு சுஹைல், "அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்" என்று கூறினார். (அப்போது) நபி(ஸல்)அவர்கள், "அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்" என்று கூறினார்.

அதற்கு நபி(ஸல்)அவர்கள், "இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக்கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நான் அனுமதியளிக்கப் போவதில்லை" என்று கூறினார்.

மிக்ரஸ் என்பவர், "நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்" என்று கூறினார். அபூஜந்தல்(ரலி)அவர்கள், "முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்)வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?" என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

அப்போது, (இணைவைப்பவர்களின் அநியாயங்களைக் கண்டு, தான் கொந்தளித்துப் போனதைப் பற்றிக் கூறும்போது) உமர்(ரலி)அவர்கள் கூறுகின்றார்கள்:

உடனே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதர்தான்" என்று பதிலளித்தார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கும் நபி(ஸல்)அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நான், "அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன்" என்று பதிலளித்தார்கள். நான், 'விரைவில் நாம் இறையில்லம் கஃஅபாவைத் தவாஃப் செய்வோம்' என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஃஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?" எனக் கேட்டார்கள். நான், "இல்லை" என்று பதிலளித்தேன். நபி(ஸல்)அவர்கள், "நீங்கள் நிச்சயம் கஃஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள்" என்று கூறினார்கள்.


பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் தான்" என்று கூறினார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும், நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். நான், "அப்படியென்றால் இதை ஒப்புக்கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களுடைய சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில்தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.

நான், "அவர்கள் நம்மிடம், 'நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை தவாஃப் செய்வோம்' என்று சொல்லவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்,(சொன்னார்கள்.) ஆனால், 'நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்' என்று உங்களிடம் சொன்னார்களா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், "நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத் தான் போகிறீர்கள்" என்று கூறினார்கள்.


நூல்: புகாரி (2731)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:07 am

மூன்றாவது நிபந்தனை:

இரு தரப்பினரும் தங்களின் மற்ற‌ கோத்திரத்தாருடன் சமாதான உடன்படிக்கை செய்துக் கொள்ளலாம். அதாவது, குறைஷியரின் நண்பர்களை முஸ்லிம்கள் எதிர்ப்பது கூடாது. அவ்வாறே முஸ்லிம்களின் நண்பர்களையும் குறைஷியர் தாக்கக் கூடாது.

"முஹம்மதின் உடன்படிக்கையில் சேர்ந்துக்கொள்ள விரும்புவோர் சேர்ந்து கொள்ளலாம்; குறைஷிகளின் உடன்படிக்கையில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் அவ்வாறு சேர்ந்து கொள்ளலாம்" என்ற நிபந்தனையை எழுதியவுடனே 'குஸாஆ' கிளையினர் நபி(ஸல்)அவர்களின் உடன்படிக்கையில் வந்து இணைந்துக் கொண்டனர். பனூபக்ர் கிளையினர் குறைஷிகளின் உடன்படிக்கையின் கீழ் இணைந்து கொண்டனர்.


அறிவிப்பவர்கள்: மிஸ்வர்(ரலி), மர்வான்(ரலி); நூல்: அஹ்மத் 18152


நான்காவது நிபந்தனை:

அடுத்த வருடம் உம்ராவுக்கு வரும்போது நிராயுதபாணிகளாக மக்காவுக்கு வந்து குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே, அதாவது மூன்று தினங்கள் மட்டும் தங்கியிருக்கலாம் என்பதும் நிபந்தனைகளில் ஒன்றாகும்.


"வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' என்னும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

நூல்: புகாரி (2701)

ஐந்தாவது நிபந்தனை:

பத்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம்


மக்கள் அமைதியாக வாழ்வதற்காக (அடுத்த) பத்து ஆண்டுகளில் (இரு தரப்பினருக்கும் இடையில்) போர் இல்லை என்று உடன்படிக்கை ஏற்பட்டது.


அறிவிப்பவர்கள்: மிஸ்வர்(ரலி), மர்வான்(ரலி); நூல்: அபூதாவூத் (2385)


இந்த நிபந்தனைகளை உள்ளடக்கிய ஒப்பந்தம் நபித்தோழர்களின் மனங்களை மிகவும் பாதிக்கச்செய்தது. காரணம்,

* சங்கிலியில் பிணைக்கப்பட்டு, கொடூரமான‌ சித்ரவதைகளுக்கு தினம் தினம் ஆளாகி வந்த முஸ்லிமான சகோதரர் அபூஜன்தல், தங்கள் கண் முன்னால் மக்கத்து நிராகரிப்பவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட கொடுமை!

* ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் நபி(ஸல்)அவர்கள் மிகவும் இறங்கிப்போன விதம்!

* குறைஷிகள் ஒவ்வொரு நிபந்தனையிலும் ஏறுக்கு மாறாக, முஸ்லிம்களுக்கு பாதகமாக அமையும் நிபந்தனைகளை விதித்தது!

இவை அத்தனைக்கும் அண்ணல் நபி(ஸ‌ல்)அவர்களின் சமாதான சொல்லுக்கு இணங்கி அவர்களுக்கு கட்டுப்படவேண்டும் என்பதற்காகவே, அந்த அநியாயமான நிபந்தனைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து குரல் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் நபித்தோழர்களை உறைய வைத்தது!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:08 am

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை 1

ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிபந்தனைகளிலும் நபி(ஸல்)அவர்கள் மிகவும் இறங்கிப் போகிறார்கள். அண்ணல் நபி(ஸ‌ல்)அவர்களின் சமாதான சொல்லுக்கு இணங்கவேண்டும் என்பதற்காகவே, மக்கா நிராகரிப்பாளர்களின் கெளரவப் பிரச்சனை காரணமாக விதிக்கப்பட்ட‌ நிபந்தனைகளில் உள்ள‌ நியாயமற்ற மூன்று நிபந்தனைகளையும் திருப்தியின்றியே ஏற்றுக்கொள்கிறார்கள் நபித்தோழர்கள்! நீண்ட காலப் பயிற்சியின் பலனாக, இறைவனுக்கும் இறைத் தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட்டு வாழும் மனப்பக்குவத்தை அடைந்திருந்த‌ நபித்தோழர்கள், புகழ்பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையைச் செய்துக்கொண்டு அந்த ஆண்டு உம்ரா செய்யாமலேயே நபி(ஸல்)அவர்களோடு மதீனா திரும்புகிறார்கள்.

நபித்தோழர்கள் அனைவரும் இது தோல்விதான் என்று எண்ணிக்கொண்டு திரும்பும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா அதை "வெற்றி" என்று கூறி, ஒரு வெற்றி அத்தியாயத்தையே அருளுகிறான்.

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். (அல்குர்ஆன் 48:1-3)

இந்த அத்தியாயத்தை நபி(ஸல்)அவர்கள் உமர்(ரலி)அவர்களிடம் ஓதிக்காட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்!

அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்கள்:

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி)கூறினார்கள், "நாங்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது நபி(ஸல்)அவர்களுடன் இருந்தோம். போர் புரிவது உசிதமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர் அவர்கள் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். உமர் அவர்கள், 'போரில் கொலையுண்டு விடும்போது நமது வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்)அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், 'அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போகவேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பி விடுவதா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான்' என்று பதிலளித்தார்கள்.

உமர்(ரலி)அவர்கள் அபூபக்ர்(ரலி)அவர்களிடம் சென்று நபி(ஸல்)அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூபக்ர் அவர்கள், 'அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்' என்று கூறினார்கள்.

அப்போது "அல் ஃபத்ஹ்" ("உமக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்து விட்டோம்" என்று தொடங்கும்) அத்தியாயம் அருளப்பட்டது. அதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் உமருக்கு இறுதி வரை ஓதிக் காட்டினார்கள். அப்போது உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! (அப்படியானால்)அது வெற்றிதானா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்)அவர்கள், 'ஆம் (வெற்றி தான்)' என்று பதிலளித்தார்கள். நூல்:புகாரி (3182)

நபி(ஸல்)அவர்கள் கூறியது போன்று ஹுதைபிய்யா உடன்படிக்கை எப்படியெல்லாம் வெற்றியாக அமைந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

உம்ரத்துல் களா

ஒப்பந்த நிபந்தனைப்படி நபி(ஸல்)அவர்கள் அடுத்த ஆண்டு, அதாவது ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு துல்கஃஅதா மாதத்தில், ஹுதைபிய்யாவில் விட்ட உம்ராவை களாச் செய்தார்கள்.

குறைஷிகளிடம் செய்துக் கொண்ட சமாதான ஒப்பந்தத்தின்படியே அடுத்த ஆண்டு உம்ரா செய்ய நாடி, மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து)விட்ட போது, குறைஷிகள் நபி(ஸல்)அவர்களை (மக்காவை விட்டு)வெளியேறும்படி உத்தரவிட, நபி(ஸல்)அவர்களும் (நிபந்தனைப்படி) வெளியேறிவிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்: புகாரி (4252)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் ஒப்பந்த விதிகளுக்குக் கொஞ்சமும் மாறு செய்யாமல் மிகக் கண்ணியமான முறையில் தமது உம்ராவை நிறைவேற்றி விட்டு, மூன்று நாட்களில் திரும்பச் சென்றார்கள்.

நூல்: புகாரி (2701)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:09 am

நபி(ஸல்)அவர்களுக்கு உண்மையில் இது மகத்தான வெற்றியாகும். "கஃஅபா எங்கள் கைவசம் உள்ளது; இங்கு முஹம்மது வருவதற்கு உரிமை கிடையாது" என்று வீராப்பு விட்டுக் கொண்டிருந்தவர்களிடம், தங்களுடைய உரிமையை நிலைநாட்டிவிட்டுப் போய்விட்டார்கள் அண்ணலெம் பெருமானார்(ஸல்)! இனிமேல் எப்போதும் ஹஜ் செய்யலாம், உம்ரா செய்யலாம் என்பதையும் நிலைநாட்டினார்கள். இது நபி(ஸல்)அவர்களுக்கு ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த முதல் வெற்றியாகும். ஆக, க‌ஃஅபா ஆலயத்திற்குள் வரவிடாமல் தடுத்திருந்ததன் மூலம், தாங்கள் சாதித்து விட்டதாக‌ குறைஷிகள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த‌ ஒரே நிபந்தனையும் அவர்களுக்கு தோல்வியாகவே அமைந்தது.

மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிளையினர் நபி(ஸல்)அவர்களுடனோ, அல்லது குறைஷிகளுடனோ இணைந்துக் கொள்ளலாம் என்பது ஒப்பந்த நிபந்தனைகளில் ஒன்று என்பதை முந்திய தொடரில் பார்த்தோம். இந்த நிபந்தனையும் குறைஷிகளுக்குச் சாதகமாக அமையவில்லை. இந்த நிபந்தனைப்படி பனூகுஸாஆ கிளையினர் நபி(ஸல்)அவர்களுடன் இணைந்தனர். பனூபக்ர் கிளையினர் குறைஷிகளுடன் இணைந்தனர்.

இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் இணைந்த பிறகு பனூபக்ர் குலத்தைச் சேர்ந்த நவ்ஃபல் இப்னு முஆவியா என்பவர், பனூகுஸாஆ குலத்தைச் சேர்ந்த முனப்பிஹ் என்பவரை ஒரு நீர் நிலை தொடர்பான தகராறில் கொன்று விட்டார். இது இரு குலத்தாருக்கிடையில் மோதலாக அமைந்தது. இச்சமயத்தில் மக்கா குறைஷிகள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை மீறி, பனூபக்ர் குலத்தாருக்கு ஆயுத உதவி செய்ததுடன் அவர்களுடன் சேர்ந்து, இரவு நேரங்களில் பனூகுஸாஆ குலத்தாரைத் தாக்கியும் வந்தனர்.

இதனால் பனூகுஸாஆ குலத்தார் நபி(ஸல்)அவர்களிடம் உதவி கேட்டு வந்தனர். எனவே நபி(ஸல்)அவர்கள் குறைஷிகளைத் தட்டிக்கேட்க தமது தோழர்களைத் தயார்படுத்தினார்கள். (ஆதாரம்: ஃபத்ஹுல் பாரி)

இந்த ஒப்பந்தமும் குறைஷிகளுக்குப் பாதகமாக அமைந்தது மட்டுமல்லாமல், இதுதான் வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் வெற்றியான மக்கா வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது!


இதைத் தான் எல்லாம் வல்ல அல்லாஹ், "உமக்குத் தெளிவான ஒரு வெற்றியை அளித்தோம்" என்று 48:1 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:10 am

ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின்போது நிராகரிப்பளர்களின் நியாயமற்ற நிபந்தனைகளைக் கண்டு கொதித்துப் போயிருந்த உமர்(ரலி)அவர்களிடம் இந்த அத்தியாயத்தைதான் நபி(ஸல்)அவர்கள் மிகப் பொருத்தமாகவே ஓதிக் காட்டினார்கள். பின்னால் வெற்றியாக அமைந்த இந்த ஒப்பந்தம் நடைபெற்ற சமயம், நபி(ஸல்)அவர்களிடம் நாம் கடுமையாக பேசிவிட்டோமே என்று வருந்தி உமர்(ரலி)அவர்கள் பல வணக்கங்களைச் செய்கிறார்கள்.

நான் இப்படி (அதிருப்தியுடன் நபியவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்களைப் புரிந்தேன்.


அறிவிப்பவர்: உமர்(ரலி); நூல்: புகாரி(2731)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்த பிறகு, (சமாதான ஒப்பந்தம் அமுலில் இருந்த காலக்கட்டத்தில்),

குறைஷிகளில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி(ஸல்)அவர்களிடம் வந்து), "நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்" என்று கேட்டனர். உடனே, அவரை (ஒப்பந்தப்படி)அந்த இருவரிடமும் நபி(ஸல்)அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம்முடைய பேரீச்சம் பழங்களைத் தின்றுக் கொண்டே (ஒரு மரத் தடியில்) தங்கினார்கள்.

அபூபஸீர்(ரலி)அவர்கள் அவ்விரு நபர்களில் ஒருவரிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்" என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்" என்று சொன்னார்.

அபூபஸீர் அவர்கள், "எனக்குக் காட்டு. அதை நான் பார்க்கிறேன்" என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்று விட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்று விட்டார். ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அவரைக் கண்டபோது, "இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்" என்று கூறினார்கள்.

அவர் நபி(ஸல்)அவர்களிடம் சென்று நின்றபோது, "அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். (நீங்கள் அபூபஸீரைத் தடுக்கா விட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்" என்று கூறினார்.

உடனே அபூபஸீர் அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பிவிட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான்" என்று கூறினார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by நண்பன் Fri Jan 21, 2011 3:11 am

நபி(ஸல்)அவர்கள், "கேடுண்டாகட்டும்! உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த்தீயை மறுபடியும் மூட்டி விடுவார்" என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர் அவர்கள், நபி(ஸல்)அவர்கள் தம்மை (ஒப்பந்தப்படி மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள்.

சுஹைலின் மகன் அபூ ஜந்தல்(ரலி)அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டார்கள். பிறகு, குறைஷிகளில் எவர் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர் (தப்பிச் சென்று) அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். இறுதியில், (இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் அனைவரும் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டுவிட்டனர்.

நூல்:புகாரி (2731)

ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து, அவர்களைக் கொன்று அவர்களுடைய செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப் பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, (அபூபஸீரும் அபூஜன்தலும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் கேட்டுத் தூதனுப்பினார்கள்.

மேலும், "குறைஷிகளில் எவர் முஸ்லிமாக நபி (ஸல்) அவர்களிடம் வருகின்றாரோ அவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்)" என்று கூறிவிட்டனர்.

அப்போது தான் அல்லாஹ், "மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்தப் பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்....... (ஏக இறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை, மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்திய போது, அல்லாஹ் தனது நிம்மதியைத் தனது தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். (இறை) அச்சத்திற்கான வார்த்தையை அவர்கள் பற்றிப் பிடிக்குமாறு செய்தான். அவர்கள் அதற்கு உரிமை படைத்து, தகுதியுடையோராகவும் இருந்தனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்" என்னும் (48:24-26) வசனத்தை அருளினான்.


நூல்: புகாரி (2731, 2732)

மக்காவிலிருந்து முஸ்லிமாக யார் மதீனாவுக்கு வந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற குறைஷிகளின் அடுத்த‌ நிபந்தனையும் சமாதியாகிப் போனது. தாங்கள் போட்ட‌ நிபந்தனையை தாங்களே முன்வந்து மாற்றி, மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் முஸ்லிம்களைத் திருப்பி அனுப்பவேண்டாம் என்று கூறும‌ளவுக்கு நிலைமை தலைகீழானது. இந்த அடிப்படையில் இது முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது! எல்லாப் புகழும் வல்ல‌ அல்லாஹ்வுக்கே!!

நன்றி : http://payanikkumpaathai.blogspot.com


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை Empty Re: இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum