சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Khan11

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 6:32

‘தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்’ இதழில் தொடர்ச்சியாக ஐந்து மாதங்களாக, மயிலாடுதுரை பேராசிரியர் செயராமன் அவர்கள் ‘இனவியல்: 

ஆரியர்-திராவிடர்-தமிழர்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார் அதில், ‘இந்திய அரசியலில் செயற்படு சக்திகளாக விளங்கிவரும் ஆரியர், திராவிடர், தமிழர் குறித்த கோட்பாடுகள் மற்றும் வரையறைகளை வரலாற்றியல் துணை யுடன் அளிக்கும் முயற்சியே’ இக்கட்டுரை என்கிறார்.

பிறகு அவர் சொல்கிறார், ‘20 ஆம் நூற்றாண்டில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நிலப்பகுதிகளை இணைத்து ஒரு விடுதலை பெற்ற தேசத்தை உருவாக்கி விட தமிழகத் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் இயங்கினர். குறைபாடுள்ள அக்கோரிக்கை தமிழகத்தின் கோரிக்கையாக மட்டுமே இருந்து வந்தது ’.

பேராசிரியர் செயராமன் கூறும் ‘வரலாற்றியல் துணை’ என்பது தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நிலப்பகுதிகளை இணைத்த ஒரு விடுதலை பெற்ற தேசத்தை உருவாக்கிட தந்தை பெரியார் இயங்கினார் என்பது. 

பெரியார் எப்போதாவது இந்த வகையான பரப்பளவைப் பற்றி கூறியிருக்கிறாரா? பெரியாரிடமிருந்து பிரிந்து வந்த பிறகு அறிஞர் அண்ணா கூறிக் கொண்டிருந்ததை பெரியார் கூறி வந்தார் என்று கூறுவதுதான் வரலாற்றியல் துணையா?

‘திராவிட நாடு பிரிவினை விளக்கம்’ என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் பேசிய பேச்சு குடியரசு 2.12.1944 இதழில் வெளிவந்திருக்கிறது. அதில் பெரியார் அவர்கள்,

‘மற்றொரு விஷயத்தை இங்கு மறுபடியும் தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன்’ என்று தொடங்கி, ‘திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சனையே ஒழிய அது ஒரு அரசியல் பிரச்சனை அல்ல. தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது போலவே சுரண்டல் ஒழிய வேண்டும் என்கிறோம். 

அந்நியனுக்கு நம் நாடு சந்தை யாய் இருக்கப்படக் கூடாது என்பது போலவே, அந்நிய மாகாணத்தானுக்கு நம் நாடு சந்தையாய் இருக்கக் கூடாது என்கிறோம். வாழ்க்கையில் பகுத்தறிவுவாதியாய், சீர்திருத்தவாதியாய் இருப்பது போலவே மதத்தில் பகுத்தறிவுவாதியாய், சீர்திருத்தவாதியாய் இருக்க வேண்டும் என்கிறோம். இவைகளில் அரசியல் என்ன இருக்கிறது? நம் அரசியல் நம் நாட்டைப் பொறுத்ததாக மட்டும், நம் நாட்டு மக்களைப் பொறுத்ததாக மட்டும் இருக்க வேண்டும் என்கிறோம். 

நம் திராவிடப் பிரச்சனையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இருப்பதா போவதா என்கின்ற பிரச்சனையோ பிரிட்டனுக்கு எவ்வளவு உரிமை, நமக்கு எப்படிப்பட்ட உரிமை என்கின்ற பேச்சோ கூட கிடையாது. அவை முதலியவை தனிப்பட்ட வேறு விஷயமாகும். அது திராவிட நாடு பெற்றதும் கிளம்பும் அந்நியர் ஆதிக்கமும், அந்நியர் தயவு, உதவியும் கூட தேவையில்லாமலும் தனித்து இயங்க நாம் வேறு முயற்சி செய்வோம்.

அதை வேண்டுமானால் அரசியல் என்று சொல்லிக் கொள்ளட்டும். அதுவும் பிரிட்டிஷ் ஆதிக்கம் மாத்திரம் கூடாது என்பதோடு நம் அரசியல் தீர்ந்து விடாது. பிரிட்டன், அமெரிக்கன், ஜெர்மனியன், ஜப்பானியன், ஆர்ய வர்த்தம், காந்தி நேரு கம்பெனி ஆதிக்கம் முதலிய ஒன்றுமே இல்லாத நம் (திராவிடர் ) ஆதிக்கமே இருக்க வேண்டும் என்பது நம் அரசியலாகும். நாம் கேட்கும் திராவிட நாடு, நம்மை இப்படிப்பட்ட சுதந்திரத்துக்கு, முழு முழு சுயேச்சைக்குக் கொண்டு போய் விடும். 

ஆதலால், திராவிட நாடு பிரிவினை இன்று அரசியலாகாது. திராவிட நாடு பிரிவினை என்று நாம் என்ன சொல்லுகிறோம் என்றால், சென்னை மாகாணம் தான் இன்று திராவிட நாட்டு விஸ்தீரண அளவு, மற்ற மாகாணத்தான் திராவிட நாட்டிற்குள் காலடி வைப்பதனால் அனுமதி சீட்டு, 

பாஸ்போர்ட்டு வாங்கிக் கொண்டு வர வேண்டும், மற்ற மாகாண சரக்கு சுங்கம் கொடுத்து விட்டு அதுவும் நாம் அனுமதித்தால்தான் திராவிட நாட்டிற்குள் வர வேண்டும், விஸ்தீரணம் கூடுவதும் குறைவதும் நம் நாட்டின் சவுகரியத்தையும் இஷ்டத்தையும் பொருத்தது’

என்றெல்லாம் குறிப்பிட்ட பெரியார் அவர்கள், மீண்டும் கூறுகிறார்,

‘முஸ்லிம்கள், ஆதிதிராவிடர்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள் ஆகியவர்கள் அவர்களும் திராவிடர்களே ஆனதால் அவரவர்கள் சமயம், ஆத்மார்த்தம் என்பவற்றின் உணர்ச்சி இன்றுள்ளது போலவே அவரவர்கள் இஷ்டப்படி இருக்கும். ஆரியர்கள் நிலையும் அது போலவே மற்றவர்களுக்கு, நட்டமும், கேடும், இழிவும் இருப்பதற்கு இல்லாத நிலையில் சம உரிமையோடிருக்கும்’.

1944 இல் சேலம் மாநாட்டில் தென்னிந்திய நல உரிமை கட்சி பெயர் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு மேற்கண்ட விளக்கத்தை பெரியார் கூறியுள்ளார். திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சனை என்றும், 

ஆங்கிலேயர் மட்டுமல்ல எந்த சக்திகளின் ஆதிக்கமும் இருக்கக் கூடாது என்பதையும் சென்னை மகாணம் தான் இன்று திராவிட நாட்டு விஸ்தீரண அளவு என்பதையும் என்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் பேராசிரியர் செயராமன் வரலாற்றியல் துணையுடன் இக் கட்டுரை என்று தொடங்கி புராணக் கதைகளையும் ஆரியர் சார்பான நூலாசிரியர்களின் நூல்களையும் சான்றாகக் கொண்டு எழுதியுள்ளார்.

திராவிட நாடு என்பதை பற்றி 1944 இலிலேயே சர்ச்சைகளை கிளப்பி விட்டவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பெரியார் அவர்கள் குடியரசு தலையங்கம் 25.11.1944 இல்,

திராவிட நாடு என்பது பற்றி பலர் பலவிதமான குறை கூறுகிறார்கள். நம்மவர்கள் என்று சொல்லிக் கொண்டும் சிலர் குறை கூறுகிறார்கள். அதில் சிலர் அறியாமல் சொல்லலாம். சிலர் யோக்கிய பொறுப்பில்லாமல் விஷமத்தனத்துக்கு ஆகவும் சொல்லுகிறார்கள். அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய காலம் தீர்ந்து விட்டது

என்று கூறிய பெரியார் ‘மெயில் ’ நாளிதழின் தலையங்கத்தை,

திராவிட நாடு என்பது பூரண சுயேட்சை கேட்பதாகும். அதில் சிறிது குறைந்தாலும் ஒப்புக் கொள்ள முடியாத மாதிரி அந்தப் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. பாகிஸ்தான் விஷயத்தில் தோழர் ஜின்னா அவர்கள் சற்று இறங்கினாலும் இறங்கலாம். ஆனால் தோழர் இராமசாமி சிறிதும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் ஆந்திராக் காரர்கள் இதை ஒப்புக் கொள்ளுகிறார்களா என்று யாராவது கேட்டால் அவர்களும் திராவிடர்களே யாதலால் அவர்களுக்கு ஆகவும்தான் நான் திராவிட நாடு கேட்கின்றேன் என்றும் பதில் சொல்லி அடக்கிவிடுகிறார் என்றும் எல்லை புரியவில்லை, விஷயம் புரியவில்லை என்று சொல்லுகிறவர்களுக்கும் 

தோழர் இராமசாமி சென்னை மகாணத்தை அதன் எல்லை வரம்புக் கோட்டிற்கு உட்பட்ட பாகத்தைத் திராவிட நாடு என்றும் அதன் திட்டம் அதன் சம்பந்தமாக கவர்னர், கவர்னர் ஜெனரல், மத்திய அரசாங்கத்தார் ஆகியவர்கள் சம்மந்தமில்லாமல் இங்கிலாந்தில் உள்ள அரசரின் பிரதிநிதிகள் கவனிப்பதில் இருக்குமென்றும் சொல்லிவிட்டார்

என்றும் மெயில் எழுதியுள்ளதை சுட்டிக் காட்டுகிறார். 1939 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் திராவிட நாடு பற்றி பேசியதை கேலி செய்து 1939 நவம்பர் 20 ஆம் நாள் எழுதிய ‘மெயில்’ இப்போது திராவிட நாடு கோரிக்கையை நியாயப் படுத்தி எழுதியதற்காகத் தான் மேற்கோள் காட்டுவதாகவும் பெரியார் குறிப்பிடுகிறார்.

மேலும் தினசரி என்னும் நாளிதழ் எழுதிய 'எதற்காக திராவிடஸ்தான்' என்னும் தலையங்கத்தை மேற்கோள் காட்டுகிறார் பெரியார்.

‘அதில், திராவிடஸ்தான் கேட்பதை கேலி செய்யக் கூடாது என்று மதராஸ் மெயில் உபதேசம் செய்கிறது. ... நாய்க்கர் குறிப்பிடும் (திராவிடஸ்தான் எல்லைப்) பிரதேசங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு நாடுகளும் சேர்ந்திருக்கினறன. அந்த நாட்டார் திராவிடஸ்தான் ஆதரிக்கிறார்களா என்று கேட்கிறது’

(அப்பாடா! வரலாற்றியல் துணை பேராசிரியர் செயராமனுக்குக் கிடைத்து விட்டது. - கவி)

‘அதற்கு பதில் மெயிலிலேயே இருக்கிறது. அதாவது அந்த நாட்டாரும் திராவிடர்களேயாதலால் திராவிடர்களுக்காக கேட்கப்படும் காரியங்களுக்கு திராவிடர்கள் எல்லோருமே சேர்ந்து கேட்க வேண்டும் என்பது ஏமாற்றுவதற்காக சொல்லப்படும் காரணமாகுமே தவிர அதில் நியாயம் இருக்க முடியாதென்பதாகும். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் எல்லா முஸ்லிம்களும் சேர்ந்து கேட்கவில்லையே என்று சொன்ன காந்தியார் ஜின்னா சாயுபு வீட்டிற்கு ஏன் போனார். 

எல்லோரும் சேர்ந்து கேட்டால்தான் ஒப்புவோம் என்று சொன்ன ஆச்சாரியார் தானாகவே தனிமையாகவே ஜின்னா சாயுபு வீட்டிற்கு ஏன் போனார்? ஒரு சமுதாயத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ நலனைத் தேட ஒரு மனிதன் முயற்சித்தால் அது எந்த சட்டப்படியும் தப்பாகி விடாது. அந்த நாட்டை அந்த இனத்தைச் சேர்ந்த எந்த தனி மனிதனுக்கும் உரிமையுண்டு’.

‘அன்றியும் எல்லோரும் எப்படிக் கேட்க முடியும்? முதலாவது இந்த திராவிடர்கள் 100- க்கு 90 பேர் எழுத்து வாசனை அற்ற தற்குறிகள். இரண்டாவது 100-க்கு 90 பேர்கள் தங்கள் இனத்தின் பிறப்பு, வளர்ப்பு அறியாதவர்களும், அல்லாததையும், இல்லாததையும் தங்களுடையதென்று கருதிக் கொண்டிருக்கிற பகுத்தறிவு இல்லாத மூட நம்பிக்கை மக்களும் ஆவார்கள். இந்த இலட்சணத்தில் இவர்களில் 100-க்கு 80 பேர் சுயநலத்திற்கு எதையும் விட்டுவிடும்படி பயிற்றுவிக்கப்பட்டவர்கள். 

இவர்கள் யாவரும் சேர்ந்து அல்லது மெஜாரிட்டியார் சேர்ந்து ஒரு நல்ல நேரான காரியம் செய்வதென்றால், அமாவாசையன்று சந்திரகிரகணம் இருக்க வேண்டும் என்று கோருவது போலவேயாகும்?’

‘இவ்வளவு தர்க்கம் ஏன்? எந்த ஆந்திரா, கர்னாடகா, மலையாள மக்களாவது இந்த 5 வருஷ காலத்தில் வெளியில் வந்து எங்களுக்குத் திராவிட நாடு வேண்டாம் என்று சொன்னார்களா? அன்றியும் ஜஸ்டிஸ் கட்சி என்பது சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு நாட்டின் பிரதிநிதித்துவம் வாய்ந்தது என்பதை ‘தினசரி’யோ மற்றவர்களோ மறுக்கிறார்களா? ’

என்றும் எதிர் கேள்வி கேட்ட பெரியாருக்கு இதுவரை எவரும் விடையளிக்கவில்லை.

‘திராவிடர் கழகத் தொண்டு’ என்னும் தலைப்பில் குடியரசு 7.10.1944 இதழில் தலையங்கம் எழுதிய பெரியார்,

மற்றொரு மகிழ்ச்சிக்கு உரிய சேதி என்னவென்றால் சேலம் தீர்மானத்தை பற்றி நம் எதிரிகளும், நம் துரோகிகளும் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாய் அவற்றைப் பத்திரிகைகளில் கண்ட வெளி மாகாணத்தார் பஞ்சாப், லக்னோ முதலிய மாகாணங்களில் உள்ள சில தோழர்களால் தங்கள் மாகாணங்களுக்கும் வந்து கழகங்கள் அமைக்கும்படியும் திராவிடர் கழகத்தோடு சேர்த்துக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திருவாங்கூர், கொச்சி முதலிய சமஸ்தானங்களிலிருந்தும் தாங்களும் திராவிடர்கள் என்றும் தங்களையும் சேர்த்துக் கொண்டு வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கடிதங்கள் வந்திருப்பதாகவும் தெரிகிறது.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மத்திய மகாணத்தையும் மகாராஷ்டரர் உள்ள மற்ற பாகத்தையும் சேர்த்துக் கொண்டால் நலமாக இருக்குமென்றும் அவர்கள் தயாராய் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தது வாசகர்கள் அறிந்ததேயாகும்.

அய்க்கிய மாகாண டாக்டர் மூஞ்சே அவர்கள் திராவிடர் கழகத்தின் சமயம், சமுதாயம் ஆகியவை சம்பந்தமான எல்லாத் தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்வதாகவும், வேண்டுமானால் இந்து மகாசபை மகாநாட்டில் வைத்து ஏற்றுக் கொள்ளச் செய்வதாகவும் இந்தியா பூராவுக்கும் திராவிடர் கழகம் வேலை செய்ய தாம் ஒத்துழைப்பதாகவும் கூறி இருக்கிறதும் குறிப்பிடத் தக்கதாகும்.

இவைகளையயல்லாம் விட மற்றொரு அதிசயம் என்னவென்றால் தோழர் எம்.என்.ராய் அவர்கள் சுமார் 2 வருஷங்களுக்கு முன்பாகவே திராவிடர் கழக சமய சமுதாய தீர்மானங்களைப் பாராட்டி ஏற்று தனது கட்சியுடன் இக் கொள்கைகளையும் திராவிட நாடு பிரிவினையையும் சேர்த்துக் கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொன்னதோடு, பல இடங்களில் அந்தப்படி செய்தும் இருக்கிறார். ஆகவே நமது கட்சி நமது கொள்கை நமது திட்டம் ஆகியவைகள் இன்று எல்லா இந்தியாவிலுள்ள மற்ற முக்கிய கட்சிகள் கவனிக்கவும், பின்பற்றவும், பங்கு கொள்ள ஆசைப்படவும் செய்திருக்கிறது என்பதற்கு இது போதுமான ஆதாரங்களாகும்.

பெரியார் மேற்கூறிய செய்திகளை கூர்ந்து நோக்கும்போது, இப்போது பேராசிரியர் செயராமன், பெ.மணியரசன், பெங்களுர் குணா போன்றவர்கள் கிளப்புகின்ற சர்ச்சைகளெல்லாம் ஏற்கனவே இவர்களின் முன்னோடிகள் எடுத்த வாந்திகள் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

1913 இல் தொடங்கி ஆந்திரர்கள் தனி மகாணம் கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையே தெலுங்கானா போராட்டமும் அப்போதும் நடந்தது. இப்போதும் தொடர்கிறது. எனவே எல்லாத் தெலுங்கர்களும் ஆந்திர மாகாணம் கேட்க வில்லை என்று இவர்கள் வாதாடுவார்களா? இன்றும் தமிழர்களில் பெரும் பான்மையோர் ஆங்கில வழிப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதும், தமிழ்ப் புத்தாண்டாக சித்திரைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதையும் கருத்தில் கொண்டு இவர்கள் (மணியரசன் கும்பல்கள்) தமிழர்கள் தமிழ் வழிக் கல்வியையும் தைப் புத்தாண்டையும் விரும்பவில்லை என்று வாதாடுவார்களா?

தமிழர் திருமணங்கள் பார்ப்பனர்கள் கொண்டும் வடமொழி மந்திரங்கள் கொண்டும் நடைபெறுவதை இவர்கள் இதுதான் தமிழர்கள் எல்லாரும் விரும்புகிறார்கள். தமிழ்முறை திருமணங்களுக்கு தமிழர்கள் விரும்பவில்லை என்று கூறுவார்களா?

காவிரிப் பிரச்சனைப் போராட்டங்களுக்கு காவிரி டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்றும் முல்லைப் பெரியாறு போராட்டங்களுக்கு தென்மாவட்ட மக்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்றும் தமிழகத்தில் உள்ள எல்லாத் தமிழர்களும் போராட வில்லையென்றும் இவர்கள் வாதாடுகிறார்களா?

இப்பொழுது கூட அணு உலையை எதிர்த்து கூடங்குளம் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். கடந்த 9 மாதங்களாக தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாண்டி அப்போராட்டத்தை தமிழ் மக்கள் நடத்தவில்லையே?

அப்படியயன்றால் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு மக்களிடம் ஆதரவில்லை என்று கூறி தோழர் மணியரசன் போன்றவர்கள் அணுஉலையை ஆதரிப்பார்களா?

(தொடரும்)

- கவி
keettru thalam
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty Re: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 6:36

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 2
-------------------------------------

‘பெரியாருக்குப் பின் பெரியார்’ (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 29, 2010) என்ற கட்டுரையில் தோழர் மணியரசன் அவர்கள்,

‘தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் முனைவர் த. செயராமன் எழுதிவரும் இனவியல்: ஆரியர் -திராவிடர் - தமிழர் என்ற ஆய்வுக் கட்டுரைத் தொடரும், ம.செந்தமிழன் எழுதிவரும் திராவிடம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் வாசகர்களின் கவனத்தைக் கூடுதலாக ஈர்த்துள்ளன.

இவ்விருவரின் கட்டுரைகளைப் பலர் உற்சாகத்தோடு வரவேற்கிறார்கள். அதே வேளை இவற்றால் பெரியாரியல் தோழர்கள் சிலர் வருத்தமும் எரிச்சலும் அடைந்துள்ளனர்.....

திராவிடம் குறித்து இவ்விருவரும் எழுதி வரும் கட்டுரைகளில் உள்ள சாரமான கருத்துகள் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சிக்கு ஏற்புடையவைதாம். இத் திறனாய்வுகள் இறுதியில் பெரியாரை மறுப்பதில்தான் போய் முடியும் என்று மேலே குறிப்பிட்ட பெரியாரியல் தோழர்கள் சிலர் கருதுகிறார்கள்’.

தான் பெரியார் பற்றி செய்யப்போகும் அவதூறுப் பரப்புரைக்கு இப்படி முன்னுரையோடு தோழர் பெ.மணியரசன் தொடங்குகிறார். அவர் கட்டுரைக்குள் போகுமுன் சில கேள்விகளுக்கு விடை காண முயல்வோம். முனைவர் ஒரு கருத்தை முன் வைத்து பெ.மணியரசன் அவர்கள் ஆசிரியராக உள்ள ‘தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்’ இதழில் தொடர் எழுதுகிறார். அதே கருத்தை முன்வைத்து தோழர் ம.செந்தமிழன் அவர்களும் எழுதுகிறார். இது என்ன இதழியல் தர்மம்? சரி. தோழர் ம.செந்தமிழன் என்ன அவ்வளவு பெரிய ஆராய்ச்சியாளரா? அவர் பெ.மணியரசனின் மகன், குமுதத்தில் பணியாற்றினார் என்பதைத் தவிர அவருக்கு என்ன தகுதி? இதழ்களிலேயே கழிசடை குமுதம். இவ்விதழில் தனது மகனை சேர்த்துவிட்ட அப்பா மணியரசன். போகட்டும்.

கோபிச்செட்டிப்பாளையம் வழக்கறிஞர் சிந்தனைச் செம்மல் அவர்கள் அண்ணாவிடம் மிகவும் நெருக்கமானவர். ‘திருக்குறளின் உண்மைப் பொருள் ’ என்ற தலைப்பில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் திருக்குறளுக்கு உரை கண்டவர். தமிழக அரசின் திருக்குறள் விருது பெற்றவர். அவர் ‘மலர்க மாநில சுயாட்சி ’என்ற நூலை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதினார். அதைக் கண்ட கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது அக்கா மகன் முரசொலி மாறன் அவர்களை வைத்து மாநில சுயாட்சி என்ற நூலை எழுதச் சொன்னார். அது தான் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில சுயாட்சி கொள்கை விளக்க ஆவணமாக உள்ளது.

கலைஞர் கருணாநிதி செய்த செயலுக்கும் தோழர் பெ.மணியரசன் தன் மகன் ம.செந்தமிழன் அவர்களை வைத்து எழுதச் சொன்னதற்கும் ஏதும் வேறுபாடு உள்ளதா? சரி. இப்போது கட்டுரைக்கு வருவோம்.

‘இத்திறனாய்வுகள் இறுதியில் பெரியாரை மறுப்பதில் தான் போய் முடியும் ’ என்று மேலே குறிப்பிட்ட பெரியாரியல் தோழர்கள் சிலர் கருதுகிறார்கள் என்று தோழர் பெ.ம. அவர்கள் எழுதுகிறார். இந்த ஆய்வுகள் உண்மையான ஆய்வுகளாக இருக்கின்ற நிலையில் பெரியாரியல் தோழர்களுக்கு எந்த மனவருத்தமும் ஏற்பட வாய்ப்பில்லை. பெரியாரைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் நீங்கள் செய்கின்ற இந்த மாதிரியான ‘மொக்கை’யான ஆய்வுகள் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிப்பதிலும் நீங்கள் அம்பலப்பட்டுப் போவதிலும் தான் போய் முடிகிறது என்பது தான் பெரியாரியல் தோழர்களின் கவலை.

‘தமிழரசுக் கழகம் ’ நடத்திய ம.பொ.சி. அவர்கள் தமிழன் குரல் அக்டோபர் 1954 இதழில்,

‘திராவிட மாயையிலிருந்து விடுபட்டதாகக் கூறிக் கொண்டு மலையாளிகளின் ஆதிக்கத்தை எதிர்க்கப் புறப்பட்டிருக்கும் பெரியார் ஈ.வே.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர்-பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். அப்பொழுது தான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும்’.

இதோ பூனைக்குட்டி வெளிவந்துவிட்டது. ம.பொ.சி.யின் வழித்தோன்றல்களான பெ.ம.வும் இதைத் தான் செய்கிறார் என்பது தான் எங்கள் குற்றச்சாட்டு.

‘திராவிடர் என்றழைக்கப்பட்டவர்கள் தென்னாட்டுப் பார்ப்பனர்களே’ - தோழர் பெ.மணியரசன் தீர்ப்பு.

திராவிடர் என்பது தென்னாட்டு பார்ப்பனர்களைத் தான் குறிக்கும் என்ற முனைவரின் ஆராய்ச்சிக்கு தோழர் மணியரசன் அவர்கள்,

‘திராவிடர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வர மாட்டார்; தமிழர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வந்துவிடுவர் என்று அவராகவே(பெரியாராகவே) ஒரு போடு போட்டார். அதற்கான வரலாற்றுச் சான்று எதையும் அவர் (பெரியார்) காட்டவில்லை. இப்பொழுது முனைவர் த.செயராமன் திராவிடர் என்ற சொல் ஒரு கட்டத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவி விட்டார்’ என்று நெல்லைக் கண்ணன் பாணித் தீர்ப்பை வழங்கி விட்டார்.

பேராசிரியர் செயராமன், ‘மரபினக் கலப்பு நிகழ்ந்து கொண்டேயிருக்கும் நிலையில் இனங்களைப் பண்பாடுகளின் அடிப்படையில் அடையாளப்படுத்துவது சரியானதாக இருக்கும். அத்தகைய போக்கு 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது’ என்று தெளிவுரை கூறிய பின்னும் பெ.ம.அவர்கள் எப்படி தென்னாட்டுப் பார்ப்பனர்களைக் குறிக்கின்ற சொல் திராவிடர் என்று பொருள் கொண்டார் என்பது விளங்கவில்லை.

மேலும் தோழர் பெ.மணியரசன் அவர்கள், ‘பெரியார் தழுவி நின்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று கூறிக் கொண்டதில்லை. திராவிடர் என்ற கொச்சை சொல்லை தமிழர் மீது மட்டுமே பெரியார் திணித்தார் ’என்று கூறுகிறார்.

திராவிடர் என்ற சொல் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரைத் தழுவி நின்ற சொல்லாக பெரியார் பயன்படுத்தினார் என்று தோழர் மணியரசன் அவர்கள் கூறுவது உண்மையா? திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்து பெரியார் அவர்கள்,

‘நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்புச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன்’ என்று விளக்கிய பின் மேலும் பெரியார், ‘அவர்கள் மூவரும் (ஆந்திரர்,கன்னடர், மலையாளி- கவி) ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை என்றாலும், திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன்தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்துவிடுகிறான்’

என்று கவலையோடு விளக்கம் கூறியதற்கு இந்த போலித் தமிழ்த் தேசியவாதிகள் விடை கூற வேண்டாமா?

திராவிடன் என்றால் தென்னாட்டுப் பார்ப்பான்தான் என்றால் சோவும், சுப்பிரமணியசாமியும் தன்னை திராவிடன் என்று கூற முன்வருவார்களா? அல்லது இங்கிருக்கிற தமிழ்ப் பார்ப்பனர்கள் நாங்கள் தான் உண்மையான திராவிடர்கள் என்று கூறுவார்களா? பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் தமிழ்ப் பார்ப்பனர்களுக்காக என்று இவர்கள் வாதாடுவார்களா?

திராவிடர் என்ற சொல் மனு தர்ம சாஸ்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கப் பயன்பட்டிருக்கிறது என்பதை தோழர் அதிஅசுரன் அவர்கள் விரிவாக சான்று காட்டி விளக்கியுள்ளார்.

மேலும் வரலாற்றின்படியும் திராவிடர் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கிறது என்பதை தோழர் அதிஅசுரன் அவர்கள்,

‘சமண மதம் தமிழ்நாட்டுக்குள் வந்து, வளர்ந்து, இந்து மதத்தில் தேய்ந்து, மறைந்த வரலாற்றை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் ‘சமணமும் தமிழும்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். கிறித்து பிறப்புக்கு முன்பே தமிழ் நாட்டுக்குள் சமணம் வந்து விட்டது. ஆரம்ப காலங்களில் இந்து மதத்துக்கு எதிராகவே சமணம் இருந்தது. பார்ப்பனர்களுக்கு எதிரான, கடவுளுக்கு எதிரான மதமாகவே சமணம் இருந்தது. சமணத்தைப் பின்பற்றுவோர் தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கின்றனர். எனவே கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சமண மதத்தில் நந்திகணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என நான்கு பிரிவுகள் உண்டாயின. அந்தப் பிரிவுகளில் ஒன்றான நந்தி கணத்திலிருந்து திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் உருவானது என்று மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது (EC. Vol.V.Hassan Taluk, 131, Arsikera Tq, IEC.Vol. IV. Gundlupet Tq.27). மேலும் கி.பி. 470 ஆண்டு சமண சமயத்தவரான வச்சிர நந்தி என்பவர் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சன சாரம் என்னும் நூலில் தேவ சேனர் என்பவர் எழுதியிருக்கிறார். சமண மதத்தின் இந்த திராவிட சங்கம் மதுரையில் தான் தொடங்கப்பட்டது என்றும் கி.பி.900 வரை அந்த திராவிட சங்கத்தைச் சேர்ந்த துறவிகள் வாழ்ந்தனர் என்றும் வரலாற்றுக் குறிப்புகளை ஆதாரங்காட்டி மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார். ஆக 5 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கூட திராவிடர் என்ற சொல் ஆரியர்களுக்கு - பார்ப்பனர்களுக்கு - இந்து மதத்துக்கு எதிரான சொல்லாகவே இருந்திருக்கிறது ’ என்று விளக்குகிறார்.

பேராசிரியர் செயராமன் அவர்களே தமது கட்டுரையில்,

‘‘திராவிட’ என்ற சொல் மகாபாரத்தில் வருகிறது. அது தென்னகப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. திராவிடர் பற்றி மனு தர்மம் பேசுகிறது. மனு சாஸ்திரத்தில் (X,43,44) சாதி இறக்கம் செய்யப்பட்ட சத்திரியர்களைப் பற்றி வருகிறது. திராவிடர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்றும், பின்னர் விருசாலர்களாக (சூத்திரர்கள்) தாழ்ந்தார்கள் என்றும் திராவிடச் சத்திரியர்கள், புனித சடங்குகளை விட்டுவிட்டனர் என்றும் அதனாலேயே தாழ்ந்தார்கள் என்றும் மனு நூல் குறிப்பிடுகிறது ’

என்று திராவிடர்கள் சூத்திரர்களாக தாழ்ந்தார்கள் என்று கூறிவிட்டு திராவிட சத்திரியர்கள் யார் என்பது நாம் அறியாத ஒன்று என்று கயிறு திரிக்கிறார். பேராசிரியர் செயராமன் ஏற்கனவே தென்னாட்டுப் பார்ப்பனர் தான் திராவிடர் என்ற முடிவை மனதில் வைத்துக் கொண்டுதானே இக்கட்டுரையை எழுதத் தொடங்கினார். பின் அவருக்கு ஏன் தயக்கம்?

‘ஆதிதிராவிடர்களின் பூர்வீகச் சரித்திரம்’ என்னும் நூலில் டி. கோபாலச்செட்டியார் அவர்கள், ‘தமிழிலக்கண வித்துவான்களும் கூடத் திராவிட நாட்டிலிருந்தவர்களை மக்கள், தேவர், நரகர் என்றனர். இதில் நரகர் என்பது நாகர், மக்கள் என்பது தமிழ் மக்கள், தேவர் என்பது ஆரிய பிராமணர். நரகர் என்பது நாகர் என்கிற பூர்வ குடிகள். காடுகளிலும், தாழ்ந்த நிலங்களிலும் விளங்காத இடங்களிலும் (நரகம்) இருந்த பூர்வ குடிகளுக்கு நாகர் என்று பெயர். மேற்கூறியவைகளால் திராவிடர் என்பது ஆதிக் குடிகள் - நாகர் -தமிழர் என்கிற மூவகை ஜனங்கள் ஒன்றுபட்ட பிறகு உண்டான பெயர். ஆதிக் குடிகள் இல்லை என்று ஏற்பட்டதால், நாகரும் தமிழரும் சேர்ந்து திராவிட ராயினர்’

என்று எழுதிவிட்டு தன் கூற்றுக்குச் சான்றாக,

‘நாக நன்னாட்டு நானூறி யோசனை

வியன்பாதலத்து வீழ்ந்து கேடெய்தும்’

‘நக்க சாரணர் நாகர் வாழ்மலை’ (மணிமேகலை)

என்ற சிலப்பதிகாரத்தின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.

(தொடரும்)

நன்றி ;கவி 
கீற்று தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty Re: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 6:40

மறைமலையடிகளின் ஆய்வு:
--------------------------------------------
திராவிடர் என்ற இனமே இல்லை என்று கூறுகின்றவர்களுக்கு விடையாக, திராவிடர்கள் தோற்றத்தில் எவ்வாறு இருப்பர் என்பதை மறைமலையடிகள் தனது ‘தமிழர் மதம்’ என்ற நூலில்,

‘தமிழர்களும் அவர்களோடு இனமான திராவிட மக்களும் பெரும்பாலுங் குள்ளமான வடிவினரென்றும், கரிய நிறத்தினரென்றும், தழைத்த கூந்தலும் அதில் ஒரேவொரு காற் சுருண்ட மயிரும் வாய்த்தவரென்றும், கரிய விழியினரென்றும் நீண்ட மண்டையோட்டினரென்றும் ஒரேவொருகால் அடியிற் குழிந்த அகன்ற மூக்கினரென்றும், என்றாலும் அதனால் தட்டையாகக் காணப்படாத முகத்தினரென்றுந் திட்டமாய் அறியலாயினர். இங்ஙனம் அறியப்பட்ட உறுப்படையாளங்கள் உடைய தமிழரும் அவர் இனத்தவருமே இப்போது இலங்கை முதல் இமயம் வரையிற் பரவியிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும்பகுதியினராய்க் காணப்படுகின்றனரென ரிசிலி என்னும் ஆசிரியர் முடித்துக் சொல்லி யிருக்கின்றனர். அவரைப் பின்பற்றி ராப்சன் என்னும் ஆசிரியரும் பின்வருமாறு வரைகின்றனர்:’

‘இந்திய மக்களின் பண்டைத் தொகுதியில் முதன்மையாய் இருந்தவர்கள் திராவிட வகுப்பினரே யாவர்; அவர், வழி நாட்களில் வந்து குடியேறிய ஆரியர், சித்தியர், மங்கோலியர் முதலான மற்றைக் குழுவினருடன் கலப் புற்று மிகவும் வேறு பாடுற்றனர்’.

‘இன்னும், ஆரியர்கள் வடமேற்கே யிருந்து வந்து குடியேறுகின்றுழித் தம்முடன் கொணர்ந்த ஐரோப்பிய ஆரிய மொழிகளை இத் தேயத்தில் நுழைத்த ஞான்று வட விந்தியாவின் மேற்கேயுள்ள நாடுகளில் மெய்யாகவே வழங்கி வந்தவை திராவிட மொழிகளே யயன்பதிற் சிறிதும் ஐயமில்லை. வேத மொழியிலும், அதற்குப் பிற்பட்ட சமஸ்கிருத மொழியிலும், பிராகிருத மொழிகளிலும், இன்னும் முற்பட்ட குடிமக்கள் மொழிகளிலும், எல்லாந் தமிழ் மொழிக்கேயுரிய குறியீடுகள் புகுந்திருத்தல் ஆராய்ந்து கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது. ஆகவே, இந்திய ஆரியர்கள் வருதற்கு முன்னமே, திராவிட மொழிகளைப் பேசுவாரே தென்னிந்திய வட இந்திய நாடுகளில் முதன்மை யாக நிறைந்திருந்தனர் என்று கருதுதற்குச் சிறந்த சன்றுகள் இருக்கின்றன’

என்று ஆய்ந்து கூறுகின்றார். மேலும் ‘திராவிட ஆரியர்’ என்று மறைமலையடிகள் கூறுகின்ற போது,

‘... இப்போதுள்ள நம் இந்து மக்களில் இவர் ஆரியர், இவர் தமிழர் என்று புலப்படப் பிரித்துக் காண்டேல் சிறிதேனும் இயலுமோ? இயலாதே. என்றாலும், சித்தியருந் திராவிடருங் கலந்த கலப்பிற் றோன்றிய மக்களை யும் மங்கோலியரும் திராவிடருங் கலந்த கலப்பிற் றோன்றிய மக்களை யும் பிரித்துக் காண்டல் இஞ்ஞான்று எளிதாய் இருத்தல் போலவே, திராவிடரும் ஆரியருங் கலந்த கலப்பிற் பிறந்த மக்களையும் பிரித்தறிதல் இயல்வ தாகவே யிருக்கின்றது. இங்ஙனமாக ஆரிய திராவிடக் கலவையிற் றோன்றிய மக்களையே ஆரியராகக் கருதி, அவர் உறையும் இடம் சரசுவதி யாறு மணல்வெளியிற் சுவடு மறைந்து போன இடமான ‘விநசநா’ என்னும் ஊரிலிருந்து ‘அலகபாத்து’ அல்லது ‘பிரயாகை’ வரையிலுள்ள ‘மத்ய தேசமே’ ஆகுமென்று மனுமிருதி (2,21) கூறுவதாயிற்று ’

என்கிறார். இங்கு திராவிடர் என்பவர் யார் என்பதையும் திராவிட ஆரியரே இப்போதைய பார்ப்பனர் என்றும் விரிவாக விளக்குகின்றார் மறைமலையடிகள்.

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் என்பவரே திராவிடர் என்பதற்கு பேராசிரியர் செயராமன் அவர்கள் மேற்கோள் காட்டுகின்ற சான்று கல்ஹனரால் எழுதப்பட்ட 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜதரங்கனி என்னும் காஷ்மீர் வரலாற்றைப் பேசும் நூலாகும்.

இந்த காஷ்மீரில் வாழ்ந்த மக்கள் குறித்து மறைமலையடிகள் தமது ‘தமிழர் மதம்’ என்ற நூலில், ‘மநு ஒரு திராவிட மன்னன்’ என்னும் தலைப்பில்,

‘மநு என்பவன் நாகரிக ஒழுக்கத்திற் சிறந்த ஒரு திராவிட மன்னர் என்றும், இம்மாநிலத்தைக் கடல் நீர் கவரத் துவங்கிய காலத்தில் அம்மன்னன் மலைய நாட்டில் ஓடிய கிருதமாலை ஆற்றங்கரையிற் றவஞ் செய்து கொண்டிருக்க ஒரு மீன்வடிவிற் றோன்றிய திருமால் அவனை அவ்வெள் ளத்திற்குத் தப்புவித்தனரென்றும், அவ்வெள்ளம் வடிந்த பின் அம் மன்னன் பல முகமாய்ச் சிதர்ந்தோடிப் போன குடிமக்களை யயல்லாம் ஒருங்கு சேர்ந்து, அவரை மீண்டும் நாடு நகரங்களில் நிலை நிறுத்தி அவர் ஒழுக வேண்டிய வாழ்க்கை முறைகளைக் கற்பித்தனனென்றும், அங்ஙனம் அவன் கற்பித்த அறநூலே, ‘மநு மிருதி’ எனப் பெயர் பெறலாயிற்றென்றும் ‘பாகவதம்’, ‘மற்ச புராணம்’, ‘அக்கினி புராணம்’ முதலான நூல்கள் நுவலா நிற்கின்றன’.

பேராசிரியர் செயராமன் அவர்கள்தான், ‘தொன்மங்கள் (புராணங்கள்) மிகைப் படுத்தப் பட்டவையாகவும், கட்டுக்கதைகள் நிரம்பியவையாகவும் இருக்கக் கூடியவை. ஆனால் அவற்றுள் சில வரலாற்றுச் செய்திகள் உள்ளீடாக இருக்கும்’ என்று கூறிவிட்டாரே.

மேலும் செயராமன் அவர்கள், ‘இது மேலும் நுணுகிப்பார்க்க வேண்டிய ஒன்று’ என்று வேறு கூறிவிட்டார். எனவே மறைமலையடிகளையே தொடர்ந்து சான்றுக்கு அழைப்போம்...

இவ்வரலாற்றினை நுனித்தறியுங்காற், காசுமீரத்திற்றங்கிய ஆரியர் நாகரிக வொழுக்கஞ் சிறிதும் இலராகவே, அவரைத் திருத்துதல் ஒருவாற்றானும் இயலாமை கண்டு அவரை அறவே விட்டொழித்து, இன்னுங் கிழக்கே கங்கையாறு பாயும் நடுநாடு வரையிற் போந்து வழிநெடுக நாகரிக வாழ்க்கையில் உயிர் வாழ்ந்த தமிழருடன் கலந்து, தமிழருடைய பழக்க வழக்கங்களிற் பழகிக், கொலை புலை கட்குடி சூது வெறியாட்டுகளைப் பையப் பைய விட்டுச் சீர்திருத்தி வந்த திராவிட ஆரியருடைய வாழ்க்கை முறைகளையே பின்னுஞ் சீர்திருத்தி அவர்க்கு அறிவு தெருட்டும் பொருட்டே மநுவென்னுந் தமிழ் மன்னன் மத்திய தேசத்தில் அல்லது நடுநாட்டில் உறைந்த திராவிட ஆரியரை நோக்கியே ‘மநுமிருதி’ என்னும் அற நூலை வகுப்பானாயினனென்று ஆராய்ந்து உணர்தல் வேண்டும்.

ஆகவே, காசுமீரதேயத்தின்கண் வந்து குடியேறிய ஒரு சிறு தொகுதியினரான ஆரியரைத் தவிர, வேறு தனிப்பட்ட ஆரியர் இவ்விந்தியதேயத்தில் இலரென்பதும், காசுமீரம் இராசபுதனம் முதலான சில இடங்களிற் றங்கிய ஆரியரைத் தவிர இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடையேயுள்ள நாட்டிற் குடி புகுந்த ஆரியர் அனைவரும் அவர்க்கு முன்னமே அங்கெல் லாம் நாகரிகத்திற் சிறந்தவராய் வயங்கிய திராவிட மக்களிற் கலந்து திராவிட ஆரியராயினரென்பதும், இங்ஙனந் திராவிட ஆரியக் கலவையிற் றோன்றிய மக்கள் ஆரியருடைய தீய பழக்க வழக்கங்களைப் பெரும் பாலுங் கைவிட்டுத் தமிழருடைய அருளொழுக்க முறைகளைச் சிறிது சிறிதாகக் கைக்கொண்டு ஒழுகத் துவங்கினமையின், தவவொழுக்கத்தின் மேம்பட்ட தமிழ் மன்னனாகிய மநுவென்பான், அவரைப் பார்ப்பனர், அரசர், வணிகர், தொழிலாளர் என நான்கு வகுப்பினராகப் பிரித்து, அவரவர்க்குரிய ஒழுகலாறுகளை முறை செய்து நூல் இயற்றலாயினன் என்பதும் மனத்திற் பதித்தல் வேண்டும். இந் நால்வகைச் சாதி வகுப்பு, திராவிட ஆரியர்க்காக வகுக்கப்பட்டதேயன்றி, அது தமிழ் மக்கட்கும் உரியதாக வகுக்கப்பட்டது அன்று. ஏனென்றால், ஆரியர் இங்கு வருதற்கு முன்னமே, அந்தணரும், அரசரும், வேளாளரும், பதினெண்டொழிலாள ரும் (அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற் பெருங்குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத்தில்லறத் தாரையும் தாங்கிவந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத் தாராகக் கருதப்பட்டனர். மருத நிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்து வந்த வரும் வேளாளரே. வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற் றச்சன், செக்கான், கைக்கோளன், பூக்காரன், கிணையன் (கிணைப்பறையன்), பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினென் தொழிலாளரும்; உழவனுக்குப் பக்கத் துணை யாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். இதனால், அவர் பதினெண் குடி மக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப் பட்டனர் என்கிறார் பாவாணர்-கவி) பண்டைத் தமிழ் மக்களுள் இருந்தமை, இப்போதிருப் பவற்றுள் மிகப் பழைய நூலாகிய தொல் காப்பியத்தின் புறத்திணையியலிற் போந்த,

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்

என்னுஞ் சூத்திரத்தாலும், அங்ஙனங் கூறப்பட்ட அந்தணர் முதலாயி னார்க் குரிய உரிமைகளைக் கிளந்தெடுத்துரைக்கும்,

நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய

என்றற் றொடக்கத்தனவாக வரூஉம் மரபியற் சூத்திரங்களாலும் நன்கு ணரக் கிடக்கின்றது ’

என்று நுணுகி ஆய்ந்து கூறி விட்டார் மறைமலையடிகள். இந்தப் பின்னணியில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜதரங்கினி என்ற காசுமீரத்து வரலாற்று நூலைப் பார்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் வரலாறுகள் எல்லாம் திரித்து மாற்றி எழுதப்பட்டதை இங்கு நினைவு கொள்ளுதல் வேண்டும். ‘குமுதம் தீராநதி’ டிசம்பர் 2002 இதழில் ‘இந்தியாவின் பூர்வக் குடிகள் திராவிடர்களா? ஆரியர்களா’ என்ற கட்டுரையில்,

...தற்போது பா.ஜ.க. அரசு பூர்வீகக் குடிமக்கள் ஆரியர்களே எனக் கூறி வருவதாகவும், அதற்கான ஆதாரங்களாக சில நூல்களை வெளியிட்டும், டில்லி, கல்கத்தா போன்றி தேசிய அருங்காட்சியகங்களும் அதற்கான ஆதாரங்களை உருவாக்கி வருவதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.... இப்போது எழுந்துள்ள சர்ச்சையினால் அதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. இது பற்றி சில உலகப்புகழ் பெற்ற இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டோம். உலகப் புகழ் பெற்ற தொல் பொருளியல் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் பனாரஸ் இந்துப் பல்கலையில் பயின்று, பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்று விட்டவருமான பேராசிரியர் ஏ.எச்.தானி, கல்கத்தாவிற்கு வந்த போது நமக்கு அளித்த பேட்டி:

கே: இந்த நாகரிகம் ஆரியர்களுடையது என வரலாற்று ஆதாரங்களுடன் சில நூல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளனவாமே!

ப: The Decipyered Indus Script என ஒரு நூலை என்.ஜஹா மற்றும் என்.எஸ். ராஜாராம் என்பவர்கள் எழுதியுள்ளனர். இதில் ஹரப்பாவில் கண்டு எடுக்கப்பட்டுள்ள முத்திரைகளில், குதிரை உருவம் இருப்பதாகப் படத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள். இதை பல வரலாற்று நூலாசிரியர்கள் நுணுக்கமாக ஆராய்ந்ததில் முன் பாதி சிதைந்த நிலையில் கிடைக்கப் பெற்ற முத்திரையின் உருவத்தில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன், காளை மாட்டின் பின் பாதியை, குதிரையின் முன் பாதியுடன் இணைத் துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே குதிரையை அதிகமாகப் பயன் படுத்தும் ஆரியர்களுடையது இந்த நாகரிகம் என்று ஆதாரத்தையே உருவாக்கிக் கொண்டு விட்டார்கள்.

இது பற்றி மத்திய அரசின் ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் சார்பிலும் இது போன்ற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியிடப் பட்டுள்ளது. அதிலும் என்.எஸ். ராஜாராம் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்ற குறிப்பிட வேண்டும் எனவும் சரஸ்வதி ஆற்றங் கரையில் இருந்துதான் இந்த நாகரிகமே தோன்றியது எனவும் கூறியுள்ளார். காரணம், வட இந்தியாவில் சில இடங்களான பஞ்சாப், ஹரியனா, மேற்கு உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் இந்த ஆறு ஓடியதாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த இடங்களில் நடத்திய அகழ்வராய்ச்சியின் போதும், சிந்து சமவெளி நாகரிகக் கண்டு பிடிப்புகள் சில கிடைத்துள்ளன. எனவே தான் ராஜாராம் இப்படி ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.

தற்போது சரஸ்வதி ஆறு பற்றியும் வெகு நுணுக்கமாக ஆராய்ந்து கண்டு பிடிக்க வேண்டிய உடனடி கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நாகரிகம் திராவிடர்களுடையதுடன் பொருந்துகிறது என்பதை தமிழகத்தில் அகழ்வா ராய்ச்சி செய்வதன் மூலம் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

இப்படி வரலாறுகளை திருத்திய எழுதியக் கூட்டம் தான் இராஜதரங்கினி என்ற நூலையும் எழுதியிருக்கலாம் என்ற அய்யம் எழுதுகிறது. திராவிடத் தேசியத்தை எதிர்ப்பதிலும் திராவிடர் என்ற மரபினத்தை எதிர்ப்பதிலும் மட்டும் தோழர் பெ.மணியரசன், பேராசிரியர் த.செயராமன் போன்ற போலித் தமிழ்த்தேசியவாதிகள் முயலுவதில்லை. சந்தடிச் சாக்கில் பார்ப்பனர்களைத் தூக்கிப்பிடிப்பதிலும் முனைப்பாக இருக்கிறார்கள். நிற்க.

தமிழ்க்கடல் மறைமலையடிகளின் வாதத்தை தொடருவோம்,

‘இனி, இருக்கு வேத புருட சூத்தத்தில், தொழிலான் மட்டுமின்றிப் பிறப்பி னாலும் பார்ப்பனருக்கு ஏனையயல்லாச் சாதியாரினும் பார்க்க மிக்கதோர் உயர்வு சொல்லப்பட்டிருத்தலை உற்று நோக்குங்கால், அப் பதிகத்தைப் படைத்து அதனுள் நுழைத்தவர் ஒரு திராவிட ஆரியப் பார்ப்பனரே யாவரென்பது துணியப்படுகின்றது..... மற்றுத் திராவிட ஆரியக் கலப்பிற் றோன்றிய பார்ப்பனரோ, ஏனை வகுப்பினர் அனைவரையும் அடிமைகள், வைப்பாட்டி மக்கள் எனப் பொருள் படுஞ் சூத்திரர் என்னும் இழி சொல்லால் மிக இழித்துப் பேசி, அவரைத் தொடுதலும் ஆகாது, தாம் உணவருந் துங்கால் அவர் தம்மைக் காண்டலும் ஆகாது என ஒரு பெருங் கட்டுப்பாடு வகுத்துக் கொண்டு தாமே இம்மாநிலத் தேவர்கள் எனத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லித் தமக்குப் பிறப்பினாலேயே பெரும் பெருமை தேடுபவராயிருக்கின்றனர். இத்தன்மையினரான இத்தென்னாட்டுப் பார்ப்ப னரன்றி வேறு எவர்தாந் தாம் இறைவனது முகத்தினின்றும் பிறந்தவர் என்று சிறிதும் அச்சமின்றி அத்தனை நெஞ்சழுத்தத்துடன் கூறத் துணிவர்? அதனை யயண்ணிப் பார்க்குங்கால் தென்னாட்டுப் பார்ப்பனர் எவரோ அப் புருட சூத்தப் பதிகத்தைப் படைத்து இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தில் நுழைத்து விட்டாரென்பது திண்ணமாய்ப் பெறப் படுகின்றது’

என்று ‘தென்னாட்டுப் பார்ப்பனர்’ பற்றிக் கூறி சவுக்கடி கொடுத்துவிட்டார். பேராசிரியர் செயராமன் அவர்களும் தோழர் மணியரசன் அவர்களும், என்னடா இவன் பெரியாரை துணைக்கழைப்பான் என்று நினைத்தோம். ஆனால் இவன் மறைமலையடிகளை அல்லவா அழைத்துவிட்டான் என்று நினைக்கலாம்.

நான் விட்டாலும் மறைமலையடிகள் இவர்களை விடத் தயாராக இல்லை. இன்னும் மேலே தொடருகிறார்,

‘நடுநாட்டில் திராவிடருடன் கலந்து தோன்றிய திராவிட ஆரியரில் ஒரு சிறு கூட்டத்தாரே மெல்ல மெல்லத் தென்னாடு போந்தவராவார். எங்ஙனமெனிற் கூறுதும், அத் திராவிட ஆரியர் தம்மைப் பார்ப்பனரென உயர்த்துப் பேசிக் கொண்டு, அவ்வுயர்வுக்கு ஒரு பெருந்துணையாகத் திராவிடப் பொது மக்களுக்குத் தெரியாத ஆரிய மொழியைத் தேவர் களாகிய தமக்குரிய தேவமொழியாகப் பயின்று , அம் மொழியில் திராவிட முனிவரால் தொகுத்து வைக்கப்பட்ட இருக்கு, எசுர், சாமம், அதர்வம் முதலான வேதங்களை ஓதியும், பழைய மிலேச்ச, ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை, கட்குடியயாடு கூடிய வெறியாட்டு வேள்விகளைத் தாம் திராவிட மன்னர் பாற் கரவாயப்பெற்ற பெரும் பொருள் கொண்டு ஆயிரக் கணக்காக வேட்டும் வடக்கேயுள்ள நடுநாடுகளில் அருளொழுக்கத்திற்கு மாறான கொடுஞ் செயல்களைப் பரவச் செய்து வந்தனர். அது கண்டு மனங்குழைந்த தனித்தமிழ் முனிவர்களான கபிலரும் பதஞ்சலியும் முறையே சாங்கியமும் யோகமும் இயற்றி அருளும் அன்புமே இறை வன் குணங்கள். அருளும் அன்பும் உடையாரே இறைவன்றிருவருளைப் பெறுவர். உயிர்க்கொலையுங் கட்குடியும் மக்களை இம்மை மறுமையிலும் நிரயத்திற் வருத்துந் தீவினைகளாமென அறிவுரை கூறி எங்கும் அறி வொளி யினைப் பரவச் செய்வாராயினர்’.

மறைமலையடிகள் 1916 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார். பெரியார் அவர்கள் 1925-க்கு பின் தன்மான இயக்கத்தைத் தொடங்கினார். 1892- இல் ஜான். ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்ற அமைப்பைத் தொடங்கினார். ‘திராவிட’ என்ற சொல்லை திரு.ஜான் ரத்தினம் அவர்களும் பண்டிதர் அயோத்திதாசரும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை விளிப்பதற்காகப் பயன்படுத்தினர்.

பின்பு 1912- இல் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் குறியீடாக டாக்டர் நடேச முதலியார் அவர்கள் திராவிட சங்கம் தொடங்குகிறார்.

1916 இல் பிட்டி. தியாகராயர் அவர்களாலும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாலும் பார்ப்பனரல் லாதார் இயக்கம் என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் இதழும் தொடங்கப்பட்டது. இதன் தாக்கமாக பெரியாரும் திராவிடர் என்ற குறியீடைப் பயன்படுத்துகிறார்.

தன்னுடைய தொடக்கக் கால பரப்புரைகளில் மறைமலையடிகளின் பண்டைக் கால தமிழரும் ஆரியரும் என்ற நூலை கையில் வைத்துக் கொண்டு பெரியார் பேசினார் என்று ‘வெல்லும் தூயத் தமிழ்’ ஆசிரியர் க.தமிழமல்லன் அவர்கள் கூறியுள்ளார்.

வரலாற்று போக்கில் பெரியார் ஆழ்ந்துணர்ந்து பயன்படுத்திய திராவிடர் என்ற சொல்லை தமிழர் மீது மட்டுமே திணித்தார் என்கிறார் மணியரசன். காழ்ப்புணர்ச்சி யின் காரணமாகவே பெ.மணியரசன் கூறுகிறார் என்பதை மெய்ப்பிக்க யாழ்ப்பாண தமிழறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை அவர்களை சான்று கூற அழைப்போம்.

(தொடரும்)

- கவி
நன்றி கீற்று தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty Re: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 6:45

யாழ்ப்பாணத் தமிழறிஞர் ந.சி.கந்தையா பிள்ளையின் ஆய்வு:
----------------------------------------------------------

ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் தமது திராவிடமென்றால் என்ன என்ற நூலில்,

‘மொழி தொடர்பாகவே திராவிடம் என்னும் பெயரை உலகம் அறிந்துள்ளது. திராவிடம் என்னும் இனத்தில் முன்பின் இருபது மொழிகள் அடங்கும். அவைகளுள் நான்கு மொழிகள் தமது பழைய இலக்கியங்களைக் குறித்துப் பெருமை கொள்ள முடியும். இவைகளுள் தமிழ் மொழியில் மாத்திரம் இந்தியாவின் எல்லையையும் கடந்து சென்றுள்ள குறள் போன்ற பழைய இலக்கியங்கள் உள்ளன. திராவிடம் என்னும் பெயர் எங்கு நின்று வந்தது? அதன் ஆதிப் பொருள் யாது?

இப்பெயர் முதல் முதல் குமாரிலபட்டர் காலத்தில் (கி.பி.7 அல்லது 8 ஆம் நூற்றாண்டு) திராவிட நூல் வழக்கில் காணப்படுகிறது. அவர் தென்னிந்தியாவின் கிழக்குக் கரையில் வழங்கும் தெலுங்கு, தமிழ் மொழிகளைக் குறிக்க ‘ஆந்திர திராவிட பாஷா ’எனக் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர, திராவிட என்னும் சொற்களின் பொருளை அறிவதற்கு இந்தியாவின் தெற்கே வழங்கும் கன்னடம், மலையாளம் என்னும் பெயர்ப் பொருள்களைப் பற்றியும் நாம் ஆராய்தல் வேண்டும். இவ்விரண்டு பெயர்களும் இட சம்பந்தமாக வழங்கப்பட்டுள்ளன. கனரா, கன்னடா அல்லது கர்நாடக என வழங்கும் பெயர் கர்நாட அல்லது கர்நாடக என்று ‘பிரிகற் சம்கிதை’யில் எழுதப்பட்டுள்ளது. இப்பெயர் பஞ்சு விளைவதும் தேக்குச் செழித்து வளர்வதுமாகிய கரிய பூமியைக் குறிக்கின்றது. மலையாளம் என்பதற்கு மலைநாடு எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். மலையம் என்பது மலையைக் குறிக்கின்றது. ஆகவே கன்னடம், மலையாளம் என்னும் பெயர்கள் இடங்களைக் குறிக்க வழங்கிய பெயர்கள் என்றும் அவை வட மொழிப் பெயர்கள் அல்ல என்றும் விளங்கும். இதனால் முற்கால மக்கள் திராவிடம் என்னும் பெயரையும் அவ்வகையில் பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாகின்றது’.

ந.சி.கந்தையா பிள்ளை தொடருகிறார்....

"அசோகரின் கல்வெட்டுகளுக்கு முற்பட்ட ஐதரேயப் பிராமணத்தில் ஆந்திரம் என்னும் சொல் தெலுங்கு நாட்டையும் தெலுங்கு மொழியையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. இலக்கிய கால ஆசிரியராகிய பிளினி அதனை ஆந்திரே எனக் குறிப்பிட்டுள்ளார். குமாரிலபட்டர் ஆந்திர மொழியைத் தெற்கே உள்ள தமிழோடு தொடர்புபடுத்தியுள்ளார். தமிழர் தெலுங்கர் என்பதை தெலிங்கர் என்றும், அவர்களின் மொழியைத் தெலுங்கு அல்லது தெலுங்கம் என்றும் வழங்கினர். தெலுங்கம் என்னும் பெயர் வேளாண்மை தொடர்பாக உண்டானது. தெல் அல்லது தெல்லு நீண்ட சதுரமானதும் நாற்புறமும் வரம்புடையதுமாகிய சிறிய வயல் நிலத்தைக் குறிக்கும். தெலுங்கம் என்பது சென்னைக்கும் ஒரிசாவுக்கும் இடையே உள்ள மக்களையும் மொழியையும் குறிக்கவும் வழங்கும்.

அசோகப் பட்டையங்களில் கலிங்கம் என்னும் பெயர் நாட்டையும் மலை நாட்டையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. ‘கல்’ என்பது கல்லையும் மலையையும் குன்றையும் குறிக்கும். கலிங்கு, கலுங்கு, கலிங்கல் முதலிய சேரி வழக்குச் சொற்கள் நீர்மடையையும் குறிக்கும். கலிங்க நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினத்துக்குக் கலிங்கப்பட்டினமென்று பெயர். கஞ்சம் மாகாணத்திலுள்ள மலைத் தொடருக்குக் கலிங்க மலைத் தொடர் என்று பெயர். இதனால் ஆந்திரா என்னும் பெயரும் இடத் தொடர்பாக வழங்கப் பட்டதெனக் கொள்ளுதல் தவறாக மாட்டாது. கலிங்கப் பட்டினத்துக்கு மேற்கே 58 கல் தொலைவில் ஆந்திரா என்னும் தெலுங்கு இடம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய ஓர் இடமாகலாம்.

தெலுங்கு அல்லது கலிங்க நாட்டின் மலைப்பகுதிகளாகிய ஒரிசா மலை களிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலை எட்டும் வரையில் -கோதாவரி ஆற்றிடைக்குறை முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில் - தட்டையான சமபூமி காணப்படுகிறது. இவ்விடங்கள் கரைப்போக்கு என்னும் பொரு ளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். இடம் என்பது தெலுங்கில் எடா, எடாமு என வழங்கும். இவை இடைவெளி, பரப்பு, இருக்குமிடம் போன்றவைகளைக் குறிக்கும். திரா-விட (ம்) என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரி தீவைக் குறிக்கும். இலங்கை என்பதிலிருந்து தோன்றிய இலங்காபுரி என்னும் பெயர்களை ஞாபகப்படுத்துகிறது.

குமாரிலபட்டர் திராவிட என வழங்கியது தமிழ் வழக்கில் திராவிடம் என்று ஆயிற்று. இப்பெயர் தொடக்கத்தில் தமிழரின் நாட்டுக்கும் மொழிக்கும் பெயராய் வழங்கிப் பின் அம்மொழியோடு சம்பந்தப்பட்ட மக்களையும் உணர்த்துவதாயிற்று. தமிழ் சம்பந்தமான மொழி மகராட்டிரம், கூர்ச்சரம் முதலிய நாடுகளில் இன்றும் பேசப்படுகின்றது. அவ்விடங்களுக்குத் தமிழரின் ஒரு பிரிவினர் சென்றிருக்கலாம்.

ஒரிசா மலைகளிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலான தட்டையான சமபூமி என்ற பகுதி கரைப்போக்கு என்னும் பொருளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். திராவிட என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரியைக் குறிக்கிறது"

என்றெல்லாம் ந.சி.கந்தையா பிள்ளை ஆய்வு நோக்கில் கூறிவிட்டார்.

‘தமிழ்’ என்ற சொல் எவ்வாறு ‘தமிள’ என்று ஆயிற்று என்பதையும் ‘திரமிட’ என்று மாறியதையும் விளக்குவதற்கு அடிப்படையாக ‘ழகரம்’ என்பதைப் பற்றி தமிழறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்:

"ழகரத்துக்குப் பதில் ளகரம் வழங்கியதை நாம் ஆரிய நூல்களில் பார்க்கலாம். சுவேதாம்பரரின் சைன நூல்களிலும், மகாவம்சம் என்னும் இலங்கைப்பாலி நூலிலும் தமிள என்னும் உச்சரிப்புக் காணப்படுகிறது. தமிழன் என்பதன் பன்மை தமிழர். தமிழப் பிள்ளை, தமிழக் கூத்தன் என்னும் கூட்டுச் சொற்களில் தமிழ என்னும் வழக்குக் காணப்படுகிறது. இதனால் ஆரியருக்கு முன்பு தமிழ் என்பதும் நாட்டுக்கே பெயராக வழங்கியதெனத் தெரிகின்றது.

புதிதாக வந்த ஆரியர் திராவிட, தமிழ் என்னும் சொற்களை கையாண்ட முறையினால் அவை ஒரே உற்பத்திக்குரியனவென்று சந்தேகிக்க வேண்டியதாயிற்று. சமக்கிருத நாடகங்களில் (சைனர் பிராகிருதத்தில் எழுதிய நாடகங்களில்) தாவிள என்றும், வராகமிகிரரின் சில கையயழுத்து நூல்களில் (கி.பி.6 ஆம் நூற்றாண்டு) திரமிட(ம்) என்றும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டுப் பட்டையங்கள் சில வற்றில் திராமிட மென்றும் சொற்கள் காணப்படுகின்றன. புத்த சமயம் சம்பந்தமாகவும் புராணங்கள் சம்பந்தமாகவும் உள்ள பழைய மலையாள மொழி பெயர்ப்புகளிலும் இவ்வாறே காணப்படுகின்றது. இதுவரையும் கூறியவைகளால் தமிழ், திராவிடம் என்னும் சொற்கள் வெவ்வேறு உற்பத்திக்குரியனவென்றும், திராவிடம், தமிழ் என்னும் சொற்கள் பிறமொழிக்குரியவர்களால் கொச்சையாக உச்சரிக்கப்பட்டு வந்தமையின் இரு சொற்களும் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தனவோ என்னும் மயக்கமும் ஐயப்பாடும் எழுவதாயின வென்றும் புலனாகின்றன"

என்றும் நடுநிலையில் நின்று ஆய்வு செய்திருக்கிறார்.

இந்திய நாடு முழுமையிலும் வாழ்ந்த மக்கள் திராவிடர் என்று கூறி அதிர வைக்கிறார் ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள். அவர் தனது திராவிட இந்தியா என்னும் நூலில்,

"சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்தியா முழுமையிலும் ஒரே மொழியை வழங்கிய ஒரே இன மக்கள் வாழ்ந்தார்கள். அம்மக்கள் திராவிடர் எனப்படுவர். ஆரிய மக்கள் கி.மு. இரண்டாயிரத்தில் அல்லது அதற்குப்பின் இந்திய நாட்டை அடைந்தார்கள். அக்காலத்தில் வடநாடு முழுமையிலும் திராவிட மொழி வழங்கியதென்பதற்குச் சான்று ஆரிய மக்களின் பழைய பாடல்களாகிய வேதங்களில் திராவிடச் செற்கள் பல இருப்பதும் பிறவுமென ஆராய்ச்சியாளர் நன்கு ஆய்ந்து நிறுவியுள்ளார்கள். ஆரியர் வருகைக்கு பின்பே இந்திய நாட்டில் வெவ்வேறு இன மக்கட் கலப்பும் மொழிக் கலப்பும் உண்டாயிற்று. கி.மு. இரண்டாயிரத்தில் வடக்கே இமயத்துக்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட பெரு நிலப்பரப்பு திராவிட நாடாக விளங்கிற்றெனத் தெள்ளிதில் அறியக் கிடக்கின்றது.

புதிய மக்களுக்கும் வடக்கே வாழ்ந்து கொண்டிருந்த திராவிட மக்களுக்குமிடையில் போர்கள் நிகழ்ந்தன. ஆரியருடைய வேதப் பாடல்களால் அக்காலத்தில் திராவிடர் உயர்ந்த நாகரிகம் பெற்று விளங்கினார்கள் எனத் தெரிகின்றது. நாகரிகத்தில் உயர்நிலை அடைந்திருந்த திராவிடரை வெல்வது ஆரிய மக்களுக்கு இயலாததாக விருந்தது. நாளடைவில் இரு சாதியாருக் கிடையில் திருமணக் கலப்புகளால் தொடர்புகள் உண்டாயின. திராவிடப் பெண்களை ஆரிய ஆடவரும் ஆரியப் பெண்களைத் திராவிட ஆடவரும் மணந்தனர். திராவிடருடைய சமூகம் தாயாட்சி முறையினது. ஆரியருடைய சமூகம் தந்தை ஆட்சி முறையினது.... இவ்வகையான கலப்புப் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்தது. விந்திய மலைக்கு வடக்கே உள்ள மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொள்வராயினர். ஆனால் அவர்களிடத்தில் ஆரியக் குலத்தினருக்குரிய குணங்குறிகள் மிகச் சிறிதே காணப்பட்டன.

மக்களிடை கலப்பு உண்டான போது மொழிகளும் கொள்கைகளும் கலப்பவாயின. திராவிட மொழிச் சொற்கள் பல திரித்து வழங்கப்பட்டன.

.... பாரசீகர் வடநாட்டின் சில பகுதிகளை வென்று சில காலம் ஆட்சி நடத்தினார்கள். பின்பு கிரேக்கர் படைஎடுப்பு நேர்ந்தது. பின்பு சித்தியர், மங்கோலியர், அவுணர் முதலிய பல சாதியினர் வடநாட்டின் மீது படையயடுத்து வந்து நாட்டில் சிற்சில பகுதிகளிற் குடியேறி இந்திய மக்களோடு கலந்தார்கள். இதனால் அலக்சாந்தர் படையயடுப்புக் காலம் முதல் மேலும் மக்கட் கலப்பும் மொழிக் கலப்பும் இந்திய நாட்டில் உண்டாயின."

திராவிடர் என்ற இனம் இல்லை; திராவிடம் என்பது மாயை என்பதையெல்லாம் தவிடுபொடியாக்கிய ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் திராவிட நாகரிக‌த்தின் தொன்மையையும் பின்வருமாறு விளக்குகிறார்.

"திராவிட மக்களின் மிகப் பழைய நாகரிகத்தைப் பற்றி மொகஞ்சதரோ, அரப்பா, சங்குதரோ முதலிய அழிபாட்டு மேடுகளிற் கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள்கள் வெளியிடுகின்றன. அரப்பா மொகஞ்சதரோ முதலிய நகரங்களில் திராவிட மக்கள் வாழ்ந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் எகிப்தியர், பாபிலோனியர்களை ஒத்த அல்லது அவர்களிலும் உயர்ந்த நாகரிகமுடையவர்களாக வாழ்ந்தார்கள். அக்காலத்தில் இரும்பு பயன்படுத்தப் படவில்லை. நகரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டன. அவைகளுக்கு மாடிகளும் மாடிகளுக்குச் செல்லப் படிக்கட்டுகளுமிருந்தன.... ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறும் குளிக்கு மறையும் இருந்தன. கழிவு நீர், கால்வாய்கள் வழியாக வீதியிலுள்ள பெரிய கால்வாயில் விழுந்தது. கால்வாய்களில் செங்கற் பதிக்கப் பட்டிருந்தன."

திராவிட மக்களின் நாகரிகச் சிறப்பை ந.சி.கந்தையா பிள்ளை விளக்கியவுடன் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கும் பேராசிரியர் செயராமன் அவர்களுக்கும் கண்ணைக் கட்டுகிறது. எனினும் பேராசிரியர் செயராமன் அவர்கள், ‘தொன்மங்கள் (புராணங்கள்) மிகைப்படுத்தப்பட்டவையாகவும், கட்டுக்கதைகள் நிரம்பியவை யாகவும் இருக்கக் கூடியவை. ஆனால் அவற்றுள் சில வரலாற்றுச் செய்திகள் உள்ளீடாக இருக்கும்’ என்று கூறிவிட்டு, திராவிட என்ற சொல் மகாபாரதத்தில் வருகிறது என்றும் அது தென்னகப் பகுதியைக் குறிக்கிறது என்றும் சுவர் எழுப்புகிறார். இதற்கு ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள்,

"திராவிட மக்களைப் பற்றிய சில குறிப்புகள் வேதங்களிற் காணப்படுகின்றன. பாரதம், இராமாயணம் என்னும் நூல்களில் தென்னாட்டு அரசர்களைப் பற்றியும் தென்னாட்டைப் பற்றியும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. அந்நூல்கள் காலத்துக்குக் காலம் எழுதிச் சேர்க்கப் பட்டனவாதலின் அவைகளிற் கூறப்படுவன சிறந்த வரலாற்றுச் சான்று களாக மாட்டா. மாபாரதத்தையும் இராமாயணத்தையும் நாம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைய நூல்கள் எனக் கொள்ளலாம். அந்நூல்களின் எப் பகுதி எக் காலத்தில் செய்யப்பட்டது என்னும் ஐயப்பாடும் உண்டாகின்றது. அவைகளில் கூறப் படும் இந்திய நாட்டின் பிரிவுகள் கி.மு.நாலாம் நூற்றாண்டு வரையில் உறுதியாக அமைந்திருந்தன வென்று கொள்ள லாம். சாதகக் கதைகள் பதினாறு இராச்சியங்களையும் வேறு சில நாடுகளையும் பற்றிக் கூறுகின்றன. அவைகளை எல்லாம் இந்தியப் படமொன்றில் ஒழுங்குப்பட வைத்துப் பார்த்தால் மிகத் தெற்கே உள்ள நாடு கோதாவரிக்குத் தெற்கே போக வில்லை. பழைய பெளத்த இலக்கியங்கள் விந்தியத்திற்குக் கீழே உள்ள நாடுகளைப் பற்றி அறியா.

பாணினிக்குத் தென்னாட்டைப் பற்றி தெரியாது....பாணினிக்கு இரண்டு நூற்றாண்டுகளின் பின் விளங்கிய கார்த்தியாயனர் தென்னாட்டைப் பற்றி அறிந்திருந்தார். பதஞ்சலி காலத்தில் தென்னாடு நன்றாக அறியப் பட்டிருந்தது. பதஞ்சலியின் காலம் கி.மு. 150. கார்த்தியாயனரின் காலம் கி.மு.350. பண்டாக்கரது கொள்கையின்படி பாணினி கி.மு.7 ஆம் நூற்றாண்டில் விளங்கினார். அக் காலத்தில் வட நாட்டவரால் தென்னாடு சிறிதும் அறியப் படாதிருந்தது. மெகஸ்தீனஸ் காலத்தில் தென்னிந் தியாவைப் பற்றி வட நாட்டவர் சிறிது அறிந்திருந்தார்கள். சாணக்கியரின் அர்த்த சாத்திரத்தில் தென்னாட்டைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அசோகரின் கல்வெட்டுகளில் சேர சோழ பாண்டியர் நாடுகள் குறிக்கப் பட்டுள்ளன"

என்று விவரிக்கிறார்.

பெரியார் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடினார் என்றால், அவருக்கு முன்பே பண்டிதர் அயோத்திதாசர் மூடநம்பிக்கைகளை தோலுரித்துள்ளார் என்றும், தமிழ்நாடு தமிழருக்கே கோரிக்கையை பெரியார் எழுப்பினார் என்றால் அதற்கு முன்பே நாவலர் சோமசுந்தர பாரதியார் தான் தமிழ்நாடு பிரிவினை கோரிக்கையை எழுப்பினார் என்றும் குறுக்கு சால் ஓட்டும் போலித் தமிழ்த் தேசியவாதிகள், திராவிடர் என்ற அடையாளக் குறியீட்டுச் சொல் பழைய இலக்கியங்களிலும், தமிழறிஞர்களும் பண்டிதர் அயோத்திதாசர் போன்ற சமூகப் போராளிகளும் பயன்படுத்தியுள்ளனர்; அதை தான் பெரியார் வலிமையாக்கினார் என்று கூற மறுக்கின்றனர்.

திராவிடர் என்று ஓர் இனம் வரலாற்றில் இருந்ததில்லை என்ற தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு மறைமலையடிகளும் ந.சி.கந்தையா பிள்ளை அவர்களும் விரிவாக அறிவியல் முறைப்படியும் வரலாற்றுச் சான்று அடிப்படையிலும் விளக்கம் கூறியுள்ளனர்.

(தொடரும்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty Re: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 6:49

தோழர்கள் எஸ்.வி.இராசதுரை - வ.கீதா அவர்களின் ஆய்வு:
------------------------------------------------------------
தனித்தமிழ் நாடு என்ற கோரிக்கையை பெரியார் எப்படி உருக்கொண்டார் என்பதற்கு தோழர்கள் எஸ்.வி.இராசதுரை அவர்களும் தோழர் கீதா அவர்களும் ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ என்னும் நூலில் பின்வருமாறு விளக்குகிறார்கள்;

தனித்தமிழ் மாநிலக் கோரிக்கை என்பதும் தனித் தமிழ்நாடு, திராவிடநாடு கோரிக்கைகளும் அரசியல் ரீதியாக வலுப்பட்டதும் ஓரளவு மக்களாதரவைப் பெற்றதும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தான். நாட்டுப் பிரிவினை என்ற கருத்தைப் பெரியார் தனது 15 ஆண்டுகாலப் பார்ப்பனீய எதிர்ப்புப் போராட்டத்தின் நீட்சியாகவே உருவாக்கினார். பெரியார் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பல தமிழ் தேசிய நீரோட்டங்கள் சங்கமித்தன என்றாலும் அந்த நீரோட்டங்களுக்கான கிரியா ஊக்கியாகப் பெரியார்தான் விளங்கினார்.

பெரியார் தனித்தமிழ் நாடு பற்றிப் பேசிய பிறகுதான் 1937 அக்டோபரில் சென்னைப் பொதுக்கூட்டமொன்றில் பேசிய சோமசுந்தர பாரதியார், தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்காகத் ‘தமிழ் மாநிலம்’ அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் அதற்கு உகந்த தருணம் என்றும் பேசினார். 12.10.1937 இல் திருநெல்வேலி தமிழ்ப் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் தமிழறிஞர் எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை தலைமையில் சோமசுந்தர பாரதியாரும் சி.என். அண்ணாதுரையும் (அண்ணா) சொற்பொழிவாற்றிய இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்திலும் தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (தினமணி 18.10.1937, 17.10.1996)

12.11.37இல் திருவையாறு செந்தமிழ்க் கல்லூரி சார்பில் உமாமகேசுவரன் பிள்ளை தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய சோமசுந்தர பாரதியார் ஆந்திர மாகாணத்தைக் காங்கிரசார் பிரித்து விடத் தீர்மானித்தது போல் தமிழ் மாகாணத்தையும் பிரித்துவிட ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவது அவசியமென்றும் வற்புறுத்தினார். (கு.அ. 21.11.37). திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் நடைபெற்ற மூன்றாவது சென்னை மாகாணத் தமிழ் நாட்டில் தமிழ் மாகாணம் ஒன்று தனியாகப் பிரிக்க வேண்டும் என அது சம்பந்தமான அதிகாரிகளை இம் மகாநாடு கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானம் சி.டி.நாயகத்தால் கொண்டுவரப்பட்டு வழக்கறிஞர் சூர்யமூர்த்தி, கே.வி.அழகர்சாமி ஆகியோரால் ஆதரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது (கு.அ.2.1.38).

(அம் மாநாட்டுத் தொண்டர் படைத் தலைவராக இருந்தவர் தேவநேயப் பாவாணர் (கு.அ.19.1237). அம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தமிழறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை), தமிழர்களின் பழம் பெருமை, ஆரியர் வருகையால் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியன பற்றி ஐரோப்பிய அறிஞர் ஜில்பர்ட் ஸ்லேட்டர் கூறியதைத் தொகுத்து கூறியதுடன் தனித்தமிழ் மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தினார். (கு.அ.2.1.38) மேற்சொன்ன மாநாட்டை நடத்துவதற்காக திருச்சியில் உமாமகேஸ்வரன் பிள்ளை தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கருமுத்து தியாகராச் செட்டியார், பண்டிதர் மீனாட்சி சுந்தரம், பண்டிதமணி பல்லவராயன், மதுரை ஆர்.கார் மேகக் கோனார், நா.மு.வேங்கடசாமி நாட்டார், சி.என். அண்ணாதுரை (அண்ணா), குஞ்சிதம், தேவநேயப் பாவாணர், திருப்பூர் சென்னியம்மாள் ஆகியோர் (கு.அ.7.11.37).

4.12.38 அன்று காரைக்குடியில் நடந்த ராமநாதபுரம் மாவட்ட இரண்டாவது தமிழ் மாநாட்டில் சோமசுந்தர பாரதியார் தனது தலைமையுரையில் கூறினார்: நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தால் மட்டும் போதாது. அது நமக்கே உரியதா மென்பறிதல் வேண்டும். ஆங்கிலர் ஆட்சியிலும் இந்தியா, இந்திய நாடுதான். எனில், அது இந்தியருடைய உரிமையற்றதாயிருந்தது. அதுபோல் காங்கிரஸ் ஆட்சியில் மாகாணங்கள் மாகாண மொழியுடை யாருடையன என்ற அளவோடு அமையுமா? அல்லது ஒவ்வொரு மொழியுடைய மாகாணமும் அரசியல் மொழியினர்க்கே உரிமையுடையதாகப் போகிறதா? தமிழகம் தமிழருக்கே உரியதா? அல்லது படேல், நேரு, போசு முதலிய வட நாட்டாரின் ஆதிக்கத்துக்கு அடங்கி மீட்சியற்ற அன்னோர் ஆட்சிக்கடிமை நாடா?... அந்நியராட்சி குறைந்தது நமக்கு ஆட்சியுரிமை வழங்கப்பெற்ற மாகாணங்களினி நம்மவருக்கு முற்றுரிமை பேணுவது மாகாண ஆட்சிகளில் கூட மக்களுக்கு உரிமையே கிடையாது என்பது காந்தியாருள்ளிட்ட நம் தலைவர் பலரும் மந்திரியாரும் இப்போது கூறிவரும் உண்மைக்கு மாறாகும்... ஆதலால் இன்று கூட்டத்திற்கு வந்துள்ள பெரியாரும் பலரும் உளங்கலந்து பேசி நம்மவருக்கு உண்மை நலமும் குறையா முற்றுரிமையும் பேணி வளர்க்கும் வழிகளை ஆராய்ந்து வகுத்திடுக... இந்தியாவை நினைத்து நம் சொந்தத் தமிழ்நாட்டை நாமிழத்தல் ஓம்ப வேண்டுமா? சாவா மருந்து தேடி நம் தமிழ்ச் சமுதாய வாழ்வு பேணுக. தமிழும் தமிழகமும் தலைநின்றோங்கி வீறு பெறுக.(கு.அ.18.12.38).

ஆனால் அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட தமிழ்நாடு பற்றியது அல்ல. மாறாக தன்னாட்சி பெற்ற தமிழகமாகும்.

‘தமிழ்நாடு தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டு தமிழ் அரசாங்க மொழியாக்கப்படல் வேண்டும். அகில இந்திய காரியங்களைத் தவிர மற்ற முழு அதிகாரங்களும் அந்தந்த மாகாண மக்களிடமே யிருக்க வேண்டும். (குஅ, 25.12.38,N.A.238)’.

திருச்சியிலிருந்து புறப்பட்ட இந்தி எதிர்ப்புத் தொண்டர் படை (செஞ்சட்டையணிந்த 100 பேர்) 11.9.38 அன்று சென்னைத் திருவல்லிக்கேணி கடற்கரையை அடைந்தனர். அன்று மாலை 5.30 முதல் நள்ளிரவு வரை நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில்தான் (ஒன்றரை இலட்சம் பேர் கலந்து கொண்டதாக குடிஅரசு கூறியது). தமிழ்நாடு தமிழருக்கே என்ற புகழ்மிக்க அரசியல் முழக்கம் முதன் முதலாக எழுப்பப்பட்டது. ஆனால் அது குறித்து ‘விடுதலை’யில் எழுதப்பட்ட தலையங்கம் (குடிஅரசு 25.9.38 இல் மறுபிரசுரம் செய்யப்பட்டது). அம்முழக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்த தனித் தமிழ்நாட்டையல்ல. மாறாக அன்றைய சென்னை மாநிலத்திலிருந்து தமிழ் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டு இந்தியக் கூட்டாட்சியில் இயங்க வேண்டும் என்பதைதான் குறித்தது.

1938 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் உருவானது தனித் தமிழ் மாகாண கோரிக்கை தான் என்பதையும் தனித்தமிழ் நாடு கோரிக்கையல்ல என்பதையும் தோழர் எஸ்.வி.இராசதுரை அவர்களும் தோழர் வ. கீதா அவர்களும் விரிவாக மேலே விளக்கினார்கள்.

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தலைப்பில் நூல் எழுதிய க.சக்திவேல் போன்றவர்களுக்கு இது ஒரு சிறந்த விளக்கமாகும். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை நாவலர் சோமசுந்தர பாரதியார் தான் முதலில் முன்வைத்தார் என்றும் பெரியார் அதை தான் எடுத்துக் கொண்டார் என்றும் அபத்தமாக க.சக்திவேல் அவர்கள் தன்னுடைய குறுவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், வழக்கறிஞர் சக்திவேல் அவர்கள் தனது குறுவேட்டில் திராவிடம் என்பது மாயை என்று கூறியவர் சேர, சோழ, பாண்டிய நாட்டைக் குறிக்கக் கூடிய விற்கொடி, புலிக் கொடி, மீன்கொடியை நூல் அட்டையில் வடிவமைத்துள்ளார். சேரர் என்ற அரசனையும் சேர நாட்டையும் விற்கொடியையும் நீங்கள் கொண்டு வந்தாலே திராவிடம் என்பது மாயை அல்ல என்பது விளங்கி விடும். அப்போதைய சேர நாடு இப்போதைய மலையாளப் பகுதி. மேலும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தலைப்பிட்டுள்ளாரே, ஒரு வேளை இவர் தனிநாடு கேட்கிறாரா என்றால் அதுவும் இல்லை.

ம.பொ.சி அவர்கள் கூட ‘பிரிவினை வரலாறு’ என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். என்னமோ தனித் தமிழ் தமிழ்நாடு கேட்பது போன்று புள்ளி விவரங்களையெல்லாம் கொடுத்திருப்பார். ஆனால் இறுதியில் ‘பாரத தேசத்தில்’ ஒரு மாகாணமாக இருப்பதற்குதான் இவ்வளவு எடுப்பு. இதனால் தான் ம.பொ.சி.யின் வழித்தோன்றல் வழக்கறிஞர் க.சக்திவேலும் மயிர் கூச்செரியும் வகையில் தலைப்பிட்டுள்ளார். இங்கிருக்கிற ‘நாயுடு’ என்ற சாதியினரை தெலுங்கர் என்று கூறி அவர்களையும் மலையாளிகளையும் வெளியே போகச் சொல்லுகிறார். அப்படியென்றால் கேரளாவிற்கு பிழைப்புத் தேடியும் அங்கேயே வாழ்கின்ற தமிழர்களையும் மற்றும் கர்நாடகாவில் வாழ்கின்ற தமிழர்களையும் ஆந்திராவில் வாழ்கின்ற தமிழர்களையும் அவர்கள் விரட்டினால் இவர் நிலை என்ன?

நாயுடுகளை தெலுங்கர் என்று கூறி வரும் இவர்கள், வீட்டில் உருது பேசுவோரும் தங்கள் பெயர்களை இஸ்லாத்தோடு சார்ந்து வைப்பவர்களுமாகிய இஸ்லாமியர்களைப் பற்றி என்ன சொல்வார்கள்?

ஏற்கனவே கூறியுள்ளது போல், பெரியார் அவர்கள், ‘திராவிட நாட்டில், முஸ்லிம்கள், ஆதிதிராவிடர்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள் ஆகியவர்களும் திராவிடர்களே ஆனதால் அவரவர்கள் சமயம், ஆத்மார்த்தம் என்பவற்றின் உணர்ச்சி இன்றுள்ளது போலவே அவரவர்கள் இஷ்டப்படி இருக்கும்’ என்று கூறுகிறார்.

‘தனித்தமிழ் நாடு’ கோரிக்கை எவ்வாறு உருப்பெற்றது என்பதை தோழர் எஸ்.வி.இராசதுரையும் தோழர் வ.கீதா அவர்களும் பின்வருமாறு விளக்குகின்றனர்;

‘1938 அக்டோபரில் சேலத்தில் நடந்த இந்தி எதிர்ப்புக் கூட்டமொன்றில் பேசிய பெரியார், பார்ப்பனர்கள், வடநாட்டவர் ஆகியோரின் சுரண்டலிலிருந்து தமிழர்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிவதுதான் என்றும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற போராட்டத்தைத் தமிழர்கள் இறுதிவரை நடத்த வேண்டும் என்றும் கூறினார். (ஹி.பு.238). குடிஅரசு 23.10.38 இல் வெளி வந்த ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கட்டுரை, தமிழர்கள் தங்களை இழிவு நிலையில் வைத்திருக்கும் வருணதர்மம், இந்து மதம், இந்திய தேசீயம் ஆகிய வற்றிலிருந்து விடுதலையடைய வேண்டும் என்று கூறியது. தமிழ்நாட்டுத் தொழிற் துறையும் வர்த்தகமும் வங்கி (வட்டித்) தொழிலும், பம்பாய், ஷோலாப்பூர், அகமதாபாத், பஞ்சாப் முதலாளிகள், மார்வாரிகள், சிந்திகள், பார்சிகள், குஜராத்திகள், மூல்தானிகள் ஆகியோரின் ஆதிக்கத்திலுள்ளன என்றும் தமிழ் முதலாளிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகிய எல்லோருமே சுரண்டப்படுகிறார்கள் என்றும் செல்வம் வட நாட்டுக்குச் செல்வதுடன் தமிழர் நலனுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறியது. இதில் மேல் நாட்டானுக்கும் வட நாட்டானுக்கும் வித்தியாசமில்லை என்று கூறிய அக்கட்டுரை ‘தமிழ் நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னா பின்னமாக்குங்கள்! தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகங்களுடன் முடிவடைகிறது. (குஅ 23.10.38, ஈவெரா சிந்தனைகள் 658-660). ‘தமிழ் மாநிலப் பிரிவினை முழக்கம்’, ‘தனித்தமிழ்நாடு கோரிக்கை முழக்க ’மாக மாறியதைக் காண்கிறோம்.

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தின் வரலாற்றுச் சூழலை விளக்கிய தோழர் எஸ்.வி.இராசதுரை அவர்களும் தோழர் வ. கீதா அவர்களும், ‘திராவிடம்’ என்ற சொல் பற்றியும் ‘திராவிடர்’ என்ற சொல் பற்றியும் கீழ்க்கண்டவாறு அலசுகின்றனர்,

இங்கு ‘திராவிடம்’ என்ற சொல் பற்றிய சில செய்திகளைக் கூறுவது அவசியமாகிறது. அச்சொல்லை உருவாக்கியவர்கள் பெரியாரோ, சுயமரியாதை இயக்கத்தினரோ, திராவிடக் கழகத்தினரோ, தி.மு.க.வினரோ, ஏன் நீதிக்கட்சியினரோ கூட அல்ல. இது குறித்து அறிஞர் இராம.சுந்தரம் கூறுவதாவது:

‘கால்டுவெலுக்கு முன்பே ‘திராவிட’ என்கிற சொல் தென்னிந்தியர்களை/தென் மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குமரிலபட்டர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) ‘திராவிட பாஷைகள்’ பற்றிக் குறிப்பிடுகிறார். (tadyatha dravidadi bhasayam eva.... So in the Dravidia and other languages) மனுஸ்மிருதியில் திராவிட இனம் பற்றிய குறிப்புண்டு. கிரியர்சன் (linguistic Survey of India. Vol.1), ‘தனக்குத் தெரிந்த மட்டில் ஹாட்சன் (Dr. Hodgson) என்பவர்தான் ‘Dravidian’ என்ற சொல்லை முதன் முதலாகத் தென்னிந்திய மொழிகளை குறிக்கப் பயன்படுத்தியதாக’க் கூறுகிறார். 1816 இல் வெளியான A.D.Camp well‡இன் தெலுங்கு மொழி இலக்கண நூல் முன்னுரையில் எல்லீஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ முதலிய மொழிகளைத் ‘தென்னிந்திய மொழிகள்’ (dialects of South India) என்று குறிக்கிறார். சமஸ்கிருதம் தொடர்பாக நூல் எழுதிய ஆசிரியர்களும் ‘திராவிட’ என்ற சொல்லை இனம்/மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது. எனவே Caldwell coined the term என்று சொல்லுவதை விட, அவரே கூறுவது போல, ‘The word I have chosen is Dravidian from Dravida, the adjectival form of Dravida’ என்பது பொருந்தும். எனினும், இந்தச் சொல்லை ‘திராவிட’ என்ற சொல்லை- வரையறுத்த பொருளில், பயன்படுத்தி உலகெங்கும் பரவச் செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை’.

கேரள அறிஞர் டி.கே.ரவீந்தரன் எடுத்துக் காட்டியுள்ளது போல கால்ட்வெலின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ள சில கருத்துகள் அவரே எதிர்பார்த்திராத பண்பாட்டு, சமூக, அரசியல் உணர்வுகளை ஏற்படுத்தியது. தென்னிந்திய மொழிகள் பலவற்றை அவர் ‘திராவிட மொழிகள்’ என வரையறுத்தது மட்டுமின்றி, தமிழர்கள், தாங்கள் பார்ப்பனர்களால் ‘சூத்திரர்கள்’ எனறு அழைக்கப்பட்டு வந்ததை மறுதலித்து தங்களைத் தமிழ்நாட்டில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள ‘திராவிட சாதி’ அடையாளத்தைக் கொண்டே குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்றார். இறையியல் அறிஞர் ஜி.யு.போப் மட்டுமின்றி ஜே.எச்.நெல்சன், மவுண்ட் ஸ்டூவர்ட், எல்பின்ஸ்டன் கிராண்ட் - டஃப் போன்ற ஆங்கிலேய அதிகாரிகளும் கூட தமிழர்களையும் தமிழ் மொழியையும் குறிக்க ‘திராவிடர்’, ‘திராவிடம்’ என்ற சொற்களைப் பயன்படுத்தினர். பேராசிரியர் பி.சுந்தரம் பிள்ளை, ஜே.எம். நல்லசாமி பிள்ளை, டி. பொன்னம்பலம் பிள்ளை, வி.கனகசபை பிள்ளை, சோமசுந்தர பாரதியார், எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, மு.சீனிவாச அய்யங்கார், ஜே.பி.டி. டேவிட், மறைமலையடிகளார் முதலிய தமிழறிஞர்கள், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே திராவிடம், திராவிடர் என்ற சொற்களை மொழி, மரபின அடிப்படையில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்ப்பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தினர்.

மேற்சொன்னவர்களில் மு. சீனிவாச அய்யங்கார் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே திராவிடம் என்பதை ஆரிய -பார்ப்பன மேன்மைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான கருத்தாக்கமாகப் பயன்படுத்தினர். ஆரியம் - திராவிடம் என்ற எதிர்வு நிலைகளை நீதிக் கட்சியிலிருந்த தமிழர்கள் மட்டுமல்லாது அக்கட்சிக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திலிருந்த பார்ப்பனரல்லாத தமிழர்களும் கூடப் பயன்படுத்தினர் (Irschik, 277-289). தமிழ் மாவட்டங்களில் இருந்த நீதிக்கட்சிக் கிளைகள் திராவிட சங்கங்கள் என அழைக்கப்பட்டன (கேசரி,60). நீதிக்கட்சியின் அதிகாரபூர்வமான தமிழ் ஏட்டிற்கும் ‘திராவிடன்’ என்ற பெயரே இடப்பட்டது.

தமிழர்களின் மொழி, பண்பாட்டு, மரபின, நாகரிக அடையளக் குறிப்புச் சொற்களாக திராவிடம், திராவிடர் ஆகியன நீதிக்கட்சியிலிருந்த தமிழர்களால் பயன்படுத்தப்பட்டன. எடுத்துக் காட்டாக , 1918 இல் மதுரையில் நடந்த ஒரு பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் பேசிய தங்கவேலு பிள்ளை என்ற நீதிக் கட்சி உறுப்பினர், ‘பண்டைய, வரலாற்றுப் புகழ் பெற்ற நகரமான மதுரை, திராவிட நாகரிகத்தின், திராவிட இலக்கியத்தின் தொட்டில்’ என்றும் ‘திராவிடர்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் இந்தத் தொன்மையான நகரத்தின் பொது வாழ்க்கையின் வளர்ச்சியுடனும் மேம்பாட்டுடனும் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது’ என்றும் ‘அந்த நகரம் நமது சமுதாயத்தின் சமூக, கல்வி, அரசியல் வளர்ச்சியுடன் இருப்பிடமாக இருந்து வந்துள்ளது’ என்றும் குறிப்பிட்டார் (Irschik, 289). நீதிக் கட்சியின் பார்ப்பன எதிர்ப்புக் கருத்தியலில் திராவிடம் என்பது தொடர்பான மொழியியல், பண்பாட்டு, மரபினச் சொல்லாடல்கள் இடம் பெற்றிருந்த போதிலும், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழறிஞர் களிடையே செல்வாக்குச் செலுத்தி வந்த அளவுக்கோ நீதிக்கட்சியிலிருந்த தமிழ் உறுப்பினர்களிடையே செல்வாக்குச் செலுத்தி வந்த அளவுக்கோ அக்கட்சியிலிருந்த பிற மொழியினரிடையே அவை செல்வாக்குச் செலுத்த வில்லை. 1917 இல் சென்னையில் நடந்த முதல் நீதிக்கட்சி மாநாட்டில் தலைமையுரையாற்றிய பிட்டி தியாகராயர், திராவிட நாகரிகம், திராவிடர் என்று பேசுகையிலும் வட அவற்றைத் தமிழ் நாகரிகம், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றுடனேயே தொடர்புபடுத்தியது குறிப்பிடத்தக்கது:

‘திராவிட நாகரிகத்தின் மேதமை, மனிதனுக்கு மனிதன் பிறவியிலேயே வேறுபாடு இருப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. திராவிடச் சிந்தனையின் தலைவர்களான திருவள்ளுவர், அவ்வை, கம்பர் ஆகியோர் கடவுளின் தலையிலிருந்து பிறந்தவர்களாக உரிமை பாராட்டுவதில்லை... பிறப்பால் ஏற்படும் வேறுபாட்டை அறிமுகப் படுத்தியவர்கள் ஆரியர்கள் தான். அவர்கள்தான் அந்த வேறுபாட்டை விரிவு படுத்தி வருணாசிரம தர்ம அமைப்பை உருக்கினர் (Irschik, 289)’.

‘நீதிக்கட்சியிலிருந்த தெலுங்கர்களில், மரபின அடிப்படையில் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோரை உள்ளடக்கும் வகையில், ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பார்ப்பன எதிர்ப்புக்குப் பயன்படுத்தியவர்கள் கே.வி.ரெட்டி நாயுடு போன்ற விதிவிலக்கான ஒரு சிலரே (Irschik, 276). அவரும் கூட காஞ்சிபுரத்தில் 1938 பிப்ரவரியில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசுகையில், அம் மாநாட்டில் பேசிய நீதிக்கட்சி மலையாளியான கிருஷ்ணன் நாயரைப் போலவே, குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகியவற்றின் சிறப்பைப் பற்றியே குறிப்பிட்டார். தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ்தான் என்ற கால்ட்வெல்லின் கருத்தை அவர்கள் ஒப்புக் கொண்டிருந்ததால் தமிழை அவர்கள் உயர்வாகக் கருதினர் ’.

‘தென்னாடு போந்த திராவிட ஆரியர்’ என்ற மறைமலையடிகளால் குறிப்பிடப்பட்ட பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் குடியேறியதாலும் அவர்கள் தாக்கம் தமிழ்நாட்டிலேயே அதிகம் இருந்ததாலும் பார்ப்பன எதிர்ப்புக் குறியீடாகிய ‘திராவிடர்’ என்ற சொல் தமிழ்நாட்டில் அதிக வலிவு பெறத் தொடங்கியது என்றால் மிகையாகாது. எனினும் நடுநிலையில் நின்று தோழர்கள் எஸ்.வி.இராசதுரை அவர்களும் தோழர் வ.கீதா அவர்களும் ஆராய்ந்துள்ளார்கள். எனவே தான் அவர்கள் தங்களது ஆய்வை கீழ்க்கண்டவாறு தொடருகிறார்கள்,

எது எப்படியிருப்பினும் திராவிடம் என்பதுடன் பிற மொழியினரை விடக் கூடுதலாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் நீதிக்கட்சியிலும் அதற்கு வெளியிலும் இருந்த தமிழர்கள்தான். அதற்கான சமூக, பண்பாட்டுக் காரணங்களை இர்ஷிக் கூறுகிறார்:

திராவிடம் என்பது அதனுடைய மரபினப் பொருளில் மிகத் தொடக்கக் கட்டத்தில் தமிழ் மொழி பேசுபவர்களுடன் மட்டும் தான் அடையாளப் படுத்தப்பட்டது. ஏனெனில், நவீன இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகளில் மிகத் தொன்மையானது தமிழ்தான் என்று கருதப்பட்டது. திராவிடர் என்ற தகுதிக்கு உரிமை பாராட்டிக் கொள்வதில் தெலுங்கர்களுக்கு அத்தகைய ஆர்வம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில், தமிழைப் போலன்றி தெலுங்கு மொழி ஏராளமான சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டிருக்கிறது. அக் காரணத்தால், தெலுங்குப் பண்பாடு என்பது ஆரியச் செல்வாக்கு எனக் கூறப்படுமொன்றிக்குக் கட்டுப்படாத சுயேச்சையான பண்பாடு என்று உரிமை பாராட்டிக் கொள்வதற்கான வாய்ப்பைக் குறைத்தது. மற்றொரு காரணம் என்னவென்றால் வேளாளர்களுக்கும் தமிழ்ப் பார்ப்பனர்களுக்குமிடையே இருந்த போட்டியுணர்வு, பகைமையுணர்வு ஆகியவற்றுடன் ஒப்பிடத் தக்க வகையில், ஒருபுறம் காப்புகள், கம்மாக்கள், (தெலுங்கு வேளாள (விவசாய) - சூத்திர சாதியினர் -நூலாசிரியர்கள் எஸ்.வி.இராசதுரை, வ.கீதா) ஆகியோருக்கும் மற்றொருபுறம் பார்ப்பனர்களுக்குமிடையில் எதிரெதிர் துருவ நிலைகள் தெலுங்குப் பகுதியில் இருக்கவில்லை. இக் காரணங்களால், தென்னிந்தியாவில் முதன்மையான திராவிட மொழிக் குழுக்கள் அனைத்தையும் சேர்ந்த பார்ப்பனரல்லாதார், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் சேர்ந்த போதிலும், திராவிடம் என்பதை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது என்பது தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாதாரிடம் மட்டுமே படிப்படியாக குறுக்கப்பட்டு நின்றது (Irschik, 275-276).

பார்ப்பனரல்லாதார் இயக்கம், பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியுள்ளவர்களிற் மிகப் பெரும்பாலானோரைப் போலவே, இர்ஷிக்கும் ‘அயோத்திதாசரின் திராவிட மகாஜன சபை ’, எம்.சி.ராஜாவின் ‘ஆதி திராவிட மகாஜன சபை ’, ரெட்டைமலை சீனிவாசனின் ‘பறையர் மகாஜன சபை’ போன்ற அமைப்புகளின் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டத்தைக் கருத்தில் கொள்வதில்லை.

அயோத்திதாசர், திராவிடம், தமிழ் ஆகிய இரண்டும் ஒரே பொருள் தருவதாகவே கருதினார். எடுத்துக்காட்டாக அவர் எழுதிய வரிகளிற் சில : ‘.... புத்தபிரான் சகட பாஷையாம் சமஸ்கிருதத்தையும் திராவிட பாஷையாம் தமிழையும் வரிவடிவி லியற்றி திரிபேத வாக்கியங்களையும் அதன் உபநிட்சயார்த் தங்களையும் வரைந்துள்ள போதினும் ஒவ்வோர் புத்த சங்கங்களிலுமிருந்த சமணர்களும் பிராமணர்களும் புத்த தன்மங்களை பெரும்பாலும் சகட பாஷையில் உபயோகித்து வந்தார்கள்’ (ஒரு பைசாத் தமிழன், 24.6.1908). ‘சாதி பேதமற்ற திராவிடர்களாம் சுதேசிகளின் திருத்தம்’ (தமிழன், 2.12.1908). தமிழ் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரை ‘திராவிடர்’ என அயோத்தி தாசரும் ‘ஆதி திராவிடர்’ என எம்.சி.ராஜா, வீரையன் போன்றோரும் அடையாளப்படுத்தினர்.

எனவே திராவிடம், திராவிடர், திராவிட நாகரிகம் என்பன தமிழர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட மொழி, பண்பாட்டு, சமூக, மரபின, அரசியல் குறிப்புச் சொற்களே என்பதும் இந்தி எதிர்ப்புப் போராட்டக் கால கட்டத்தில் முகிழ்த்த தமிழ்த் தேசிய அரசியலுக்கான குறிப்புச் சொல்லாக அமைந்தன என்பதும் அத்தமிழ்த்தேசிய அரசியலுமே ஏறத்தாழ 50 ஆண்டுகாலப் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களின் அளவு ரீதியான வளர்ச்சி பண்புரீதியான பாய்ச்சலாக மாறியதன் வெளிப்பாடே என்பதும் தமிழர்களின் சுய அடையாளத்தையோ தேசிய உணர்வையோ நசுக்குவதற்காக நீதிக்கட்சியிலிருந்த தெலுங்கர்களாலோ உருவாக்கப்பட்டவையல்ல என்பதும் தெளிவு. இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சியிலிருந்த பார்ப்பனரல்லாத தமிழர்களிடம் இருந்த தமிழ் மொழி உணர்வுக்கும் தமிழ் மொழியின் அடிப்படையில் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கைக்கும் ஈடான தெலுங்கு மொழி வேட்கையும் அம் மொழியின் அடிப்படையிலான அடையாள வேட்கையும் தெலுங்கர்களிடையே இருக்கவில்லை. அவர்கள் பிரதேச அடிப்படையிலான அடையாளத்தையே - அதாவது ஆந்திரர் என்பதையே விரும்பினர். நீதிக்கட்சியிலிருந்த (அதற்கு வெளியிலுமிருந்த) தமிழர்களைப் போலவே, பெரியாரும் திராவிடம் என்ற குறிப்புச் சொல்லை முதன்மையாக தமிழர்களையும் தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றையும் மட்டுமே குறிக்கப் பயன்படுத்தினார்.

(தொடரும்)

- கவி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty Re: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 6:52

பெரியார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் ஏற்பட்ட எழுச்சியைத் திசைத் திருப்பவே திராவிடநாடு கோரிக்கையை எழுப்பினார் என்பது போன்ற அபத்தமான ஆராய்ச்சிகளுக்கு கூட தோழர்கள் எஸ்.வி.இராசதுரை, வ.கீதா கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கின்றனர். ஒரு தனி நாட்டுக் கோரிக்கைக்கான ஆதரவு ஏன் தமிழ் (அல்லது தெலுங்கு) முதலாளிகளிடமிருந்து வரவில்லை என்றும் பார்ப்பனிய ஒழிப்பு இல்லாத தமிழ்த்தேசியம் யாருக்குப் பயன்படும் என்றும் மக்கள் ஆதரவு என்பதை முன் நிபந்தனையாகக் கொண்டுதான் தனிநாட்டு அல்லது தன்னுரிமைக் கோரிக்கையை ஒரு இயக்கம் எழுப்ப வேண்டுமா? என்பது போன்ற நியாயமான கேள்விகளையெல்லாம் தோழர்கள் எஸ்.வி.இராசதுரையும் வ.கீதாவும் எழுப்புகின்றனர்.
பெரியார் திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்த போது, அக்கோரிக்கைக்கு காங்கிரஸ் தேசியவாதிகள், கம்யூனிஸ்ட் தேசியவாதிகள், தமிழ்ப்புலவர்கள் முதலியோரின் பங்களிப்பு என்ன என்பதையும் ஆராய வேண்டும். இது குறித்து தோழர்கள் எஸ்.வி.இராசதுரை, வ.கீதா ஆகியோர் பின்வருமாறு ஆராய்கின்றனர்:
தெலுங்கு, ஆந்திர முதலாளிகளின் நலன்களைக் காக்கவும் ஆந்திரர்களின் (தெலுங்கர்களின்) ஆதிக்கத்திற்காகவும்தான் திராவிடம் என்ற கோட்பாட்டை உருவாக்கி தமிழ்த் தேசியத்தை வஞ்சித்துவிட்டார் என்ற கருத்து இன்று பரப்பப்பட்டு வருகின்றது. முதலாவதாக நீதிக்கட்சியிலிருந்த தெலுங்குப் பணக்காரர்களும் முதலாளிகளுமான பொப்பிலியும் வெங்கிடகிரி ராஜாவும் (ஜமீனதாரும்) 1939 ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சியிலிருந்து விலகி விட்டனர். தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கு பேசும் முதலாளிகள் அத்தகைய கோரிக்கையை எழுப்பவில்லை. ஆந்திர வர்த்தகர்களும் முதலாளிகளும் தனியாக வர்த்தக சபை வைத்துத் தங்கள் நலன்களைத் தமிழ்நாட்டு முதலாளிகளிடமிருந்து காக்க முயன்றனர். தென்னிந்திய பூர்ஷ்வாக்களிடையே இருந்த முரண்பாடுகள், அவர்களுக்கும் வட இந்தியப் பெரு முதலாளிகளுக்குமிடையே இருந்த முரண்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு செய்துள்ள ராமன் மகாதேவன்....1930 களிலிருந்தே தென்னிந்திய பூர்ஷ்வா வர்க்கத்தின் மிகப் பெரும்பகுதி - தமிழ்நாட்டில் (குறிப்பாக கோவையில்) உள்ள தெலுங்கு பேசும் முதலாளிகள் உட்பட - காங்கிரசை ஆதரித்து வந்ததற்கான சான்றுகளையே தருகிறார் (R.M.234-262).
மேலும், திராவிட நாட்டுக் கோரிக்கையை (அல்லது தனி சென்னை மாநிலக் கோரிக்கை) 30.4.1942 இல் கிரிப்சுடன் விவாதிப்பதற்காகப் பெரியாருடன் சென்றவர்களான எம்.ஏ.முத்தையா செட்டியார், செளந்தர பாண்டியன், சாமியப்ப முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் முதலாளிகள்தான் (ESV, 287). உண்மையில் திராவிட நாட்டில் தமிழர்களின் ஆதிக்கம் இருக்கும் என ஆந்திரர்கள்தான் அஞ்சினர். அதனால்தான் 1930களிலேயே அவர்கள் தனி வர்த்தக சபை அமைத்துக் கொண்டதோடு தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலுவாக ஆதரித்தும் வந்தனர். ஆந்திர மாநிலக் கோரிக்கையை 1937-39 இல் நசுக்கியவர், இன்றைய ‘தனித் தமிழர்’களின் திடீர் அன்புக்குப் பாத்திரமாயுள்ள ராஜாஜிதான்.
பெரியாரின் திராவிட நாட்டு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து துரோகமிழைத்தவர்களை பின்வருமாறு பட்டியலிடுகிறார்கள் தோழர்கள் எஸ்.வி.இராசதுரையும் வ.கீதா அவர்களும்:
பெரியாரின் திராவிட நாட்டுக் கொள்கையைத் தமிழ் முதலாளிகள் எந்த அளவுக்கு ஆதரித்தனர்? சுயமரியாதை இயக்கத்தில் இருந்த காலத்திலும் கூட ஆர்.கே. சண்முகம் காங்கிரஸின் வெளிநாட்டுத் துணிப் புறக்கணிப்பு, கதர்த்திட்டம் ஆகியவற்றை ஆதரித்தார் என்றும் அது தனது ஜவுளி ஆலை வளர்ச்சிக்கு உதவும் எனக் கருதினார் என்றும் ராமன் மகாதேவன் கூறுகிறார் (R.M.234-262). 1945 இல் ஆர்.கே. சண்முகம் இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது என்று கூறிவிட்டார் (குஅ,3.3.1945). 1946-க்குப் பிறகு குமாரராஜா எம்.ஏ. முத்தையா செட்டியாரும் நீதிக்கட்சியிலிருந்து விலகி விட்டார். அவரைப் பெரியார் பல ஆண்டுகள் விமர்சிக்கவும் செய்திருக்கிறார்; ஆதரிக்கவும் செய்திருக்கிறார். கி.ஆ.பெ. விசுவநாதம், செளந்திர பாண்டியன், பி.டி.ராஜன் ஆகிய செல்வந்தர்களும் 1945 இல் பெரியாரை விட்டு விலகினர் (ESV, 297) குமாரராஜாவும் பொப்பிலியும் 1946 இல் சென்னை மாகாண காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களால் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (திராவிட நாடு, 28.7.46). 1952 இல் திராவிட நாட்டுப் பிரிவினையை ஆதரிக்கக் கூடிய ஒரு முதலாளி கூட இருக்கக் கூட இல்லை. 1952 இல் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டிற்கு வந்திருந்த ‘தெலுங்கு முதலாளி’ ஜி.டி.நாயுடு நாட்டுப் பிரிவினையை எதிர்த்துப் பேசிவிட்டுச் சென்றார். (விடுதலை, 22.6.1952, ஈவெராசி,623).
பெரியாரின் திராவிட நாடு எப்படிப்பட்டதாக இருக்கும்? பெரியாரின் நோக்கம் என்ன? என்பது பற்றியும் தோழர்கள் எஸ்.வி.இராசதுரையும் வ.கீதா அவர்களும் பின் வருமாறு விளக்குகின்றனர்:
பெரியாரும் அவரது இயக்கதினரும் திராவிட நாடு என்ற குறிப்புச் சொல்லால் அடையாளப்படுத்தியது சாதியற்ற, பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற, ஆணாதிக்கமற்ற ஒரு சமூக அமைப்பைத்தான். அதற்காக அவர்கள் நடத்திய போராட்டங்கள் வெறும் அடையாளப் பூர்வமானவை என்றும் கூடச் சிலர் கூறலாம். அவர்கள் அடைந்த இன்னல்களும் இழப்புகளும் கணிசமானவை.
பெரியாரின் நாத்திகமும் பார்ப்பன - பனியா எதிர்ப்பும், விரிந்த சந்தைக்காக வட இந்தியப் பெரு முதலாளிகளின் உறவை நாடிய தமிழ் பூர்ஷ்வாக்களுக்கு இடைஞ்சலாகவே இருந்திருக்கும். ... பெரியார் தனது திராவிட நாடு, தமிழ்நாடு கோரிக்கையில் எப்போதும் முதன்மைப் படுத்தியது பார்ப்பன- பார்ப்பனிய எதிர்ப்பைத்தான். அதுவே அவரது பலமும் பலவீனமும். எனினும், சமுதாய, பொருளாதார, பண்பாட்டு மாற்றத்தை விரும்புகிற வேறு எந்த ஒரு இயக்கமும் பார்க்கத் தவறிய பார்ப்பனியத்தை இடைவிடாது சுட்டிக்காட்டி வந்ததில்தான் அவரது பெருமை தங்கியிருக்கிறது. ... கட்டாய இந்தியை ஆதரித்த தமிழ் நாட்டுக் கம்யூனிஸ்டுகளுக்கு பதில் சொல்வதற்காக லட்சுமிரதன் பாரதி 1932 இல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட டிராட்ஸ்கியின் ‘ரஷ்யப் புரட்சியின் வரலாறு’ என்ற நூலில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய லெனினியப் பார்வை குறித்து எழுதப் பட்டுள்ள அத்தியாயத்தின் சுருக்கத்தைத் தந்ததுடன் அதை இந்தியச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கும் முயற்சியையும் செய்தார்.
பெரியார், 1956 இல் மொழியடிப்படையிலான மாநிலங்கள் அமையும் வரை, திராவிட நாடு கோரிக்கையை வைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பான ஏராளமான போராட்டங்களை நடத்தியுமிருக்கிறார். அது தனி வரலாறு. பொருளாதாரச் சுரண்டலும் பார்ப்பனியமும் சாதியமும் நீங்கப் பெற்ற ஒரு சமுதாயத்தை, அந்த சமுதாயத்தை அமைப்பதற்குத் தேவையான நிலப் பகுதியைக் குறிக்கவே ‘திராவிடம்’ என்ற குறிப்புச் சொல் அவருக்குப் பயன்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பல்வேறு நீரோட்டங்கள் ஒன்று கலந்ததன் விளைவாகவே மொழியடிப்படையிலான தமிழ்த் தேசியம் தோன்றியது என்றாலும் அதற்கும் கூட பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தினரும்தான் ‘கிரியா ஊக்கிகளாக’ இருந்தனர். எனினும் அவரது தனித்தமிழ்நாட்டுக் கொள்கை மொழியடிப்படையில் இருக்கவில்லை. மொழியடிப்படையில் தமிழ் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிய போதிலும், பார்ப்பனிய ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்பதற்கே அவர் முதன்மை தந்தார் என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம்....
அதனால் தான் சென்னை மாகாணம் என்ற திராவிட நாட்டுப் பிரிவினையை மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து கிளர்ச்சி செய்து கொண்டிருந்த காலத்திலேயே, அவரைச் சந்தித்த டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் மூஞ்சேவும் ‘திராவிடம்’ என்ற குறிப்புச் சொல்லால் பெரியார் உணர்த்திய சாதியற்ற ஒரு சமூக அமைப்பை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்துவதைப் பற்றி அவர் யோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். (குஅ,30.9.1944, 7.10.1944). ஜின்னா, பார்ப்பனியக் காங்கிரசையும் இந்து மதத் தலைவர்களையும் தீவிரமாக எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை ‘அகில இந்திய திராவிடத் தலைவர் ’ என்று ‘குடிஅரசு ’ ஒரு முறை அழைத்திருக்கிறது (குஅ,28.7.40). அம்பேத்கரை ‘அகில இந்திய ஆதி திராவிடர்கள் தலைவர் ’எனக் கூறி வந்திருக்கிறது. 1944 டிசம்பரில் கான்பூரில் நடந்த பார்ப்பனரல்லாத பிற்பட்டோர் மாநாடுகளில் பெரியார் கலந்து கொண்டார் (ஈவெராசி யீணூ). வெறும் மொழியடிப்படையில் மட்டுமே ஆந்திர, மலையாள, கன்னடப் பகுதிகள் சென்னை மாநிலத்திலிருந்து பிரிந்து சென்று தனி மாநிலங்களை அமைத்துக் கொள்வதால் அம் மாநில மக்கள் பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்தும் இழிவு நிலையிலிருந்தும் விடுதலை பெற முடியாது என்று கூறினார். எனினும் எஞ்சிய தமிழ்ப் பகுதியையே அவர் ‘திராவிட நாடாக’ ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அவரது தொடக்கக் காலப் பிரிவினை முழக்கமான தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு மீண்டும் வந்து சேர்ந்தார். ‘தன்னால் இவ்வளவுதான் முடியும்’ என்று கருதிச் செயல்படுவதுதான் அவரது போக்கு. ஆந்திரப் பிரிவினைக் கோரிக்கை தொடர்பாக அவர் கூறிய சில சொற்களைப் புரிந்து கொண்டால்தான் அவரது இலட்சியத்தைப் புரிந்து கொள்ள முடியும்: நான் விஸ்தீரணத்துக்காகப் போராடுகிறவன் அல்லன்; சுதந்திரத்திற்காகப் போராடுகிறவன் (விடுதலை, 7.8.53, ஈவெராசி, 727).
சுதந்திரம் என்பது அவரைப் பொருத்தவரை முதன்மையாகவும் முதலாவதாகவும் பார்ப்பனிய ஆதிக்கம் நீங்கிய நிலை. அதனால் தான் வெறும் மொழியடிப்படையிலான தமிழ்த் தேசியத்தை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். மூவேந்தர், கண்ணகி, கற்புக்கரசி, ராஜராஜ சோழன், ராஜாஜி, காந்தி இவையெல்லாம் கலந்த ம.பொ.சி.யின் தமிழ்த் தேசியத்தை அவர் எதிர்த்தார்."
பெரியாரின் ‘தமிழ்த் தேசியம்’ எது என்பதை மேலே விளக்கிய தோழர்கள் எஸ்.வி.இராசதுரை, வ. கீதா ம.பொ.சி.யின் பங்களிப்புப் பற்றியும் விவரிக்கிறார்கள்:
தமிழ்நாட்டில் பார்ப்பனிய-பனியா எதிர்ப்பு உணர்வு பெரியார் இயக்கத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த காலத்தில் தான், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகமும் அவரது தமிழ்த் தேசியமும் தோன்றின. தமிழ் நாடு காங்கிரஸில் ராஜாஜி, சத்தியமூர்த்தி கோஷ்டித் தகராறும் பின்னர் ராஜாஜி, காமராஜ் கோஷ்டித் தகராறும் இருந்த காலத்தில் ராஜாஜியின் அரும்பெரும் சீடராக இருந்தவர் ம.பொ.சி. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகும் உண்மைக் காங்கிரஸ்காரராகவே இருந்து, 1967 இல் அண்ணாவால் முதன் முறையாக அரசாங்கப் பதவிக்கு வந்து, அவசர நிலைக் காலத்தில் தி.மு.க. தொடர்பிலிருந்து துண்டித்துக் கொண்டு, எம்.ஜி.ஆரின் தயவால் மீண்டும் அரசாங்கப் பதவிகளைத் துய்த்து விட்டு பின்னர் ராஜிவ் காலத்தில் மீண்டும் தனது தாய்க்கட்சியான காங்கிரஸில் சேர்ந்து அமரரானவர் அவர்! 1945 முதல் பெரியாரின் இயக்கத்தை எதிர்ப்பதற்காக காங்கிரஸ், பார்ப்பனச் சக்திகளால் பயன்படுத்தப்பட்டவர். அவரது ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தையும்’,‘கற்புக்கரசி கண்ணகி’ யையும் பார்ப்பனிய, ஆணாதிக்கப் பண்பாட்டுச் சின்னங்களாகவே பெரியார் பார்த்தார். சரியான வரைவிலக்கணங்களற்ற, குழப்பமான, ‘திராவிட தேசியம்’ என்பதற்கு மாறாக, மொழியடிப்படையிலான தமிழ்த் தேசியத்தை அறிவியல் ரீதியாக முன் வைத்தவர் ம.பொ.சி. என்றும் பிரிட்டிஷ் ஆதரவு பெரியாருக்கு எதிராக ஏகாதிபத்திய விரோத ம.பொ.சி முன்வைத்த கோரிக்கை என்றும் இன்று சில பார்ப்பன தேசிய ஆராய்ச்சி மணிகள் எழுப்பும் ஒலியை இன்று அவர்களது ஈழத்து அடியார்கள் சிலரும் கூட எதிரொலிக்கின்றனர். (சிங்கள இனவாதத்தால் அழிக்கப்பட்டு வரும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக சென்ற இந்திய அமைதிப் படையின் அக்கிரமங்கள் பற்றியோ ஈழத் தமிழர்களின் உரிமைகள் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசாதிருந்தவர் தான் ம.பொ.சி.- நூலாசிரியர்கள் எஸ்.வி.இராசதுரை- வ.கீதா) . எனவே அவரது தமிழ்த் தேசியம் பற்றிச் சில வி­ஷ‌யங்கள் சொல்லப்படுவது அவசியம்.
‘தமிழ் முரசு’ இரண்டாம் புத்தகத்தில் ‘தமிழர்க்கும் சுயநிர்ணயம்’ என்ற தலைப்பில் ம.பொ.சி எழுதியதை பின்வருமாறு விளக்குகின்றார்கள் தோழர்கள் எஸ்.வி.இராசதுரையும் வ.கீதா அவர்களும்:
தனித்தனி அரசாக அமைந்தால்தான் வருங்கால சுதந்திர இந்தியா அமைதியாக நிலவ முடியும். நாட்டை, இனத்தை, மொழியை அடிப்படையில் பிரிக்க வேண்டுமே ஒழிய மதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரித்தால் தமிழ் நாட்டில் இந்து ராஜ்ஜியம் தான் ஏற்படும். இதைத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். அப்படி தமிழ்நாடு, தனிநாடாக ஆக்கப்பட்டால் அது தன்னுடன் தொடர்பு கொண்டுள்ள தெலுங்கு, கன்னட, கேரள நாடுகளுடன் ஒரு சமஷ்டி ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இக்கருத்துக்கள், திராவிடர் கழகத்தின் திராவிட நாட்டுக் கொள்கைக்கு முரண்பட்டவையல்ல என்று அண்ணா எழுதினார். ஆனால் ம.பொ.சி. யின் இந்த தமிழர் சுயநிர்ணயம் ஏழாண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. இது குறித்து விடுதலை 4.2.1953 இதழில் ‘பொய் பொய் சுத்தப் பொய்’ என்ற தலைப்பில் சா. குருசாமி எழுதிய தலையங்கம் கீழ் வருமாறு:
உயர் திரு ம.பொ.சி. அவர்களைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வந்தது. அதற்குப் பதில் தரும் வகையில் திரு. ம.பொ.சி. அவர்களால் எழுதப்பட்ட கடிதம் நேற்றைய ஹிந்து இதழில் வெளிவந்திருக்கிறது: ‘சுதந்திரத் தமிழ்க்குடியரசு தேவையென்று நான் கூறியிருப்பதாக இந் நிருபர் கூறுகிறார். தமிழரசு மாநாட்டிலோ அல்லது வேறெங்குமோ என் ஆயுளில் இதுவரையில் எங்குமே இது மாதிரி பேசியது கிடையாது. இந்த மாதிரியான பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக் கழகம் துவக்கப்பட்டது. இந்த விவரம் மதிப்புக்குரிய ராஜாஜி அவர்களுக்கும் இந்த மகாணத்துக் காங்கிரஸ்காரருக்கும் நன்றாகத் தெரியும். இன்றைய இந்திய யூனியனின் ஒரு பகுதியான மொழிவாரி மாகாணம் ஏற்பட வேண்டுமென்ற இந்தக் கொள்கையை காங்கிரசும் ஒப்புக்கொள்கிறது என்பதை என் சொற்பொழிவில் விளக்கியிருக்கிறேன் ’ என்பதுதான் நண்பர் சிவஞானம் அவர்களின் பதில். மதிப்புக்குரிய ராஜாஜியை தமக்குச் சான்றுக்காக அழைத்து அவருக்கும் வெண்சாமரத்தை வீச வேண்டிய நெருக்கடியான நிலைமை ‘நமது வீரபாண்டியன் ’ ம.பொ.சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தத் தமிழனும் தலைகுனிந்தே தீர வேண்டும். கேவலம் ஒரு சட்டசபை மெம்பர் பதவிக்காக நமது மாபெரும் வீரர் இப்படி ஆரியத்தின் அடி பணிகிறார் என்று அவர்களது சீடர்களிலேயே பலர் நினைத்து வேதனைப்படுவர் என்பது நிச்சயம்.
இத் தலையங்கத்தில் ம.பொ.சி. முன்பு எழுதிய கருத்துக்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன:
‘தமிழகத்தின் அரசியல் பிற இனத்தவரின் தடையின்றி நடைபெற வேண்டும். அதற்காகத்தான் சுதந்திரத் தமிழரசு, அதை அமைக்கும் சுயநிர்ணய உரிமை கோருகிறோம். சுதந்திர சோ­லிச தமிழ் குடியரசு என்ற சொற்றொடரை ஒவ்வொரு கட்டத்திலும் ஒளிவு மறைவின்றி அழுத்தந்திருத்தமாக கழகம் வற்புறுத்தி வந்திருக்கிறது’. ( 1.11.47 தமிழ் முரசு தலையங்கத்தில் 4-5 பக்கங்களில் உள்ளவை).
‘மேற்சொன்ன புதிய தமிழகத்தைச் சுதந்திர நாடாகச் செய்வதுடன் உழைப்பாளிக்கே உரிமை என்ற கொள்கையுடையதும் உழைப்புக்கும் தேவைக்கும் ஏற்ற ஊதியம் தருவதுமான சோஷ‌யலிசக் குடியரசு நிறுவுவது’ என்பது ‘தமிழரசுக் கழகக் கொள்கைகள் ’ என்ற தலைப்பில் மூன்றாவது கொள்கையாக 1.6.47 தமிழ் முரசு இதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. பிற இனத்தவரின் சுரண்டலுக்கு தமிழ்நாடு இரையாகக் கூடாது என்பதே தமிழரசுக் கழகத்தின் தலையாய கொள்கை ’(15.6.47 தமிழ் முரசு 4-ஆம் பக்கம் தலையங்கம்).
அரசியல் நிர்ணய மன்றத்தார் தயாரித்துள்ள புதிய அரசியலானது கடந்த கால ஏகாதிபத்திய இந்தியாவில் அமுலிலிருந்து அரசியலின் நகல் போன்றதாகும் (1.11.47 தலையங்கத்தின் இறுதியிலுள்ள பகுதி).
மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பதைக் காங்கிரஸ் 1920-களிலேயே தனது கொள்கையாக அறிவித்திருந்த போதிலும் தங்கள் ஆட்சிக் காலத்தில் மக்கள் போராடிய பிறகே அதனை நடைமுறைப்படுத்தினர் என்பது வரலாறு. ராஜாஜியின் 1937-39 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சென்னை சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆந்திர மாநிலப் பிரிவினைத் தீர்மானத்தை ம.பொ.சி.யின் குருநாதரான ராஜாஜிதான் கொன்று புதைத்தார். அன்றைய சென்னை மாநிலத்திலிருந்து தமிழ் மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்பதை முதன் முதலாக ஒரு அரசியல் முழக்கமாக எழுப்பியது பெரியார் நடத்திய இந்திக் கிளர்ச்சிதான். தான் கோரிய திராவிட நாட்டிலும் மொழிவாரியான பிரிவினைகள் அனுமதிக்கப்படும் என்றுதான் பெரியாரும் கூறினார். அவர் நீதிக் கட்சித் தலைவர் பொறுப்பேற்றதும் ஆந்திர மாநிலப் பிரிவினையின் நியாயத்தை அங்கீகரித்தார். பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட இந்திக் கிளர்ச்சியில் ஒடுக்குமுறை பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து ஒரு சொல் கூடப் பேசாதிருந்த ம.பொ.சி., 1953 இல் ஆந்திர மாநிலப் பிரிவினை கேட்டு ஆந்திரர்கள் போராடத் தொடங்கிய போது, தமிழ் நாட்டின் எல்லைகளைக் காக்கப் போராட்டத்தில் இறங்கியது குறித்துப் பெரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார்:
பிரிவினை, ஆந்திரா - தமிழ்நாடு என்பது பற்றி 1926-லேயே முடிந்து விட்டது. அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்து போய்விட்டன. இன்றைக்கு 30 வரு­ஷ‌‌ங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன. இந்த 30 வருஷ‌­ங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசை, அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை. யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை. தமிழர்களில்தான் ஆகட்டும். இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே வீரர்கள். இவர்கள் இந்த 20, 30 வருட காலமாக என்ன செய்தார்கள்? இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்துக்கு, பிழைப்புக்கு ஒரு வகை செய்வது போன்ற சுயநலன்களுக்குக் கூப்பாடு போடுகிறார்களே தவிர குமரி முதல் வேங்கடம் வரை என்கின்ற அறிவு இன்றைக்கு வருவானேன்? (விடுதலை, 7-8.1.53: ஈவெராசி, 723-724).
மொழியடிப்படையில் பிரிவதால் மட்டுமே விடுதலையடைந்து விட முடியாது என்று பெரியார் கூறிவந்த போதிலும், மொழிவாரி மாநிலப் பிரிவினையை ஏற்றுக் கொண்டார். சென்னை நகரம் தமிழர்களுக்கே என்பதில் உறுதியாகப் போராடினார். தமிழ்ப்பகுதியை அதற்குரிய தமிழ்நாடு என்று பெயரிடாமல் சென்னை மாகாணம் என்று காங்கிரஸ் அரசாங்கம் அழைத்து வந்ததைக் கடுமையாகச் சாடி வந்தார். தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்தார். ...1949 இல் அண்ணா தலைமையில், ஏற்படுத்தப்பட்ட பிளவு, பெரியாரின் இயக்கத்திற்குப் பலத்த அடியாக அமைந்தது. 1935 ஆம் ஆண்டு அரசியல் சட்டம், 1950 ஆம் அரசியல் சட்டம், காங்கிரஸின் செல்வாக்கு, அம்பேத்கரின் அனைத்திந்திய ஆளுமைக்கு இருந்த கவர்ச்சி ஆகியவற்றின் காரணமாக கணிசமான தாழ்த்தப்பட்டோர் காங்கிரசுக்கும் செட்யூல்ட் வகுப்பினர் பெடரே­னுக்கும் (பின்னர் இந்திய குடியரசுக் கட்சி) சென்று விட்டனர். ராஜாஜி பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து அதை வெற்றி பெறச் செய்தார் என்பதற்காக முஸ்லிம் தலைமை 1950களிலேயே ராஜாஜியை ஆதரிக்கத் தொடங்கியது. 1960களில் ராஜாஜி சுதந்திராக் கட்சியைத் தொடங்கிய போதும் அவரை ஆதரித்தது. கிறித்துவர்களிலும் (குறிப்பாக கத்தோலிக்கர்) முக்கிய பிரமுகர்கள் சிலர் (பேராசிரியர் ரத்னசாமி போன்றோர்) ராஜாஜியை ஆதரிக்கத் தொடங்கினர். பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் அச்சமூகங்களில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறவில்லை. எனவே கடைசி நாட்களில் அவர் தனது தொண்டு முழுவதும் இந்துக்களில் சூத்திரர்களாக, ‘வைப்பாட்டி மக்களாக’ வைக்கப்பட்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரியது என்று கருதிச் செயல்பட்டு வந்தார். அவர்களது இழிவை போக்குவதற்கான தீர்வு ‘தனித் தமிழ்நாடு ’ தான் என்று கருதினார்.
(தொடரும்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty Re: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 7:00

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையாரின் சவுக்கடி:

திராவிட நாடு இருந்ததற்கான சான்றுகளைத் தேடி அலையும் தோழர் பெ.மணியரசன் அவர்கள் எளிதில் அடையாளம் காண்கின்ற வகையில், ‘திராவிடம்’ என்பதும் குறித்தும் ‘திராவிடர்’ என்பது குறித்தும் 32 தலைப்புகளில் பன் மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் அவர்கள் எழுதிய ‘இதுதான் திராவிட நாடு’ என்னும் நூலிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன்.

பழைய தமிழகத்தில் இன்றைய இலங்கை ஒரு பகுதி. இதை யவன உரோமர் குறிப்புகளே சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தில் ஓடும் தாம்பிரபரணி - தண் பொருநை - அன்று இலங்கை வழியாக ஓடிற்று. இலங்கையில் அது ஓடிய படுகையையும் விழும் இடத்தையும் இன்றும் காணலாம் என்று பலர் கூறியுள்ளனர். செந்தமிழ் பேசும் மக்கள் பழைய செந்தமிழ் நாட்டெல்லையாகிய இப்பகுதி வரை இன்றும் வாழ்கின்றனர். ஈழத்துத் தமிழ்ப் பெரும் புலவர் ‘யாழ் நூல்’ இயற்றிய விபுலானந்த அடிகள் பிறந்த ஊர் பண்டைச் செந்தமிழ் மாநிலத்தின் இத் தென் கீழ்க் கோடியிலே உள்ளது.

கொங்கு - ஈழம் இந்த இரண்டு சொல்லுக்கும் தமிழில் ‘பொன்’ என்ற பொருள் உண்டு. பொன்னாறே பொன்னியாகிய காவிரி! வடபெண்ணை, தென் பெண்ணை - வடவெள்ளாறு, தென் வெள்ளாறு போல, பண்டு வடபொன்னி, தென்பொன்னி ஆறுகள் இருந்திருக்கலாமோ என்று கூடக் கருதலாம். ஏனெனில் இலங்கையில் இடைக்காலத்தில் சோழர் எழுப்பிய தலைநகரம் பொலன்னருவாவிலும் ஈழம் என்ற இச் சொல்லின் பொருள் தொனிக்கிறது. இரு பொன்னிகளும் ஓடிய நிலங்களின் பெயர்களும் இதற்கேற்ப ஒருமையுடையவையாய் இருக்கின்றன. காவிரிக்கு வடக்கி லுள்ள தமிழகம் பண்டு அருவா என்றும் மாவிலங்கை என்றும் அழைக் கப்பட்டிருந்தது. ஈழம் தென் அருவா அல்லது பொன் அருவா அல்லது பொலன் அருவாவாகவும், தென்னிலங்கை அல்லது சிறு இலங்கை யாகவும் பெயர் பெற்றிருத்தல் இயல்பு.

பழந்தமிழ் நாகரிகம் பல திசையில் கெடாது பேணும் மலையாள மக்க ளுக்கும், இலங்கை வாழ் தமிழர் மட்டுமின்றி இலங்கை வாழ் சிங்கள வருக்கும் பல ஒப்புமைகள் மொழியில் பழக்க வழக்கங்களில், பண்பாட்டில் இன்றும் காணப்படுகின்றன. இவற்றை நாம் தென்கிழக்காசியா எங்குமே காணலாம்....

தமிழகத்தில் உள்ள ஊர்ப்பெயர்கள், மரபுப் பெயர்கள், ஆற்றுப் பெயர்கள் தென்கிழக்காசியாவெங்கும் கடல் கடந்து, சாவா, போர்னியோ, செலிபீஸ் தீவுகள் வரை காணப்படுகின்றன. பண்டைச் சப்பானிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் திரிபே என்று சப்பானிய பழமையாராய்ச்சியாளர் குறித்துள் ளனர்.

சேர நாட்டவரையும் திபெத்தியரையும் போலவே, சீனர் தம்மை வானவர் என்று குறித்துக் கொண்டனர். இம் மூன்று நாடுகளிலும், சப்பானிலும் உள்ள கோயில்கள், நாடகங்கள் ஆகியவற்றின் ஒப்புமைகள் வரலாற்றுக் காலத் தொடர்பு கடந்தவை....

பண்டைத் தமிழரும், மலாய் மக்களும் கடலோடிகளாய் இருந்தனர். பிரிட்டன் உலகில் ஒரு பெருங்கடலரசாக வளர்ந்த காலம் 19-ஆம் நூற்றாண்டே யாகும். அதுவரை உலகின் கடற் பேரரசுகளாகவும் வாணிகப் பேரரசுகளாகவும் நிலவியவர்கள் இவர்களே. மேற்கே நடுநிலக்கடல் நாடுகளில் பரவிய ‘திரையர்’ பண்டைய திராவிட இனத்தவரே என்று திருத்தந்தை ஹீராஸ் குறிப்பிடுகிறார். அதுபோல் அவர்கள் கிழக்கேயும் சீனம், சப்பான் கடந்து நெடுந்தொலை கடல் கடந்தும் கடலோரமாகவும் பரவியிருந்தனர். அமெரிக்க பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்பவர்கள் அக்கண்டத்தின் பழம் பெரு நாகரிகங்களான மய, இங்கா, பெருவிய இனங்கள் திராவிட இனத்துடனும் தென்கிழக்காசிய நாகரிகத்துடனும் மிகப் பழந்தொடர்புடையவை என்று குறித்துள்ளனர். வெற்றிலை, பாக்கு, சுண்ணக் கலவை இத்தொடர்புக் குரிய ஒரு சின்னம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இங்ஙனம் விந்த முதல் குமரி வரை மொழியின வாழ்வு பெருக்கி, மேற்கும் கிழக்கும் பண்டை நாகரிக உலகெங்கணும் பண்பு பரப்பிய உலகின் தலை மாநிலமே திராவிட நாடு.

கொங்கு - ஈழம் என்ற இரண்டு சொற்களுக்கு உள்ள தொடர்பையும் பொருளையும் மலையாள மக்களுக்கும் இலங்கைவாழ் தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்க்கும் உள்ள பண்பாட்டு தொடர்பையும் பன்மொழிப் புலவர் அப்பாதுரை யார் விளக்குவதோடு இலங்கை பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதி என்றும் நிறுவியுள்ளார்.

மேலும் கா. அப்பாதுரையார் அவர்கள்,

‘கதிரவன் வழிபாடு, நாக வணக்கம், உழவுத் தொழில், நெற்பயிர் விளைவு, பருத்தி நூற்றல், நெசவு, ஆநிரை பயிர்ப்பு முதலிய பண்புகளை உலகெங்கும் பரப்பிய ஒரு தொல் பழங்காலப் பேரினம் இருந்ததென்று, ‘கதிரவன் சேய்கள்’ என்ற பழமையாராய்ச்சி நூலில் டபிள்யூ.ஜே.பெரி என்ற அறிஞர் விரித்து விளக்குகிறார். எகிப்தியரும், தென்னாட்டவரும் இவ் வினத்தின் இரு பெருங்கிளைகள் என்று அவர் கருதுகிறார். ‘உலக வரலாறு’ இயற்றிய எச்.ஜி. வெல்ஸ் என்பார், மேற்கிலும் கிழக்கிலு மட்டுமின்றி, வடக்கிலும் தெற்கிலும் கூடக் கிட்டதட்ட நாகரிக உலகெங்குமே தமிழினத் துடன் தொடர்புடைய ஒரு பழம் பேரினம் பரவியிருந்ததென்றும், மற்ற உலகப் பகுதிகளில் அது பின்வந்த பல இனங்களுடன் கலந்து விட்டாலும், கிட்டத்தட்டத் தனிப் பண்புடன் தென்னாட்டில் இன்றுவரை உயிர் வளர்ச்சி பெற்று வருகிறதென்றும் தெரிவிக்கிறார் ’.

‘மொழிப் பண்பிலும், வானூல், உழவு, நெசவு, கரும்பாலைத் தொழில், இரும்பு, கனிச்சுரங்கத் தொழில், சிற்பம் ஆகியவற்றிலும் இன்றைய மனித நாகரிகம் தொடங்குமுன்பே தமிழினத்தவர் இக் கால உலகம் வியந்து மூக்கில் கை உயர் வளம் பெற்றிருந்தனர் என்று கில்பர்ட் ஸ்லேட்டர் என்பார் இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு என்ற நூலில் குறித்துள்ளார்....’

‘விழுந்து கிடக்கும் உருவிலாப் பரப்பிலே, அது பகுத்தறிவுக் கண்கொண்டு கண்டு சுட்டிக் காட்டும் பொன்னுருவே திராவிட நாடு. வரலாற்றின் துணை கொண்டு பண்பும் எல்லையும் விளக்கி, உலக நாகரிகத்தின் போக்கினைத் தீட்டிக்காட்டி உரிமை முழக்கமிட்டு, வருங்கால நோக்கி உயிர்ப்பூட்டி அது எழுப்பி வரும் தேசீய ஆர்வத்துக்குரிய நிலைக்களமே திராவிட நாடு ’.

‘தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப்பண்பு இவை உயிர்ப்புடன் நிலவி, தங்கு தடையின்றி வளர்ந்து உலக நாகரிகம் வளர்த்து வந்துள்ள, வளர்க்க இருக்கிற இடமே திராவிட நாடு. இன்று அது இருக்குமிடத்தையே நாம் உலகப் படத்தில் காணமுடியாது ’

என்று கூறிய பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்கள், எங்கே திராவிட நாடு என்று கேட்ட காங்கிரஸ், சோ­லிஸ்டு கட்சி, தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை எவருக்கும் தலை வணங்காமல் உலகில் தனியாட்சி செலுத்திய மாநிலம் திராவிட நாடென்று விடை பகர்கின்றார். மேலும் அவர் கூறுகிறார்,

தென்திசை யரசர் வடதிசையில் படையயடுத்து அதை அடிப்படுத்திய துண்டு. நிலந்தரு திருவிற் பாண்டியன், ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன், இமய வரம்பன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், கரிகாற் சோழன், ஆந்திரப் பெரும் பேரரசர், கலிங்கப் பெரும் பேரரசர், சோழப் பெரும் பேரரசன் இராசேந்திரன் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்று.... சோழப் பேரரசர் கலிங்கம் கடந்து கங்கையும் கடாரமும் அடிப்படுத்தியதுண்டு.... சேரன் செங்குட்டுவன் கங்கை கடந்து கனக விசயரை -பேரரசன் கனிஷ்கனையும் அவன் கூட்டாளியையுமே - கல் சுமக்க வைத்தான். ஹர்­ன் விந்தம் கடந்ததில்லை. ஆனால் விந்தம் கடக்குமுன் தென்னகம் ஆண்ட புலிகேசி ஹர்சனையும், தமிழகம் ஆண்ட பல்லவன் நரசிம்மவர்மன் அந்தப் புலிகேசியையும் வென்று மண் கொண்டனர்!

அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் விந்தம் கடந்த அன்றே தம் பேரரச வாழ்வு இழந்தனர். அவர்கள் வட திசையை எவ்வளவு எளிதில் கீழடக்க முடிந்ததோ, அவ்வளவு எளிதில் விந்த எல்லையை கடக்க முடியவில்லை.... தென்திசை வட திசையை வெல்ல முடிந்தது. வட திசை தென்திசையை என்றும் அணுக முடிந்ததில்லை.

ஆரியர், பாரசீகர், கிரேக்கர், குஷாணர், பார்த்தியர், ஊணர், அராபியர், ஆப்பானியர், முகலாயர் முதலிய பல அயலார் படையயடுப்புகளின் வரலாறே வட இந்திய வரலாறு. திராவிடர் பழம் பண்பாட்டின் சிதைவுடன் அவ் வயலார்களின் அயற் பண்பாடு கலந்த கலவைப் பண்பாடே வட இந்திய பண்பாடு என்னும் அவியல்! ஆனால் தென் திசை இந்த இனங்கள் எவற்றின் படையயடுப்புக்கோ, குடியயழுச்சிக்கோ என்றும் ஆட்பட்ட தில்லை.... தென்னகப் பண்பே கீழ்த்திசையின் ஒரே பழந்தேசீயப் பண்பாக நின்று நிலவுகிறது.... வடநாடு அடிமைப் பரப்பாக அல்லல் பட்டுக் கொண்டிருந்த இந்த இரண்டாயிர ஆண்டுக்காலமும் தெற்கே திராவிடம் தனிச் செங்கோல் ஓச்சிக் கொண்டிருந்த காலம்.

... கனவில் கூட காளிதாசன் போன்ற சமஸ்கிருதக் கவிஞர்கள் இரு கடற்கரை வரை நீண்ட வடதிசைப்பரப்பையே தம் கனவுகளுக்குரிய உச்ச எல்லைப் பெரும் பேரரசின் எல்லையாகக் கொண்டிருந்தனர்....முத்தமிழ் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றையும் ஒருங்கே ஆண்ட மன்னரையே மூவுலகாண்ட மன்னரென்றும், அவருள்ளும் எழுகடல் தாண்டிக் கடல் கடந்த உலகாண்ட மன்னரையே ஏழுலகாண்ட மன்ன ரென்றும் தமிழக வரலாறு காணாத புராணிகரைத் தமிழர் பாட வைத்தனர்!

திராவிட நாட்டின் எல்லைகளை வரையறுக்க வந்த அப்பாதுரையார்,

‘திராவிட நாட்டுக்கு இயற்கை எல்லைகள் உண்டு. மூன்று புறம் கடல், ஒரு புறம் , வடக்கே விந்திய மலையும் நடுமேட்டு நிலமும் அவற்றின் கடக்க முடியாக் காடுகளும் நிலவுகின்றன. இன்றை இருப்புப் பாதைகள் கூட இவ்வெல்லையை இரு கோடிகளிலும் தான் ஓரளவு ஊடுருவிச் செல் கின்றன. நேர்மாறாக இந்திய மாநிலத்துக்கு இம்மாதிரி எல்லைகள் திராவிட நாட்டுக்கமைந்த எல்லையன்றி வேறு கிடையாது. ஏனெனில் திராவிடத் தையும் அப்பரப்பில் சேர்த்துக் கொண்டால்தான் திராவிடத்தின் முப்புற எல்லையாகிய கடல் அதற்கும் எல்லையாக தென்எல்லையாக முடியும். இல்லாவிட்டால் திராவிடத்தின் வட எல்லையே, அதன் தென் எல்லை’ என்று படம் பிடித்துக் காட்டுகிறார்.

திராவிட நாட்டுத் தேசீயம் என்பதை பற்றி அப்பாதுரையார் அவர்கள் பின் வருமாறு விளக்குகிறார்,

திராவிட நாட்டு எல்லை மட்டுமல்ல, தேசீயமும் இயற்கைத் தேசீயம். அது மொழியையும், இனத்தையும், நாகரிகத்தையும் வரலாற்றையும் அடிப் படையாகக் கொண்டது. அதில் பேசப்படும் மொழிகள் தமிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள். இவை கிட்டதட்ட ஒரே மொழி என்று கூறத் தக்க அளவு அடிப்படை ஒற்றுமையும் பொது வரலாற்று, நாகரிக, இனத் தொடர்பும் உடைய மொழிகள். திராவிட நாட்டின் நில இயல் எல்லையில், தேசீய எல்லையடுத்து நிலவும் மாரத்தி, பீலி, குஜராத்தி, கோண்டு, கூயி, ஒரியா முதலிய மொழிகளில் கூட , கோண்டு ‘பண்படாத் திராவிட மொழி’ என்று வகுக்கப்படுவது....

திராவிட நாட்டின் தேசீய எல்லை திராவிட நாட்டின் நில எல்லையைப் பார்க்கச் சற்றுக் குறைந்ததே. ஆனாலும் திராவிட இயக்கத்தலைவர்கள் நில எல்லை முழுவதும் கோரவில்லை. ஏனெனில் வட திசைப் போலித் தேசீயத்தைப் போலத் திராவிடத் தேசீயம் ஏகாதிபத்திய நோக்கக் கொண்டதன்று. நில ஆதிக்க, இன ஆதிக்க நோக்கம் கொண்ட தன்று. துருக்கிய மறுமலர்ச்சித் தந்தையான கமால் பாஷா இஸ்லாமிய எல்லை, துருக்கி நாகரிக எல்லை முழுதும் கோராமல் அவற்றை வேண்டாம் என்று உதறி இன எல்லையுடன் நின்றது போல, திராவிடத் தலைவர்களும் தம் இன எல்லையுடன் தம் தேசீயக் கோரிக்கையை நிறுத்துகின்றனர்....

மூவாயிர ஆண்டாக, வெள்ளையர் வரும்வரை தனி இனமாக, தனிபெருஞ் சுதந்திர நாடாகத் திராவிடம் நிலவி வந்தது....

கடலாண்ட இனம் திராவிடம் என்பதை கா. அப்பாதுரையார் பின்வருமாறு விளக்குகிறார்;

திராவிடம் பண்டிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை உலகின் செல்வ வளமிக்க நாடு. திராவிடர் நாகரிக உலக நாடுகளெங்கும் சென்று குடியேறியும், வாணிகம் வளர்த்தும் உலகின் குபேர நாடுகளில் முதல் குபேர நாடாகத் தம் மாநிலத்தை வளமாக்கியிருந்தனர். இன்று போல் உலகின் வாணிக விலைக் களமாகத் தென்னாடு என்றும் - அணிமைக் காலம் வரையிலும் - இருந்ததில்லை. தொழிலும் வாணிகமும் பெருக்கி, உலகெங்கும் தன் விலையேறிய சரக்குகளை அனுப்பி, பெருங்கள மாக்கியிருந்தனர். இதற்கேற்ப ஆழ்கடல் கடக்கும் கப்பல்களும் கப்பல் தொழிலும் திராவிடத்திலே செழிப்புற்றிருந்தன.

இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இமயம் வரை வென்று பர்மாவையும் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்திருந்த ஆந்திரப் பேரரசர் ஆழ்கடல் செல்லும் இரு பாய்மரக் கப்பல்களையே தம் நாணயங்களில் வீறுடன் பொறித்திருந்தனர்! இராசேந்திர சோழன் 12-ம் நூற்றாண்டில் கடாரம் அதாவது தென்கிழக்காசியாவை வென்று ஆண்டது இத்தகைய கப்பல் தொழிலின் உருத்தகு வெற்றிக்கு ஒரு சான்று....

திராவிடர் வரலாற்றிலும், தமிழிலக்கியம் முழுவதிலுமே தென்னவரின் இக் கடலோடிப் பண்புக்குச் சான்றுகள் ஏராளமாகக் காணலாம்.

தொல்காப்பிய காலத்திலிருந்து தமிழருக்குரிய ‘முந்நீர் வழக்கம் ’ அதாவது கடல் வாணிக மரபினை, ஆரியர்களும் அவர்கள் இலக்கியமும் அறியா. அவர்களின் சுமிருதி ஏடுகள் இதை திராவிடருக்குரிய தகா வழக்கம். ஆரியர் மேற் கொள்ளக் கூடாத பெரும் பழி என்று இதனைக் கண்டித்தன. திராவிடர் கடல் கடந்து வாணிகமும் குடியேற்றமும் கண்டனர். ஆரியரோ கடல் கடந்த வரை - திராவிடரைக் கூடத் தம் சாதி வருணாசிரமக் கோட்டை யிலிருந்து விலக்கிச் சட்டம் இயற்றினர்.

திராவிட நாட்டின் தனிப்பேரினம் திராவிட இனமே என்பதை இந்தியத் துணைக் கண்டத்தின் கூட்டுறவரசு வெளியிட்டுள்ள இனவாரிப் படமே தெளி வாகக் காட்டும். விந்தியம் வரையுள்ள தென்னகப் பரப்புத் தூய திராவிட இனமாகவும், பஞ்சாப், இமயமலையடிவாரம் தவிர மீந்த பகுதிகள் பல்வேறினங்களுடன் கலந்த திராவிட இனமாகவும் அதில் குறிக்கப் பட்டுள்ளன. ...

திராவிடம் தேசிய இனமா என்று வடவரும் வடவர் பக்தரும் கேட்கும் கேள்வி இவ்வாறு அவர்களுக்குத்தான் ஆபத்தான கேள்வியாக முடிகிறது. ஏனெனில் அதன் விடை திராவிடம் தேசிய இனம் மட்டுமன்று , திராவிடம் தான் பண்டை உலகின் ஒரே தேசிய இனம் என்பது, பாரதமோ பண்டை உலகிலும் தேசிய இனமன்று, இன்றைய உலகிலும் ஒரு தேசிய இனமன்று.

தமிழ்நாடு , இந்திய நாடு என்பதற்கு எப்படி சான்று காட்ட முடியாதோ அதே போல் இந்தியர் என்ற இனத்திற்கும் சான்று காட்ட முடியாது. தமிழர்கள் சேர நாடாகவும், சோழ நாடாகவும், பாண்டிய நாடாகவும் இருந்தார்களே தவிர தமிழ்நாட்டரசாக இருக்க வில்லை. எனவே எங்கே திராவிடம் என்று கேட்பவர்கள் தமிழ் நாடு எங்கே என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட வேண்டும்.

பாரதக் கூட்டரசு வெளியிட்டுள்ள இனவாரி நிலப்படத்தை மேற்கோள் காட்டி பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் அவர்கள்,

‘கிழக்கே வங்காளிகள் திராவிட -மங்கோலியக் கலப்பினத்தவர். அசாமியர் பண்படாத் திராவிடர் அதாவது நாகர் - மங்கோலியக் கலப்பினத்தவர். மேற்கே மராத்தியர், குஜராத்தியர் திராவிட - சிதிய இனக் கலப்பினத்தவர். விந்தியப் பகுதி பண்படாத் திராவிட - மங்கோலிய - ஆரியக் கலப்பினத் தவர். இமயப் பகுதி ஆரிய -திராவிடக் கலப்பும், சிந்து காசுமீரப் பகுதி ஆரிய - சித்தியக் கலப்பும் உடையது ’

என்றும் விவரிக்கிறார்.

‘தமிழர் இன வேறுபாடற்ற தன்மையே தமிழ்ப்பண்பு. அதுவே தமிழகம் கடந்து, தென்னக முழுவதும் பரந்து, தென்னக பண்பாய் இயங்கிற்று, இயங்குகிறது, என்றும் இயங்கும்’ என்று கூறும் கா.அப்பாதுரையார், தன்னை சார்ந்த கிளை யினங்கள், அயலினங்கள் எல்லாவற்றையும் தன் பண்பினால் வயப்படுத்தி ஒற்றுமைப் படுத்தக் கூடியது என்கிறார். மேலும்,

தமிழகத்துள் சிவாஜியின் மரபினருடன் மராத்தியர் வந்து குடி புகுந்தனர். தத்தம் தாய்மொழி பேணிக்கொண்டே, தத்தம் பழக்க வழக்கங்களுட னேயே, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அவர்கள் பல்வேறு தொழில் களிலும் இன்றும் முனைந்துள்ளனர். வீட்டில் பேசும் மொழியன்றி வேறெதுவும் இன்று அவர்களைத் தமிழர் சமுதாயத்திலிருந்து பிரித்தறிய உதவாது. இவர்கள் போலவேதான் செளராஷ்டிரத்திலிருந்து நடு இந்தியா, கன்னட நாடு, தெலுங்கு நாடு ஆகியவற்றி லெல்லாம் சுற்றி இறுதியில் மதுரையிலும் தமிழகத்திலும் குடியேறிய செளராட்டிரர் தம் தாய் மொழி நீங்கலாக மற்றெவ் வழியிலும் தமிழரிட மிருந்து வேறு பிரித்தறிய முடியாதவராகியுள்ளனர்.... இக்காலம் வரை தமிழகத்திலிருந்தே எழுத்தும் இலக்கியமும் உண்டு பண்ணி இனப் பெருமை பேணுபவராய் உள்ளனர்.

விசயநகரப் பேரரசர் காலத்தில் தெலுங்கரும் கன்னடியரும் இது போலவே தமிழகத்தில் பரவி வாழ்ந்தனர்.

சென்ற நானூறு ஆண்டுகளுக்குள் தென்னகத்துக்கு உள்ளிருந்தும் அதன் எல்லையிலிருந்தும் தமிழகம் புகுந்த இவ்வினத்தவர் தத்தம் தாயகத்தில் வாழும் பழைய உறவினரை விடச் செல்வத்திலும் கல்வியிலும் வாழ்க்கை வளத்திலும் மேம்பட்டவர்களாக, தமிழகத்தின் வாழ்வில் வளமான பங்கு கொள்பவர்களாகவே உள்ளனர். அவர்களில் பலர் தமிழுக் காகப் பாடுபட, தமிழ்ப் புலமையிலும் ஆராய்ச்சியிலும் மேம்பட, தமிழுக் காகப் போராடக் கூடத் தயங்கியதில்லை. முதல் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் இத்தகையோர் பலர் தலைமையே வகித்துத் தமிழ்த் தியாகிகளாயினர்.

ஏன் திராவிடம் சொல்லாராய்ச்சி என்று கேள்வி கேட்கும் அப்பாதுரையார் அதற்கான காரணத்தை பின்வருமாறு விளக்குகிறார்;

திராவிடமா, அது என்ன மொழிச் சொல்? தனித் தமிழ்ச் சொல்லா? சமஸ்கிருதச் சொல்லா? இலக்கியத்தில் அதற்கு வழக்கு உண்டா? வடவர் சொல்லையா தமிழர் வழங்குவது? திராவிடர் என்றால் ஓடி வந்தவர், போக்கிரிகள் என்றல்லவா பொருள்? அதை விட்டுவிட்டு ‘தமிழன்’ ‘தமிழ்நாடு’ என்று சொன்னாலென்ன?

இக்கேள்விகளுக்கு விளக்கங்கள் அடிக்கடி மேடைகளில், பத்திரிகைகளில் தரப்பட்டும்,கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. இதற்கு காரணம் உண்டு. ‘கோல்டு ஸ்மித் ’ என்ற ஆங்கிலக் கவிஞரின் ‘பாழ்பட்ட ஊர் ’என்ற கவிதையில் தோற்று விட்டாலும் விடாது வாதாடும் ஒரு நாட்டுப்புற ஆசிரியர் பற்றி அவர் வருணிக்கிறார் ; -ஆனால் அங்கே ஆசிரியர், ஊரில் தன்மதிப்புப் பேணும் பழம் பாணியிலேயே அவ்வாறு செய்கிறார். இங்கே நோக்கம் அதுவன்று. திராவிட இயக்கம் படித்தவரையும் ஆட்கொண்டு விட்டது. படியாதவரையும் ஆட் கொண்டுவிட்டது. ஆகவே அரைகுறைப படிப்பினால் குழம்புவரையாவது சற்றுக் குட்டை குழப்புவோம் என்ற எண்ணமே இவ்விடாக் கேள்வி களுக்குரிய காரணமாகும்....

காங்கிரஸ், சோசலிஸ்ட், கம்யூனிசம் என்ன மொழிச் சொல் என்று கேட்டாயா? இந்தியா, இந்து மதம் என்ன மொழிச் சொல் என்று எந்த அகராதி யையாவது -தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி - எந்த மொழி அகராதியையாவது எடுத்துப் பார்த்தாயா, தம்பி! உன் பெயர், உன் தாய் தந்தையர், அண்ணன் தம்பி, அக்காள் தங்கையர் பெயர்கள் என்ன மொழிச் சொற்கள் என்று எண்ணிப்பார்த்ததுண்டா? நம் நாட்டுத் தலைவர், நம் தமிழ்க் கவிஞர், தமிழப் புலவர் பெயர்களில் கூட எத்தனை பெயர்களில் தமிழ் இடம் பெற்றிருக்கும்? இவற்றையயல்லாம் கேட்கக் கருதாதவர்கள் நாவில், திராவிடம் என்ன மொழிச் சொல்? என்ற கேள்வி எழுகிறதென்றால், அதுவே திராவிட இயக்கத்தின் மாபெரு வெற்றிக்கு ஒரு சான்றாயிற்றே!

திராவிடம் என்ற சொல்லை மலையாளிகள், கன்னடர், தெலுங்கர் ஏற்பார்களா? தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடம், திராவிடர் என்ற சொல்லை சுமக்க வேண்டும் என்ற கேள்விக்கும் கா. அப்பாதுரையார் பின்வருமாறு விடையளிக்கிறார்;

திராவிடம் என்ற சொல்லை மலையாளிகள் ஏற்பார்களா? ஏற்காவிட்டால் கேடு முதலில் அவர்களுக்கு, பின் தான் அவர்கள் இனத்தவர்களாகிய - சுற்றத்தார்களாகிய நமக்கு!...

திராவிடம் என்ற சொல்லை வழங்காத கேரளம்- தேய்ந்த கேரளம்‡ இமய வரம்பன் சேரலாதனின் கேரளமல்ல‡செங்குட்டுவன், இளங்கோவின் கேரளமல்ல.

திராவிடம் என்ற சொல்லை வழங்காத கேரளம், பண்டைக் கேரளத்தின் நாடகக் கலையின் அடிப்படையையே இழந்த கேரளமாகும். பழைய திருவாங்கூரில் அரசியலாரின் அரசியல் வெளியீடொன்று ‘திருவாங் கூரில் கதகளி ’ என்னும் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. கதகளிக்கு இன்னும் வழக்கிலுள்ள இசைக்கருவிகளின் பட்டியலொன்றையும் அது தந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட இசைக் கருவிகள் ‡தமிழர் கண்டறியாத, கேட்டறியாத சங்க இலக்கியத்தில் மட்டுமே புலவர் பெயரளவில் காணக் கூடிய கருவிகள் -அப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவை இன்றளவும் திருவாங்கூரில் வழங்கும் கருவிகள் மட்டுமே. இவற்றுள் இன்னும் மிகப் பல கருவிகளையும் சேர்த்து இருநூறுக்கு மேற்பட்ட கருவிகளின் பெயர்கள் சிலப்பதிகாரம் என்ற பண்டை மலையாளப் பெருங்காப் பியத்தில் காணப்படுகின்றன என்று அரசாங்க வெளியீடு கூறுகிறது.

பழைய கொச்சி அரசர்கள் மலையாளிகள் பச்சை மலையாளிகள் தாம். ஆனால் அவர்கள் தாம் நேரே சேரர் பரம்பரையில் வந்தவர்கள் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். பதிற்றுப் பத்துப் பாடிய புலவர்களுக்குப் பத்து நூறாயிரம், கோடிக் கணக்கான பொன் காசுகளை எம் முன் னோர்கள் கொடுத்தார்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள். திருவாங்கூர் அரச மரபினரும் இதனுடன் போட்டியிட்டு நாங்களும் அதே மரபினர்தான் என்று போராடுகிறார்கள். அத்துடன் சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் முன் சாக்கியர் கூத்து நாடகமாடிய அதே பறையூர்ச் சாக்கையர் குடி மரபினரை இன்றும் அதே நாடகமாடுவித்து, மாதச் சம்பளமும் படிகளும் கொடுத்து வருகின்றனர் திருவாங்கூர் பழைய அரச மரபினர்.

தொல்காப்பியம் அரங்கேற்றியபோது அதை அவைத் தலைவராயிருந்து கேட்ட அதங்கோட்டாசான்குடி இன்னும் அதங்கோட்டாசான் என்ற பெயருடனே, அந்தக் குடியினால் பெருமை பெற்ற பெயருடைய ஊரிலே - திருவதங்கோட்டிலே - உள்ளது. இது இன்றைய குமரி மாவட்டத்தில் நாகர் கோவிலுக்கும் இரணியலுக்கும் இடையே உள்ளது. திருவாங் கூரின் பழந் தலைநகர் இதுவே - திருவாங்கூருக்கு அப் பெயர் தந்ததும் இந்த அதங்கோடே! தொல்காப்பியருக்கு ஆசிரியராயிருந்த புலவர் பெயரால் தான் கேரளத்தின் ஒரு பகுதியாகிய திருவாங்கூர் இன்றும் அழைக்கப் படுகிறது.

திராவிடம் என்ற சொல்லை மறுத்தால், மறந்தால், மலையாளம் சிறு மலையாளமாய், கேரளம் தேய்ந்த, தேயும் அடிமைக் கேரளமாய் இருக்க முடியுமேயன்றிக் கடம்பரைக் கடற்படையால் வென்ற சேரர் பரம்பரை யாய், உண்மைத் தேசியக் கேரளமாய் நில்லாது.

மலையாளத்துக்கு கூறியதே ஆந்திரத்துக்கும் அமையும்.

உண்மையில் இன்றைய ஆந்திரம், ‘ஆந்திரம் ’ என்ற பெயர் கூறவே வெட்கமடைய வேண்டும். ஆந்திரப் பேரரசர் ஆண்ட விசால ஆந்திரம் இன்றைய கட்டெறும்பு ஆந்திரமுமல்ல, அடிமை ஆந்திரமுமல்ல - இன்றைய இந்தியாவில் பெரும் பகுதியையும் பர்மா முழுவதையும் மலாயாவில் ஒரு பகுதியையும் உட்கொண்டதாகும். முக்கலிங்க மாண்டவர் (திரிசலிங்காபதி) முக்கடல் மன்னர் (த்ரிசமுத்ராதிபதி) என்ற பெயர்கள் பட்டங்கள் அவர்கள் பெருமை எல்லையை மட்டுமின்றி, வீழ்ந்த வகை யையும் (சமஸ்கிருதப் பட்டங்களையும்) ஒருங்கே சுட்டிக் காட்டும்.

ஆந்திரம் மீண்டும் அதே தேசிய உயிராற்றல் பெற வேண்டுமானால், அது பாரத ஆந்திரமாயிருந்து பயனில்லை. சுயேச்சையும் சுயாதீனமுமுடைய திராவிட ஆந்திரமாக வேண்டும்.

கன்னடத்தின் செய்தியும் இதுவே.

கன்னட நாடு என்று இன்று கூறப்படும் பகுதி முழுவதும், சேலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சேர்ந்ததுதான் பண்டைத் தமிழரின் கொங்குநாடு. கன்னடம் என்பது கொங்கு தமிழே. பழங் கன்னடப் புலவர்கள் கன்னட நாட்டெல்லையைக் காவேரி முதல் கோதாவரி வரை என்று கூறியது இதனாலேயே.

தெலுங்கர் திராவிடம் என்ற சொல்லை மறந்ததனால், வட எல்லையில் ஒரியாவை மட்டுமன்றித் தெலுங்கரும் திராவிடப் பழங்குடி மொழியினரும் வாழும் கஞ்சம், விசாகப்பட்டின மாவட்டங்களையும் வடவரிடம் கோட்டை விட்டது போலவே, கன்னடியரும் வட திசையில் தம் எல்லையின் பெரும் பகுதியை வடவருக்குக் கோட்டை விட்டுள்ளனர்

என்றெல்லாம் கூறிய அப்பாதுரையார் முடிவாக,

‘தெலுங்கர், கன்னடியர் பகுதிகளில் திராவிட இயக்கத்தை நம் கன்னடத் தாய்மொழி கொண்ட பெரியார் பரப்பியிருந்தால், தெலுங்கர், கன்னடியர் திராவிடம் என்ற சொல்லைப் போர்க் குரலாகக் கொண்டிருந்தால், வட திசையில் வளமான விந்திய மலைப் பகுதிகளைக் கையிழந்திருக்க மாட்டார்கள் ’

என்று முத்தாய்ப்பாகத் தீர்ப்பும் கூறிவிட்டார்.

தோழர் பெ.மணியரசன் அவர்கள், ‘ஒரு மொழிக்குடும்பத்தின் பெயரே திராவிடம். திராவிட மொழிக் குடும்பம் இருப்பதாலேயே திராவிடர் என்ற ஓர் இனம் இருப்பதாக வரையறுக்க முடியாது ’என்று கூறுகிறார். பின் அவரே, ‘தமிழகத்தில் பார்ப்பன வகுப்பில் தோன்றிய திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று அழைத்தவர் ஆதி சங்கரர் என்ற பார்ப்பனர். திராவிடரில் பார்ப்பனர் இடம் பெறார் என்பதெல்லாம இருபதாம் நூற்றாண்டு அரசியல் தேவைக் காகப் புனைந்து கொள்ளப்பட்டதே ’ என்றும் கூறுகிறார்.

‘திராவிட’ என்பது மொழிப் பெயர் என்று கூறினால் ‘திராவிட’ என்ற மொழியைப் பேசுகின்ற குழந்தையை ‘திராவிட சிசு’ என்றுதானே குறிப்பர். ‘திராவிடர் என்பதெல்லாம் இருபதாம் நூற்றாண்டில் அரசியல் தேவைக்காகப் புனையப் பட்டது ’ என்று கூறிவிட்ட பின் பார்ப்பனர் தம்மை ‘திராவிடர்’என்று கூறிக் கொண்டனர் என்று கூறுவது மொக்கையான ஆராய்ச்சியல்லவா?

(தொடரும்)

- கவி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty Re: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 7:06

ஆங்கில மொழி - மொழிஞாயிறு பாவாணரின் ஆய்வு:
--------------------------------------------------------------------
பெரியாரின் மொழிப் பார்வை குறித்து தோழர் மணியரசன் அவர்கள் கூறியுள்ளவற்றைக் கவனிப்போம்,

‘மொழிகுறித்த பெரியாரின் பார்வை மொழியல் அறிவியலுக்கு முரணானது. ஆங்கிலத்தைப் பகுத்தறிவு மொழி என்றும் அறிவியல் மொழி என்றும் கருதி அதைப் பயிற்று மொழியாகவும் வீட்டு மொழியாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றார்’.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களுடன் நெருக்கமாக இருக்க பார்ப்பனர்கள் ஆங்கில மொழியைக் கற்று தேர்ச்சிப் பெற்றனர். ஆங்கில வழிக் கல்வியிலும் சிறந்து விளங்கினர். இதன் பொருட்டே தமிழர்களை மேம்படுத்தும் வகையில் அவருடைய பாணியில் பெரியார் அவர்கள், வேலைக்காரியிடத்தில்கூட‌ ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார். உடனே தமிழ்ப்புலவர்களும் போலித் தமிழ்த் தேசியவாதிகளும் பெரியார் கன்னடியர் என்பதால் தமிழை இகழ்கின்றார் என்று பொய்ப் பரப்புரைச் செய்தனர். இங்கு ஆங்கிலத்தின் இன்றியமையாமை குறித்தும் இருமொழிக் கொள்கைக் குறித்தும் தேவநேயப் பாவாணர் அவர்கள் தனது மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை என்னும் நூலில் தெளிவாக பின்வருமாறு விளக்குகிறார்:

ஆங்கிலம் ஓர் அறிவியல் மொழியாதலால், இந்தியரனைவர்க்கும் அறிவு புகட்டி, காந்தியடிகளும் நேருவும் போன்ற தேசத் தொண்டரையும் தலைவரையுந் தோற்றுவித்து, விடுதலைப் போராட்டத்தைத் தூண்டி, விடுதலையும் பெற்றுத் தந்தது. இந்தியர் ஆங்கிலத்தைக் கற்கவுங் கேட்கவுங் கூடாதென்றும், கற்பினுங் கேட்பினும் நாவையறுக்கவும் காய்ச்சிய ஈயத்தைக் காதில் வார்க்கவும் வேண்டுமென்றும் ஆங்கிலர் கோட்பாடு கொண்டிருந்திருப்பின் காந்தியடிகளும் நேருவும் தோன்றி யிரார்; இந்தியா விடுதலை பெற்றிருக்காது.

இனி, ஆங்கிலத்தால் மட்டுமின்றி ஆங்கிலாராட்சியினாலுதாம் இந்தியா பெருநன்மை பெற்றது.... இற்றைக் கல்வியெல்லாம் அறிவியலும் (Science) கம்மியமு ( Technology) மாதலால், ஆங்கிலம் அறிவுத்துறையில் இந்தியர்க்கு இன்றியமையாததாகும். ஆங்கிலம் அறிவியல் மொழியும் உலக மொழியுமாயிருப்பதுடன், எதிர்காலத்தில் ஒரே உலகப் பொது மொழியாகும் வாய்ப்புமுள்ளது என்பதை அறிதல் வேண்டும்.

ஆங்கிலம் தானே இங்கு வந்திராவிடின், இந்தியர் மேனாடு சென்று வருந்தித் தேடி அதைக் கண்டுபிடிக்கும் நிலைமை நேர்ந்திருக்கும். அது தானே இங்கு வந்ததனால், ‘வலிய வந்தாற் கிழவி ’என்பது போல், அதன் அருமை பெருமை அறியப்படாதுள்ளது. இற்றை யறிவியற் கெல்லாம் அடிப்படையான நீராவி வலிமையும் மின்னாக்கமுங் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மொழியாகிய ஆங்கிலம், இந்தியர்க்குக் கிடைத்தது, இறைவன் பேரருள் என்றும், ஆங்கிலர் வன்கொடையெயன்றும் வலிய வந்த வானமுதம் என்றும் போற்றத் தக்கதாகும்.

.... கல்லூரிகளில் மட்டுமின்றிப் பள்ளிகளிற் பணியாற்றும் தமிழாசிரியர்க்கும் ஓரளவு ஆங்கிலக் கல்வித் தகுதி வேண்டியிருப்பதனால், ஆங்கிலத்தின் இன்றியமையாமையை மேற்கொண்டு விளக்க வேண்டுவதில்லை.

தமிழ்நாடு இந்தியை எதிர்த்து இருமொழித் திட்டத்தையே மேற்கொள்வதால், அதற்கும் ஆங்கிலத் துணை இன்றியமையாததாகும். ஆங்கிலம் நீங்கி விட்டால், இந்தி உடனே அந்த இடத்தை இணைப்பு மொழி அல்லது பொது மொழியென்னும் பெயராற் பற்றிக் கொள்ளும். அதற்காகவே அடி முதல் முடி வரை எல்லாக் கல்வியையும் நாட்டு மொழிகளில் நடத்துமாறு, இந்தி வெறியர் மிகுந்த நடுவணரசு ஊக்கியும் வற்புறுத்தியும் வருகின்றது. தாய்மொழிப் பற்று வெறியளவு விஞ்சிவிடின், ஆங்கிலப் பற்றுத் தானாக அகன்றுவிடுமென்பது அதன் கருத்து. இதன் மருமத்தை அறியமாட்டாத சில தமிழாசிரியரும், தம்மைத் தலைசிறந்த தமிழ்ப் பற்றாளராகவும் தமிழ்க் காவலராகவும் காட்டல் வேண்டி, தமிழ் ஒன்றே எல்லா நிலையிலும் கல்வி வாயிலாக இருத்தல் வேண்டுமென்று தம்பட்டமடித்து வருகின்றனர்.

தமிழும் (தாய்மொழியும்) ஆங்கிலமும் ஒருங்கே கல்வி வாயிலாக இருப்பதனால், தமிழுக்கு ஒரு கேடுமில்லை. தமிழும் தழைத்தோங்கும். வெளிநாடு செல்பவர்க்கும் ஆங்கிலவறிவாற் பிழைப்பவர்க்கும் ஆங்கிலம் பயன்படும்.

ஓர் அயன் மொழியைக் கற்பதற்குச் சிறந்தவழி பேச்சுப் பழக்கமே. ஆங்கிலம் கல்வி வாயிலாக இருப்பின், பேசிப் பழக மிகுந்த வாய்ப்புண்டு. அதனால் ஆங்கிலத்தில் விரைந்தும் பிழையின்றியும் பேசும் ஆற்றல் பெறலாம். ஆங்கிலர் காலத்துப் பட்டந்தாங்கியர்க்கும் இக்காலத்துப் பட்டந்தாங்கியர்க்கும் ஆங்கிலப் பேச்சாற்றலிலும் எழுத்தாற்றலிலும் உள்ள வேற்றுமை, இதை வெள்ளிடை மலைபோல் தெள்ளிதிற் காட்டும். அக்காலத்துச் சேர்முகக் கல்வியரும் இக்காலத்துப் பட்டந்தாங்கியர் போல் அறிவாற்றல் பெற்றிருந்தனர்.

இனி, ஆங்கிலவாயிற் கல்வியால் தமிழ்ப்பற்றுக் குறையுமென்பது மட நம்பிக்கையே. ஆங்கிலத்திற் சிறந்த மெய்ப் பொருளிற் பேராசிரியரான பி. சுந்தரம் பிள்ளையே தமிழனுக்குப் பள்ளியெழுச்சி பாடித் தமிழுணர்ச்சியூட்டியவர். மறைமலையடிகள், பூரணலிங்கம் பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை, பவானந்தம் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியப் பிள்ளை முதலிய பல தமிழ்த் தொண்டர் ஆங்கில வாயிற் கல்வி கற்றவரே. ஆங்கில வாயிற் கல்வி கற்றவர்க்குத் தமிழ்ப் பற்றிராதென்பது, பெற்றோருடனன்றிப் பிறருடன் பேசுவோர்க்குப் பெற்றோர் மேற் பற்றிராதென்று சொல்வதொத்ததே.

இனி, தமிழொன்றே கல்விவாயிலாதல் வேண்டுமென்பார் உண்மையில் தமிழ்ப்பற்றாளருமல்லர்; அறிவியல் கம்மியக் குறியீடுகளை எல்லாம் மொழிபெயர்க்காது அப்படியே ஆள வேண்டுமென்பர். தமிழுக்கு உயிர்நாடி தூய்மையே. அதனையிழந்து விடின், தமிழ் தமிழாயிராது வேறொரு திராவிட மொழியாக மாறிவிடுமென்பதை அவர் அறியார். ஆதலால் ஆங்கிலங் கற்கும் ஆற்றலற்றவர்க்கும் உள்நாட்டிலேயே வாழ்பவர்க்கும் தமிழ் வாயிற் கல்வியும், அவ்வாற்றலுள்ளவர்க்கும் வெளிநாடு செல்பவர்க்கும் ஆங்கில வாயிற் கல்வியும் இருத்தல் வேண்டுமென்பதே பொருத்தமாம்.

இனி, ஆங்கிலங் கற்கும் ஆற்றல் பிராமணர்க்கேயுண்டு என்று மானங் கெட்டுப் பிதற்றுவாருமுண்டு. இந்துச் செய்தித் தாளில், அடிக்கடி ஆங்கிலரும் வியக்குமாறு அழகாகவும் ஆற்றலொடும் ஆங்கிலத்திற் கட்டுரை வரைந்து வரும் ஜி.கே. இரெட்டியும் அவர் போன்றார் பலரும் பிராமணரல்லாதாராயிருத்தல் காண்க. தமிழகத்தில் இந் நூற்றாண்டில் தலைசிறந்த ஆங்கில நாவலராயிருப்பவர் வயவர் ஆ.இராமசாமி முதலியாரே.

தந்தைக்கு ஆங்கிலம் கற்கும் ஆற்றலில்லாவிடினும், மகனையாவது சிறிது பெறச் செய்தல் வேண்டும். அது தலைமுறை தோறும் படிப்படியாய் வளரும்.

ஆங்கிலவாயிற் கல்வியை அறவே அகற்றிவிடின், இனி இராமசாமி முதலியார்களும் இலக்குமணசாமி முதலியார்களும், ஆர்.கே.சண்முகஞ் செட்டியார்களும், இரத்தினசமிப் பிள்ளைகளும், அண்ணாதுரைகளும் தமிழ்நாட்டில் தோன்றுவது அரிதினம் அரிதாகும்....

ஆங்கில அல்லது மேலை நூல்களைச் செவ்வையாய் மொழி பெயர்த்தலுமே, நாம் ஆங்கிலர்க்கும் மேலையர்க்கும் சமமான அறிஞராக முடியாது. அவர் அறிவை விளைவிப்பவர்; நாம் கொள்பவர். அவர் மேன்மேலும் அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதால், நம் மொழிபெயர்ப்பு முடியுமுன் அவர் மிக முன்னேறிவிடுவர். நாம் மொழிபெயர்த்த நூல்கள் பழமைப் பட்டும் வலிமையற்றும்போம். ‘இருந்தவன் எழுமுன் நின்றவன் நெடுந் தொலைவு’. மொழி பெயர்ப்பு நூல்களைக் கற்றபின் மேற்கொண்டு கற்கவும் நம்மிடம் நூலில்லை. ‘கற்றுக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் நீடு பயன்படா ’. நாம் சப்பானியர் போற் பொறியாக்க வினை பயின்று தேர்ச்சி பெறினும், உலகச் செய்திகளறிதற்கும் உலகஞ் கற்றற்கும் உலக மாநாடுகளிற் கலந்து கொள்ளற்கும் ஆங்கில அறிவு வேண்டியுள்ளது.

ஆங்கிலரும் செர்மானியரும் இரசியரும் சப்பானியரும் அறிவியலை வளர்ப்பவரேனும், ஒன்றிய நாடுகளின் அமெரிக்கர் போல் திங்களையடையும் நிலையில் இல்லை என்பதை உணர்தல் வேண்டும். அமெரிக்கர் மொழி ஆங்கிலமே....

‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு ’ (குறள் 397)

என்று திருவள்ளுவர் பண்டு தமிழுக்குச் சொன்னது, இன்று ஆங்கிலத்திற்கே முற்றும் பொருந்தும்.

...இயன்ற வரை ஆங்கிலம் தாய்மொழி ஆகிய இரு மொழியும், இயலாத நிலையில் ஆங்கிலந் தனியாகவும், கல்வி வாயிலாகவு மிருத்தல் வேண்டும். ஆங்கில வாயிலாகவே இந்தியர் சிறப்பாகத் தமிழர், முன்னேற முடியும். ஆங்கிலத்தைப் புறக்கணிப்பவரெல்லாம் தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்பவரேயாவார். கல்வித் துறையிலும் மொழித் துறையிலும் இராசாராம் மோகன்ராயையே முற்றும் பின்பற்றுதல் வேண்டும்."

இப்படியயல்லாம் கூறுபவர் பெரியாரல்ல. 32 மொழிகளை ஆய்ந்தறிந்த மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். இதைத்தான் பெரியார் தன்னுடைய பாணியில் வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார். மறைமலையடிகளும் பெருஞ்சித்திரனார் அவர்களும் ஆங்கிலத்தைப் போற்றி வந்துள்ளனர். ஆனால் தமிழ்ப் புலவர்கள் வசதியாக இதை மறைத்து பெரியார் மீது அவதூறு பரப்புகின்றனர்.

ம.பொ.சி அவர்கள் வடமொழி வழிபாட்டை போற்றி வந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இந்தி எழுத்துக்களை அழித்தபோது அவற்றை ‘தார்’ கொண்டு அழித்து இந்தி திணிப்புக்கு ஆதரவாக இருந்தவர் ம.பொ.சி. பெரியார் 1965 இந்தி எதிர்ப்புப் போருக்கு ஆதரவு காட்டவில்லை என்று பெரியாரை வம்புக்கிழுக்கும் தமிழ்ப்புலவர்கள், தமிழ்த்தேசியத்தின் தந்தையாக தூக்கிப்பிடிக்க முயலும் ம.பொ.சி. பற்றி விமர்சனம் செய்ய வேண்டாமா? அப்படியானால் ம.பொ.சி. தமிழரா? இதற்கு தேவநேயப் பாவாணர் மேற்கண்ட நூலில் ‘தமிழர் யார்’ என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

தமிழ் நாட்டிற் பிறந்து தமிழரென்று பெயர் தாங்கினும், வட மொழியில் வழிபாட்டை விரும்புபவரும், இந்தியை இந்தியப் பொது மொழியாக ஏற்பவரும், தமிழர் முன்னேற்றத் திட்டங்களை தடுப்பவரும் தமிழராகார்.

ஏற்கனவே ‘பெரியாரின் இடது சாரி தமிழ்த் தேசியம்’ என்ற நூலை எழுதிய சுப.வீரபாண்டியனுக்கு மறுப்பு கூறும் வகையில் பெரியாரின் மொழிக் கொள்கை பற்றி பெ.ம. எழுதினார். நான் அதற்கு அப்போது ‘பெரியாரின் மொழிக் கொள்கை அறிவுப்பூர்வமானது’ என்று எழுதி அந்நூலை பெ.ம. அவர்களிடமே மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியின் போது நேரிலேயே கொடுத்தேன்.

பெரியாரின் மொழிக் கொள்கை

மொழி பற்றி பெரியார் கொண்டுள்ள தெளிவான பார்வை பின்வருமாறு வெளிப்படுகிறது,

‘மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க ‘மொழி ’முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது. மேலும் இச் சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும் பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும் சில வித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மொழி என்று கூறாவிட்டாலும் ‘ஒலிக் குறிப்பு’ என்று கூறலாம் .

இப்படி மொழி பற்றி வரையறை செய்த பெரியார், மேலும் கூறுகிறார், ‘ ஒருவரைப் பார்த்து, ‘உங்கள் மொழி என்ன? ’ என்று கேட்பதற்கு, ‘நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்?’ என்றுதானே பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது ’.

இப்படி பெரியார் விளக்கிய பிறகு மீண்டும் அவரைப் பார்த்து குதர்க்கமாக கேள்வி கேட்க விரும்புபவர்களுக்கு மீண்டும் இப்படி விளக்கம் கூறுகிறார், ‘மக்களிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மொழி என்றால் அம்மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். பல மொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும் விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை செய்யப்பட்டதல்லவென்றும் உங்களுக்கு விளக்கிக்காட்ட விரும்புகிறேன்’ என்றெல்லாம் கூறிய பெரியார் சில உதாரணங்களையும் கூறுகிறார், அதாவது, ‘யாழ்ப்பாணத்தான், அவர்கள் அப்பொழுதே வந்துவிட்டார்கள்’ என்று கூறுவதை, திருநெல்வேலியான், ‘அவா அப்பமே வந்தா’ என்பான். கிராமத்தான், ‘அவியயா அப்பளையே வந்தாங்கோ’ என்பான். இப்படி ஒரு மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பேசப்படக் காரணம் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்து கொள்ள வசதியான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரித்து வைக்கும் மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள் உள்ளமையும் ஆகிய இவைகள்தான் காரணம்’என்று பகுத்தறிவு கொண்டு விளக்கிக் காட்டியுள்ளார்.

இதோடு விட்டுவிட வில்லை பெரியார். அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறார்,

‘மற்றும் மொழியானது அந்தந்த நாட்டுச் சீதோஷ்ணத்திற்கேற்பவும் அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கைப் பழக்க, வழக்க, பண்பு, குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல் சுலபமாய் பேசக் கூடிய ரீதியிலும், சில அதிக சக்தியைச் செலவிட்டுச் சிரமத்தோடு பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்க காண்கிறோம். உதாரணமாக வடமொழியிலுள்ள ‘ஹ’ போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து ஆழ் துளைத்துக் கொண்டு வருவது போல் ஒலிக்கிறது’.

‘உதாரணமாக ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாக குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு ‘ஹா’ என்கிற - பெரும் காற்றைத் தள்ளிக் கொண்டு உச்சரிக்க வேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச் சுலபமாக அம் மொழியும் ஏன்- அது போன்ற வட மொழியும் பேச முடிகிறது. ஆனால் என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் ‘ழ’, ‘ள’ - இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. இந்த சப்தத்திற்கு அவருக்குப் பழக்கமான அந்தச் சீதோஷ்ணம் சரிப்படாமற் போவதுதான் காரணம். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவர் நாக்கு, இந்த சப்தத்தை உச்சரிப்பதற்கேற்பச் சுலபத்தில் திரும்ப முடியவில்லை என்பது தான் காரணம்”.

‘ழ’,‘ள’ என்ற எழுத்துக்களின் ஒலி அமைப்பையும் உச்சரிப்பு முறையையும் விள‌க்கிய பெரியாருக்கு மொழிப் பற்றிய பார்வை இல்லை என்று தமிழ் நன்கு கற்றறிந்த பெ.மணியரசன் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

ஒரு மொழிக்குச் சிறப்பு எவ்வாறு அமைகிறது என்பதை பற்றியும் கூறுகிறார் பெரியார், ‘இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக் கூடும் ஒரு கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில் இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து அந்தக் கருத்து இருந்ததில்லை என்பது தான்’.

இத்தோடு பெரியார் விட்டுவிட வில்லை. மேலும் ஒரு அழுத்தம் கொடுக்கிறார். அதாவது, ‘அந்தக் கருத்து அவர்களிடம் ஏற்பட வேண்டிய அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் காரணம்’ என்று வலியுறுத்துகிறார்.

இந்த இடத்தில் ‘சாதி என்ற வட மொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும் இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? கூறுங்களன். இதே போல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள்-வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்’ என்று கூறியுள்ளதையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

‘எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம் மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துக்களைப் பொறுத்துதான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துக்களைக் கொண்டு பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட அறிவைக் கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்ளை வாங்கிப் படித்தால் அவற்றில் காணப்படும் கருத்துக்களைக் கொண்டே அம்மக்களின் நாகரிகத்தின் முன்னேற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு மொழியை ஏற்பதும் தள்ளுவதும் கூட, பெரும்பாலும் அந்தந்த மொழியின் பாற்பட்ட முன்னேற்றக் கருத்துக்களைப் பொறுத்துதான் இருக்கிறது. ஒரு மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாக கற்றுக் கொள்ளப்படுவதற்கு எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும் ’.

ஒரு மொழி சிறப்புத் தன்மையடைவதற்கு அடிப்படையான விசயங்களை பெரியார் இவ்வாறு தெளிபடுத்தியுள்ளதை பெ.மணியரசன் ஊன்றிப் படிக்க வேண்டும்.

அடுத்து தமிழை ‘நமது தகைமைசால் தமிழ்’ என்று அழைத்து அது பற்றியும் கூறுகிறார்.

‘தமிழ் என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து- மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும், மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா! என்ற கேள்விகள்-தமிழைப் பொறுத்தவரை வித்து முந்தியா? மரம் முந்தியா என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன. எப்படி இருந்தாலும் தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் தமிழ், தமிழ் நாடு, தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றை காணாதவர்களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும்படியாக திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும் அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும் கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும், ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன’.

‘வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு குடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்கள‌து மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வட நாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படி செய்து, அதன் மூலம் தமது கலை, ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்தி விட்டனர். அந்த வட மொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது ’.

“ஆனால் என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப் படுகிறேன்’.

இவ்வளவு ஆழ்ந்த விளக்கத்தை தமிழ் மொழிக்குக் கொடுத்த பெரியார், தமிழிலிருந்து சிதைந்தவைதான் மலையாள‌ம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று வலியுறுத்திய பெரியார் மேலும் விள‌க்குகிறார்,

‘நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில்தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில்தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது’.

இதையெல்லாம் இன்று வரை தமிழறிஞர்கள் ஆராய்ந்தார்களா அல்லது பெரியாருக்கு மறுப்புத் தெரிவித்து கருத்துக்களையாவது வெளியிட்டார்களா என்பதற்கு ஆதாரம் இல்லை.

மொழி வழி மாநிலம் அமைக்கப்படும் போது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரம் பிரிந்து சென்றதை ‘தொலைந்தது சனியன்’ என்று கூறிய பெரியார், அதற்கு முன் கூறிய கருத்துக்களையும் இங்கு காண்போம்.

‘வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய்மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்’.

இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது.

தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார், அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விள‌ங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி- தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல ’.

தனித்தமிழ் குறித்தெல்லாம் பெரியார் இங்கு கூறியுள்ளார். இவற்றை எல்லாம் பெ.மணியரசன் படித்தாரா? இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதை மட்டும் இவரும் தமிழறிஞர்களும் மேற்கோள்காட்டி கூறி வருவது இவர்களின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

(தொடரும்)

- கவி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty Re: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 7:13

‘அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமை தான். அது தமிழ்ப் பண்பு கூட அல்ல. தமிழில் -அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்கள் இல்லை’அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்பதைக் கூட அழகாக ஆனால் ஆழமாக மறுக்கிறார் பெரியார்.

‘இதே போல் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ, துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா? அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக, நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா? ’ என்று தாய்மொழி என்ற கருத்துருவையே கேள்விக்குள்ளாக்கும் பெரியார், நம் தாய் குழந்தையாக இருந்த போது பேசியதென்ன? பாய்ச்சி குடிக்கி, சோச்சி தின்னு, மூத்தா பேய், ஆய்க்கு போ, என்றுதானே பேசியிருப்பாள்! இப்போது நாம் பாச்சி, சோச்சி, மூத்தா, ஆயி என்றா பேசுகிறோம்? இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமை என்று தோன்றவில்லையா?’ என்று விளக்குவதையும் தமிழறிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

‘தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்த பிறகு தானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்? அதன் பிறகுதானே சிறிது சச்சரவு நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து. ‘ஆமாம்மா! உன்னைக் கன்னிகாதானம் செய்தாயிற்றே! உன்னை உன் புருசனுக்குக் கொடுத்துவிட்டோம். தானம் செய்து விட்டோமே! இனி, உனக்கு இடம் அவன் இருப்பிடம் தானம்மா’ என்று கூறும் தகப்பன்மார் தோன்றினார்கள். கன்னிகா தானம் என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்களேன். திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை’ என்றுதானே கூறுகிறார். அதாவது புருசனும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள். ‘மோட்சம்’என்பதற்குத் தமிழ் வார்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி? நெறி, கோள் என்றால்- வெறி ஏது? ‘பதிவிரதாத தன்மை’ என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா? ‘பதிவிரதம் ’ என்ற வார்த்தை இருந்தால் - 'சதி விரதம்’ அல்லது ‘மனைவி விரதம் ’ என்கின்ற வார்த்தையும் இருக்கவேண்டுமே! இதுவும் வடமொழி தொடர்பால் ஏற்பட்ட வினைதான். ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்து விட்டன? தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு என்ற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம். நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை.

‘மூட நம்பிக்கை மொழி என்று ஒன்று இல்லை’ என்று கூறிய பெ.மணியரசன் ஆங்கில மொழியிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் என்று அடுத்த வரியிலேயே ‘பல்டி’ யடித்தவர் மேலே பெரியார் கூறியவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

ஆங்கில மொழியை விரும்புவதற்கு பல காரணங்களை பெரியார் அடுக்குகிறார், ‘வடமொழித்தொடர்பால் ஏற்பட்ட இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டன. அதற்கு மாறாக ஆங்கில மொழித் தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும் அம் மொழியிலுள்ள கருத்துச் செறிவுகளையும் பாருங்கள். ஆங்கில மொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘அடிமை வாழ்வே ஆனந்தம் ’ என்று நினைத்திருந்த இவ் இந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவுதான் என்று கூறினால் மிகையாகாது. இராஜா வேண்டாம். குடியரசு தான் வேண்டும் என்கிற அறிவு. சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழிய வேண்டும் என்கின்ற அறிவு ஆணும் பெண்ணும் சமம் என்கிற அறிவு ஆகிய சகல அரசியல் பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துக்களையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது ’ .

‘தந்தியையும், மின்சாரத்தையும், படக்காட்சியையும், ஆகாய விமானத்தை யும் ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான் அறிமுகப்படுத்தியதே யாழிய, நமது தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்க வந்த வடமொழியோ அல்ல’.

வீட்டு வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள். குழந்தைக்கு தாய்பாலில் ஆங்கிலத்தை கலந்து கொடுங்கள் என்று பெரியார் சொல்லியதற்கு அடிப்படை காரணம் இவை தான் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் பெ.மணியரசன் போன்றவர்கள் பெரியாரைப் படிப்பதுமில்லை. படிக்க முயற்சிப்பதுமில்லை.

மேலும் பெரியார் கூறுகிறார், ‘அறிவு வளர்ச்சிக்கு பெரும்பாலும் சுற்றுச் சார்பு தான் காரணம். ஒரே தகப்பனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்து பாருங்கள். இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனை விடப் பல மடங்கு அறிவு விசாலம் அடைந்தவனா யிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண் கொண்டு பார்ப்பான் ’. பெரியார் இப்படி ஒப்பிட்டுக் கூறுவதையும் அவர் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.

தமிழ் ஒரு காலத்தில் சிறந்த மொழியாக இருந்தது என்று கூறும் பெரியார் அது சீரழிந்து போனதற்கு காரணம் மதம் அதில் புகுந்ததுதான் என்று கூறுகிறார்.

‘தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப்பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக்கத்தக்கது’.

பெரியாரை தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தேசிய வாதிகளும் கடும் விமர்சனம் செய்வதற்கு காரணம் அவர்கள் பெரியாரால் பலமாக தாக்கப்பட்டதுதான் . தமிழறிஞர்களைப் பற்றி பெரியாரின் பார்வை இதுதான்,

‘தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு ‘கவைக் குதவாத ’ கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு-திருவாசக அறிவையும் பாரத - இராமாயண அறிவையும் பரப்பிவிட்டனர். சிந்திக்கத் தவறினார்கள். சிலப்பதிகாரத்தை தலை சிறந்த நூலென்று இன்னமும் போற்றி வருகிறார்கள். அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றிக் கொள்கிறது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக் காட்டு. அந்த சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணையிடுகிறாள், பார்ப்பனரை அழிக்காதே என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரிய பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்கள சிந்தித்துப் பாருங்கள்’.

இன்னுமும் பெரியார் தமிழ் கீழ் நிலையை அடைந்ததற்கு மிகவும் வேதனையடைகிறார்,

‘தமிழில் ஆரீயம் புகுந்ததால்தான், மற்ற மக்களல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடாத்திய தமிழர் மரபில்- இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்’.

மொழி என்பதை பற்றிய மற்றொரு கருத்தை இங்கு பெரியார் வெளியிடுகிறார். இதையயல்லாம் தமிழிறிஞர்கள் உணர வேண்டும்,

‘மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டு பிடித்துக் கைக்கொள்ள வேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள். தமிழ் சிவனும் சுப்பிரமணியனும் பேசிய மொழி. உண்டாக்கிய மொழி என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும் சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா? இயற்கையின் தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக் கூடியதேயாகும்’.

தமிழைவிட தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர். இதற்கும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காக கடவுள் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்திய பெரியாரை பார்ப்பனர்கள் சாமார்த்தியமாக மத நம்பிக்கையில் கை வைக்கிறார் என்று திசை திருப்பியதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நாம் உணரலாம்.

தமிழைப் பற்றி கூறும் போது, ‘தமிழைப் பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனும் அல்ல. தமிழுக்காக எவ்வித தொண்டும் புரிந்தவனும் அல்ல’ என்றும் அடக்கமாகக் கூறுகிறார்.

‘மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது ’.

‘உதாரணமாக, மக்கள் தேவர் நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாய் இருக்கின்றன ’. (குடி அரசு 26.1.1936).

தேசிய இனம் என்பது பற்றியும் பெரியார் கூறுகிறார். கேளுங்கள், ‘தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தனித்தனி மொழியா? இந்தப்படி மொழி பேசுகிறவர்கள் தனித்தனித் தேசிய இனமா? இதற்காக அவர்கள் பிரிந்து வாழ வேண்டுமா? ’ என்றெல்லாம் கேட்கிறார்.

தமிழ்ப்புலவர்களைப் பற்றி இன்னமும் கூறுகிறார் பெரியார், ‘நான் தமிழை அறியாதவனல்ல. தமிழ்ப்புலவர்களை மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல. தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல ’.

‘இன்றையப் புலவர்கள் தமிழ் அபிமானிகள் தியரிடிகல் புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் தமிழ் அறிவு உடையவன் என்று கருதி இருப்பவன். 1920 வரை என்னிடம் வந்து வாதம் செய்யாத, கை நீட்டாத தமிழ்ப் புலவர்கள் குறைவென்றே சொல்லுவேன் ’.

‘மீனாட்சி சுந்தரம் பிள்ளையை எனக்குத் தெரியாது. சாமிநாத அய்யரை எனக்கு நன்றாய்த் தெரியும். சாமி வேதாச்சலத்தையும் தெரியும். கலியாண சுந்தர முதலியார் தரத்திலுள்ள பிரபல தமிழ்த் தென்றல்களையும் தெரியும் ’.

‘ஒரு சமயத்தில் நாங்கள் காங்கயம் சேஷாசல நாயுடு, முத்துசாமிக் கவிராயர் (சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆனபின்) சங்கரதாஸ் இவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது, வள்ளுவரை மன்னிக் கலாம். மற்ற எந்த புலவனையும், எந்த இலக்கியத்தையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை வரையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள் என்று சொன்னேன். அவர்கள் பெரும் சிரிப்பு சிரித்து கை தட்டினார்கள். இது சுமார் 1900 முதல் 1920 வரை உள்ள காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் ’.

‘சுமார் 50. 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் புலவர்கள் யாராயிருந்தாலும் பிச்சை எடுத்தே தீருவார்கள். பெரிய புலவர்களுக்கு எல்லாம் மாதம் ரூ 15 முதல் ரூ 30 வரை சம்பளம்தான் சாதாரணமாக இருக்கும். அவர்கள் தகுதி எல்லாம் இலக்கியங்களை உருப்போட்டு ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லி, மக்களை மருளச் செய்து, காசு வாங்குவதுதான் உயர்ந்த தொழிலாகும். புலவரைப் பற்றி என் கருத்து புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன். நா.கதிரைவேற்பிள்ளை என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்த போது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்து விட்டார் ’.

இப்படி கூறிய பெரியார் இன்னும் ஒரு படி மேலே போகிறார், ‘ இது வரை நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு இந்த நாட்டில் எந்தப் புலவனாலும் வளர்ச்சி, அபிவிருத்தி காரியமும் ஆனது கிடையாது. அதற்கு தகுதியான புலவன் இன்று இங்கு யாரும் இல்லை. எந்த புலவனாலும் இதுவரை நமது நாட்டுக்கு சிறு மதிப்பிற்குரிய முன்னேற்ற நூல் கூட உண்டாக்கப்பட்டதில்லையே! கம்ப ராமாயணத்திற்கும் பெரிய புராணத்திற்கும் புதிய பொருள் எழுதிப் பணம் சம்பாதிப்பார்கள் ’.

‘இன்று தமிழில் மேதாவிகள் டாக்டர்கள் ஏராளமாக ஆகி விட்டார்கள். பூச்சும் பொட்டும் நாமமும்தான். அவர்கள் தலையில் இருக்க வேண்டியது அறவே இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத் தவிர வேறு எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள்’.

‘எவனைப் பக்குவப்படுத்தினாலும் மரியாதை, விளம்பரம் வந்தவுடன் தமிழைக் காக்க அல்லவா புறப்பட்டுவிடுகிறார்கள். புலவன் பொறுக்கித் தின்ன இலக்கியங்களைக் காப்பதுபோல் பொது தொண்டு மக்களும் இப்போது பலன் அடையத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டு வெட்கமில்லாமல் தமிழைக் காக்கிறேன் என்கிறார்கள். என்னைக் குடிகாரர் போல் வைவதில் சமாதானம் ஏற்பட்டு விடாது. கையிலுள்ள சரக்கைக் காட்ட வேண்டும் ’.

‘ அட கெடுவாய் பல தொழிலுமிருக்கக் கல்வி (தமிழ்)
அதிகமென்றே கற்றுவிட்டோம். அறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக் கழைக் கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத்
தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச்
சனியான தமிழைவிட்டு தையலார் தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை
என்ன சென்ம மெடுத்து உலகிலிரக்கின்றோமே "

‘தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்கவில்லை. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர்வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறுதுறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ்க் கற்ற அனுபவப் புலவர் மேற்கண்ட பாடல் மூலம் எடுத்திக்காட்டியிருக்கிறார் ’. (விடுதலை தலையங்கம் 16.3.1967)

பெரியார் மொழிக் கொள்கை வகுக்கவில்லை என்று கூறுகிறார் பெ.மணியரசன். மொழிக் கொள்கை என்றால் தனி நாடு பெற்றால் நாட்டில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஆகும். இது தொடர்பாக இங்கு பெரியார் கூறி பதிவு செய்துள்ளதை அவர் கூர்ந்து கவனிக்க வேண்டும்,

‘ தமிழ் நாட்டில் இருந்து கொண்டு-தமிழ்நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற்கானாலும் போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் மொழி என்பதாகத்தான் தோன்றும். ஆனால் நாடு நம்முடைய சொந்த நாடு ஆனாலும் ஆட்சி தமிழர்களல்லாத -அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப்பிற்கும் வசதிக்கும் ஏற்றபடி ஏதோதோ காரணங்களை சொல்லிக் கொண்டு அன்னிய மொழியாகிய இந்தி மொழி என்பதுதான் ஆட்சி மொழியாகவும் கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய மொழியாகவும் கூட இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும்படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டு விட்டது ’.

ஆங்கிலம் ஏன் என்பதற்கு பெரியார், ‘தமிழ், வடமொழியை, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும் நாம் இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் - ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும் ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும் ஆங்கில எழுத்துக்கள தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும் ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் ’ என்று விளக்கினார். ( ‘ மொழியும் அறிவும் ’ 1957, 1962).

1957 மற்றும் 1962 இல் பெரியார் கூறியதன் அடிப்படையில்தான் இன்று தமிழக மக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி பயில அனுப்புவதற்கு காரணமாக உள்ளது. ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் ஏற்பட்ட பின்னர்தான் சேரி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் கழுத்தில் ‘டை’ கட்டிக் கொண்டு கிழிசல் இல்லாத ‘ டவுசருடன் ’ பள்ளிக்குச் செல்லும் அழகைப் பார்க்கிறோம்.

ஆரம்பக் காலங்களில் பாலிடெக்னிக் என்பது பார்ப்பனக் குழந்தைகளுக்கு என்றும் ஐ.டி.ஐ என்பது பிற சாதியினருக்கு என்று இருந்ததையும் மாற்றி சேரி மக்கள் குழந்தைகளும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குழந்தைகளும் பாலிடெக்னிக் படிக்க முடிகிறது எதனால் என்பதையும் உணர வேண்டும்.

இன்று பெருமளவில் இன்ஜினியரிங் கல்லூரி வந்து அனைத்து வகுப்பினரும் இன்ஜினியரிங் படிப்பதால் ஏற்கனவே பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இப்படிப்பு இப்போது எல்லா சாதியினருக்கும் பொதுவுடமை ஆக்கப்பட்டு விட்டதே. இதற்கும் பெரியாரின் தொலைநோக்கு உணர்வுதானே காரணம்.

தமிழ் வழிக் கல்வியை விரும்புகிறவர்கள் இன்றுவரை அதற்கான எந்த ஒரு சிறு முயற்சியையும் எடுக்கவில்லை.

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மருத்துவர் டொமினிக் சுவாமிநாதன் அவர்களைக் கொண்டு தமிழில் மருத்துவம் படிப்பதற்கான குழு அமைக்கப்பட்டது. அவரும் அதற்கான வரைவுகளைத் தயார் செய்தார். அதை கணினியில் ஓரு வாரம் உடனிருந்து இரவில் அச்சிட்டுக் கொடுத்தவன் நான். ஆனால் தமிழறிஞர்கள் அவரையோ அவரின் செயல்பாட்டையோ கண்டு கொள்ளவே இல்லை. திரு. டொமினிக் சுவாமிநாதன் அவர்களுக்கு இருந்த தமிழ் ஆர்வத்தை அக்கறையை நான் நேரில் பார்த்தவன்.

இப்போது திருவாரூரில் மருத்துவர் ஜெயசேகர் அவர்கள் இருக்கிறார்கள். எம்.டி. பட்டபடிப்புக்கான தேர்வை தமிழில் எழுதினார்கள். அவர்களுடைய தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் இன்றுவரை போராடி வருகிறார். எந்த தமிழ் அமைப்புகளும் அவருக்கு எந்த ஆதரவும் தந்ததில்லை.

ஆனால் அவரோ அதைப்பற்றியயல்லாம் கவலைப்படாமல் தமிழில் படிப்பதற்காக ஆங்கிலத்திலிருந்து அவரே மொழிபெயர்த்த எம்.டி. படிப்பிற்கான அனைத்து தமிழ்ப் பாடங்களையும் அச்சிட்டு புத்தகமாக வெளியிட்டு வருகிறார். அந்த பாட நூல்கள் அனைத்தும் மருத்துவத் துறைக்கு கருவூலங்கள். மருத்துவத்திற்கு தமிழில் நூல்கள் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது என்ற அளவிலான நூல்கள். இக்கருத்தை நான் முனைவர் கு.அரசேந்திரன் அவர்களிடம் மருத்துவர் ஜெயசேகர் அவர்களை வைத்துக் கொண்டே கூறினேன். கு.அரசேந்திரன் அவர்களும் மகிழ்ந்து ஒவ்வொரு நூலின் ஒரு படியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். இவையயல்லாம் நான் கூற காரணம், மருத்துவர் ஜெயசேகர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட தமிழ் அமைப்புகள் யாரும் முன்வரவில்லை என்பதால்தான்.

புதுச்சேரியில் மருத்துவர் அரிமாமகிழ்கோ அவர்கள் அரசு மருத்துவமனை யில் பணியாற்றி வந்தவர். தமிழில் மருந்து சீட்டு எழுதி நோயாளிகளுக்கு கொடுத்தார் என்பதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்காக எந்த தமிழ் அமைப்புகளும் போராட முன்வரவில்லை.

இதையயல்லாம் அவர் காலத்தில் பெரியார் செய்தார். மறைமலையடிகளுக்கு சிக்கல் என்றால் போரடினார். தமிழ் புலவர்களுக்கு சமஸ்கிருத புலவர்களை விட ஊதியம் குறைவு என்றால் போராடி உரிமையையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் பெ.மணியரசன் இதெல்லாம் மொழிக்கொள்கையாகாது என்று கூறுகிறார்.

அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான் என்றார் பெரியார். உடனே பெ.மணியரசன் துள்ளிக் குதிக்கிறார். ஆகா பெரியார் மாட்டிக் கொண்டார் என்று. உடனே கேள்வி கேட்கிறார், ‘ உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிதான் உயர்வின் எல்லையா? "

பெரியார் நன்றாகவே அடைமொழி போடுகிறார், அதாவது ‘அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் ’ என்று. இவனே ஆங்கிலம் ஒன்றைமட்டுமே படித்துவிட்டு வேறு எந்த தகுதியுமேயில்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறான் என்றுதான் கூறுகிறார்.

தமிழறிஞர்களுக்காக பெரியார் வருத்தப்படுகிறார், ‘தமிழ் மொழிக் களஞ்சி யங்களான ‘மாணிக்க வாசகர் காலம்’ எழுதிய காலஞ்சென்ற மறைமலையடிகள், பெரியபுராணத்திற்கு புதுஉரை எழுதிய திரு.வி.கலியாணசுந்தரம் முதலியோர் வாழ்வில், முக்கியத்துவத்தில் என்ன தரத்தில் இருந்து சென்றார்கள்? "

பெரிய அளவில் வாழ்க்கைத்தரத்தில் பெரும்வாழ்வு வாழவில்லை என்பது தானே பெரியாரின் கவலைக்கு காரணம். இங்கு காலம் சென்ற அறிஞர்களைப் பற்றிக் கூறுகிறார். அவர்கள் ‘சைவத்தை நிலைநிறுத்திய மூடநம்பிக்கைக் களஞ்சியங்களாகத்தானே முடிவெய்தினார்கள்’ என்று கவலைப்படுகிறார்.

காலஞ்சென்றவர்களைப் பற்றி கவலைப்பட்ட பெரியார், இப்பொழுது வாழ்கின்ற காலஞ்செல்லாத அறிஞர்களைப் பற்றியும் கவலைப்படுகிறார்,

‘காலம் செல்லாத இன்றையத் தமிழ்க் களஞ்சியங்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டாக்டர்கள் சிதம்பரநாதன் செட்டியார், மு. வரதராசனார், இராஜ மாணிக்கனார் மற்றும் ஒரு டஜன் உருப்படிகளின் இன்றைய நிலை என்ன? அவர்களால் ஒரு அளவுக்கு நன்றாய் பிழைக்கிறார்கள் என்பதை தவிர நாட்டிற்கோ மனித சமுதாயத்திற்கோ என்ன பயன்? அன்னக் காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான்’ என்று வேதனைப்படுகிறார்.

பெரிய அறிஞர்கள் டாக்டர்கள் எல்லாம் சாதாரண வாழ்வே வாழ்கிறார்கள். அன்னக்காவடி பார்ப்பான் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிறான் என்றுதானே பெரியார் கவலைப்படுகிறார். பெ.மணியரசனுக்கு இது புரியவில்லையா? இல்லை. புரிகிறது. அதனால்தான் அடுத்து எழுதுகிறார் பெ.மணியரசன், ‘பெரியார் குறிப்பிடும் தமிழறிஞர்கள் அத்தனைபேரும் மிகச் சிறப்பாக ஆங்கிலம் கற்ற ஆய்வாளர்கள். ஒருவர் ஆங்கிலம்-தமிழ் அகராதி எழுதிய அறிஞர் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். இவர்கள் உயர் பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்து ஒளி வீசியவர்கள். இவர்களை ‘காலஞ்செல்லாத தமிழ்க் களஞ்சியங்கள் ’ என்று பெரியார் குறிப்பிடுவது நடப்புக்கு முரணான செய்தி. இவர்களைப் போன்ற ‘ ஒரு டஜன் உருப்படிகள்’என்று பெரியார் கூறுவது தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப்பைத்தியங்கள் உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற கருத்தாகும். பெரியாரின் இக்கணிப்பு தவறு ’.

இறுதியாக தமிழறிஞர்களுக்கு ஆதரவான குரலையும் கவலையும் பெரியார் தெரிவிக்கிறார், ‘பார்ப்பனரல்லாத என்கின்ற உணர்ச்சிப் போராட்டம் இல்லா திருந்தால் இந்த மேதாவி டாக்டர்கள் மகான்கள் நிலை இன்று எப்படி இருக்கும்? கிறுக்கன் பாரதிக்கு இருக்கிற மதிப்பில் நூற்றில் ஒன்று கூட இவர்களில் எவருக்குமே இன்று இல்லை. இவர்கள் தரத்தைவிடக் குறைந்த தரமுள்ள, ஆங்கிலத்தில் பேர் பெற்றவர்கள், சாதாரண அளவு ஆங்கிலப் படிப்பாளிகள் எவ்வளவு மேல் நிலையில் இருக்கிறார்கள் ’.(விடுதலை தலையங்கம் 5.4.1967)

பெரிய அறிஞர்கள் பொருளாதாரத்திலாவது பெரும் வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டாமா? என்பதுதான் பெரியாரின் கவலை. மேலும் ‘ உருப்படிகள் ’ என்ற சொல்லையும் ‘காலஞ்செல்லாத’ என்ற சொல்லையும் ஒன்றாக இணைத்து குழப்பி பெரியார் மீது குற்றஞ்சாட்டுகிறார் பெ.மணியரசன்.

மேலும் பெரியாரோடு இருந்ததால்தான் சாமி.சிதம்பரனார், புலவர் குழந்தை, பொன்னம்பலனார் மற்றும் பாரதிதாசன் சமுதாய சிந்தனைகளில் ஈடுபட்டு செயல்பட முடிந்ததே தவிர பெ.மணியரசன் கருதுவது போல் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் என்பதால் அல்ல.

மறைமலையடிகளைப் பற்றியும் திரு.வி.க அவர்களைப் பற்றியும் குறிப்பிடும் போது பெரியார், ‘மரியாதைக்குரிய - பாராட்டத்தகுந்த தமிழ்ப் பெரியார்கள் மறைமலை அடிகள் முதல் திரு.வி.க.வரை உள்ள பெரியார்களிடம்- அவர்கள் கருத்துக்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறைகளில் இருந்து, இன்றைய நாட்டு முன்னேற்றத்திற்கு என்றோ மக்கள் முன்னேற்றத்திற்கென்றோ எடுத்துக் கொள்ளதக்க சாதனங்கள் என்ன இருக்கின்றன என்று அன்பர்கள் தோள் தட்டிக் கூறமுடியுமா? ’ (பெ.ஈ.வெ.ரா.சி. பக்.992) என்றுதான் குறிப்பிடுகிறார். மறைமலையடிகளைக் குறிப்பிடும்போதும் திரு.வி.க. அவர்களைக் குறிப்பிடும் போதும் தமிழ்க் களஞ்சியங்கள் என்றுதான் கூறுகிறார்.

முற்றும்

- கவி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை Empty Re: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum