சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 12:04 am

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 8:02 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 7:50 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 2:27 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Khan11

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் Sun Jan 24, 2016 12:24 am

First topic message reminder :


பகுதி - 2           பகுதி - 3         பகுதி - 4       பகுதி - 5       பகுதி - 6      பகுதி - 7



(பகுதி-1)


"என்ன வேலாயுதம்... பொங்கல் முடிஞ்சிருச்சு இன்னும் மடக்கரைச் செய்யை அறுக்காம போட்டு வச்சிருக்கே..." என்று கேட்டபடி வந்து திண்டில் அமர்ந்த பஞ்சநாதன், "கொஞ்சம் போயில கொடேன்... வாங்கணுமின்னு நினைச்சித்தான் டவுனுக்குப் போனே... சுத்தமா மறந்துட்டேன்... இப்பத்தான் ராமசாமி மவனுக்கிட்ட காசு கொடுத்து விட்டிருக்கேன்..." என புகையிலையை வாங்கி கையில் வைத்து தேய்த்து வாயில் லாவகமாக அதக்கிக் கொண்டார்.
"தாள் கொஞ்சம் பச்சையா இருக்கு... அது போக வயலும் கொஞ்சம் ஈரமாத்தான் இருக்கு அதான் காயட்டும்ன்னு போட்டு வச்சிருக்கேன். எங்க அண்ணமவன் ரெத்தினமும் நானுந்தானே  களம் ரெடி பண்ணினோம். அவன் மேட்டுச் செய்யி அறுத்திருக்கான்... வேலை முடிச்சு களம் நமக்கு கிடைக்க இன்னும் ரெண்டு நாளாகும். இப்ப அறுத்து அங்க கொண்டு போயிப் போட்டா அவனுக்கும் சிரமம் நமக்கும் சிரமம்... அதான் காயட்டும்ன்னு விட்டு வச்சிருக்கேன்."
"அது செரிதான்... கோயில் மாடு பாக்கணுமேப்பா... அதான் கேட்டேன்..."
"மடக்கரை பக்கந்தானே.... இங்க அவ்வளவு சீக்கிரம் மாடு வராது... இன்னும் நீர்ப்பிடிச் செய்யி பக்கமெல்லாம் அறுக்காம போட்டு வச்சிருக்காங்க... ஆளுகளும் காவலுக்கு போகுதுல்ல... நானும் வயல்லதானே படுக்கிறேன்... இன்னும் ரெண்டு நாள்தானே..."
"ம்... ஆமா சவுந்தரம் எங்கே...? நீ மட்டும் இருக்கே...?"
"மடக்கரை செய்யி அறுக்கும் போது வீட்லயும் ஆளு வேணுமில்ல... அதான்... செல்வி வீட்டுக்கு ஒரு எட்டு பொயிட்டு அதைக் கூட்டிக்கிட்டு வாறேன்னு சொன்னா...  சரி பொயிட்டு வான்னு சொன்னேன்... இப்ப வந்துருங்க... என்ன அவ இருந்தா இருண்ணே காபி போடுறேன்னு சொல்லுவா... நா போயிலதானே கொடுக்க முடியும்..." வேலாயுதம் சிரித்தார்.
"ஏய் அதுக்கு கேக்கலைப்பா... என்னோட சத்தம் கேட்டா வாண்ணேன்னு வந்துருவா... காணாமேன்னு கேட்டேன். ஆமா இந்தப் பொங்கலுக்கும் நீ மூத்தவனைக் கூப்பிடலையா ..?"
"இப்ப எதுக்கு அவன் பேச்சு... இதுக்குத்தான் சவுந்தரம் எங்கேன்னு கேட்டியாக்கும்..?" வேலாயுதம் கோபமாய்க் கேட்டார்.
"இந்தாப்பா... இப்ப எதுக்கு கோபப்படுறே..? எம்புட்டுக் காலந்தான் தள்ளி வைப்பே..? கண்கானாத இடத்துல இருந்தாலும் பரவாயில்லை... திருச்சியிலதானே இருக்கான்... நம்ம பயலுக பூராம் அவனோட பேசுறானுங்க... வயசான காலத்துல பழசை தூக்கி வச்சிக்கிட்டு இருந்து என்ன பண்ணப் போறோம்... சொல்லு..."
"அதுக்காக அப்பனாத்தாவை மதிக்காத  மசுருப்புள்ளையை கூட்டி வச்சி கொஞ்சச் சொல்றியா..?"
"அவனுக்கும் குடும்பம், குழந்தையின்னு ஆச்சு... ஆணொன்னு பொண்ணென்னுன்னு சொன்னானுங்க... ஆமா உனக்குத் தெரியாமயா இருக்கும்... நல்லது கெட்டதுக்கு வாடான்னு சொல்லி அவனையும் சின்னவனையும் சேர்த்து வச்சியன்னா உறவு விட்டுப் போகாம இருக்கும்ல்ல... நாளைக்கி அவனுக ஒருத்தனுக்கு ஒருத்தன் ஆதரவா இருப்பானுங்கதானே..."
"இங்க பாரு... அவனோட முகத்துலே முழிக்கக் கூடாதுன்னு சவுந்தரம் வைராக்கியமா இருக்கா... சின்னவங்கிட்ட சொன்னா எங்களை இந்த வீட்டை விட்டு விரட்டிருவான்... கேடுகெட்ட பய எங்கயோ இருந்துட்டு போகட்டும்... ஆடு பகையாம்... குட்டி உறவாம்... நல்லாயிருக்கே... எதுக்கு இப்ப அவனைப்பத்தி பேசுறே..? இதுக்குத்தான் இங்க வந்தியா..?"
"இப்ப இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் சகஜம்தானேப்பா... ஏன் நம்ம நாகம்மா மகன்... அதான் அந்த ராம்கிருஷ்ணப்பய... புவனான்னு ஒருத்தியை எவ்வளவு எதிர்ப்புக்கு இடையில் தூக்கிட்டுப் போயி தாலி கட்டினான்.... இப்ப அவன் ரெண்டு சாதிசனத்துலயும் சேந்து நல்லது கெட்டதுக்கு நிக்கலையா..."
"அதுக்காக நம்ம சாதிக்குன்னு இருக்க மரியாதையைக் கெடுத்துட்டு எவளோ ஒருத்திய இழுத்துக்கிட்டு போனா... அந்த நாயை நடுவீட்டுல கொண்டாந்து உக்கார வச்சி சோறு போடணுமா...? இங்க பாரு... எனக்கு சாதிதான் முக்கியம்...எஞ்சாதிக்கு மதிப்புக் குறையிற மாதிரி எது நடந்தாலும் நான் இப்படித்தான்... கோயில்ல கூட பாரு அம்மனும் அய்யனும் கோபுரத்துக்குள்ள இருக்க... உளி வீரன் வெளியிலதான் நிக்கிறான்... அப்படித்தான்... என் சாதி... என் இனம்... இதுல நான் இப்படித்தான்... எதுக்காகவும் என்னை மாத்திக்க முடியாது..."
"என்னப்பா நீ இப்பவும் சாதி சாதியின்னு பேசுறே.... அதெல்லாம் எப்பவோ மல ஏறிப்போச்சு... இப்ப எல்லாரும் ஒண்ணு மண்ணா ஆயிட்டோம். அன்னைக்கு கும்புடுறேன் ஐயான்னு கக்கத்துல துண்டை வச்சிக்கிட்டு வீட்டு வாசல்ல வந்து நின்ன செபத்தியான் மகன் இன்னைக்கு நம்ம ஏரியா தாசில்தாரு... அவரப் பாக்க போயி இப்ப நாம வணக்கந்தம்பின்னு நிக்கிறோம்... இதுதான் உண்மை... சாதியை வச்சி அரசியல்வாதிங்க பொழப்பு நடத்தலாம்... நம்மள மாதிரி மனுசங்க அதுல விழக்கூடாது... அவன் கட்டுனவ ஒண்ணும் குறைச்சலில்லையே... சரி விடு... இனி சாதி அது இதுன்னு பேசாம நாம வாழப்போற கொஞ்ச நாளைக்குள்ள... நமக்கு அறுவடை தேதி வர்றதுக்குள்ள அவனை வீட்டோட சேர்க்கப்பாரு"
"அட சும்மா இருப்பே... நீ வேற... நாஞ் செத்தாக்கூட அவனும் அந்தச் சிறுக்கியும் இந்த வீட்டு படிவாசல் மிதிக்கக்கூடாது...."
"இதுக்கு மேல உங்கிட்ட பேசி காரியம் இல்லை.... விடு.... ஆமா இந்தத் தடவை அம்மா ஜெயிக்குமா...?"
"ஆமா அவளைச் ஜெயிக்க வச்சி இன்னமும் இலவசத்துப் பின்னால போயி இருக்கிறதை எல்லாம் இழக்க வேண்டியதுதான்..."
"நீ ரொம்ப சூடா இருக்கே... நான் அப்புறமா வர்றேன்..." என்றபடி எழுந்து துண்டை உதறினார்.


***
"டேய் உள்ள வாங்கடா..." என்றான் பார்த்தசாரதி.
"இல்லடா... நாங்க இங்க நிக்கிறோம்... நீ போ..." என மறுத்தான் கண்ணன்.
"அட வாங்கடான்னா..." என்று அவன் அதட்ட, அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
"ஏன்டாம்பி இவாள்ளாம் யாரு...? ஆத்துக்குள்ள தபதபன்னு நுழையுறா...?" என்று மறித்தாள் அன்னபூரணி.
"பாட்டி என்னோட பிரண்ட்ஸ்... நாந்தான் வீட்டுக்கு கூட்டியாந்தேன்..." என்றான் பார்த்தசாரதி.
"என்ன குலம்... என்ன கோத்திரம்ன்னு தெரியாம... கண்டவா எல்லாம் உள்ள நுழைய இது என்ன மடமா... ஆச்சாரமான குடும்பம்டா... ஏய் அம்பிகளா சித்த வெளிய நில்லுங்கடா..."
"டேய் அதான் சொன்னேன்.... நீங்கள்லாம் ஆச்சாரம் அந்தஸ்துன்னு பார்க்கிற இடம்... நாங்க வெளிய நிக்கிறோம்..." என்று கோபமாய்ச் சொன்னான் கண்ணன்.
"என்னடாம்பி உனக்கு இப்படிக் கோபம் வர்றது... எங்களுக்குன்னு சில ஆச்சாரம் அனுஷ்டானம் இருக்கோன்னோ... தெரிஞ்சிக்கோ... ஏய் அவா நின்ன இடத்துல ஜலம் எடுத்து தெளியுங்கோ" அன்னபூரணி படக்கென சொன்னாள்.

(பகுதி 2 : சனிக்கிழமை தொடரும்)

(வாழ்க்கயைப் பேச இருக்கும் இந்த புதிய தொடருக்கு உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்)
என் தளத்தில் வாசிக்க  [url= http://vayalaan.blogspot.com/2016/01/1.html]இங்கு[/url] கிளிக்கவும்

-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Wed Mar 09, 2016 11:21 pm; edited 9 times in total
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down


தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-5)

Post by சே.குமார் Sun Feb 21, 2016 10:23 am

வேலாயுதம் தன் கோபத்தை மாப்பிள்ளையிடம் காட்ட முடியாமல் சாப்பாட்டில் காட்டிவிட்டு எழுந்து சென்றதும், கணவன் ராமநாதனுக்கு கை துடைக்க துண்டு எடுத்துக் கொடுப்பது போல் அவனருகில் போய் ‘என்னங்க நீங்க அவருக்குத்தான் அவனைப் பற்றி பேசினால் கோபம் வரும்ன்னு தெரியும்ல… அப்புறம் எதுக்கு சொன்னீங்க… சாப்பிடாமப் பொயிட்டாரு பாருங்க…”
“சாதி வீம்பு தண்ணி ஊத்தாதுன்னு உங்கப்பாக்கிட்ட சொல்லு செல்வி…” சத்தமாகப் பேசினான்.
“எதுக்கு கத்துறீங்க..? மெதுவாப் பேசுங்க…”
“ஆமா… ஆ…ஊன்னா என்னைய அடக்கப்பாரு… இந்த வயசுல இந்தாளு சாதியைத் தூக்கி சுமந்துக்கிட்டு என்னத்தை அள்ளிக்கிட்டுப் போகப்போறாரு… ஆமா… அவனை மொத்தமாவே அறுத்துக் கழுவிறனுமின்னு நினைக்கிறாரா..? “
“அது எதுக்குங்க இப்ப… கொஞ்சம் சும்மா இருங்களேன்… இந்தாங்க வெத்தலை… வாய்க்குள்ள வச்சி அமுக்குங்க… அப்பத்தான் எதுவும் பேசமாட்டீங்க…” என வெத்தலையை நீட்ட, “ஆமாடி எதாச்சும் கொடுத்து என் வாயை அடைச்சிரு…” என்றபடி வாங்கிக் கொண்டு அங்கு கிடந்த கட்டிலில் அமர்ந்தான்.
‘கேட்டது மாப்பிள்ளையாப் போச்சு... இல்லேன்னா இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பேன்’ என்று மனசுக்குள் பொருமிக் கொண்டே கையில் எடுத்து வந்த வெற்றிலையை துண்டில் தேய்த்து... காம்பு கிள்ளி... நரம்பு எடுத்து... அதன் பின்புறத்தில் சுண்ணாம்பை நாலைந்து இடத்தில் தடவி... கொட்டப் பாக்கை வைத்து மெல்லச் சுருட்டி வாய்க்குள் அதக்கிக் கொண்ட வேலாயுதம்... அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்... நிலவைச் சுற்றி ஒரு வட்டம் தெரிந்தது... ‘கோட்டை கட்டியிருக்கு... இனி மழ பேஞ்சு என்னாகப் போகுது... கோடையா போடப் போறானுங்க....’ என்று நினைத்து சிரித்தபடி நட்சத்திரங்களை ரசிக்கலானார்.
மாடுகளிடம் கிடந்த வைக்கோலை ஓரிடத்தில் குவித்து... அவற்றை ‘இஞ்சே... ம்ம்ம்.. ‘ என்று வாலை முறுக்கி எழுப்பி விட, அவை முதுகை வளைத்து ஒரு நெளி நெளித்துவிட்டு ‘சர்...’ என மூத்தரத்தைப் பெய்ந்தன. ‘புது வக்க... உங்களுக்கு இறங்க மாட்டேங்குது...’ என்று திட்டிக் கொண்டே நகர்ந்த பஞ்சநாதன் வாசலில் தனியே அமர்ந்திருந்த வேலாயுதத்தைப் பார்த்ததும் அங்கு வந்தார்.
“என்ன வேலாயுதம்... பலமான யோசனையா இருக்கு?” என்று சிரித்தார்.
“ஆமா கோட்டை கட்டப் போறேன் பாரு... சாப்பிட்டு வெத்தல போட்டுக்கிட்டு இங்கிட்டு காத்தாட வந்து ஒக்காந்தேன்.... வானத்தைப் பாத்தேன்... கோட்டை கட்டியிருந்துச்சு... அப்படியே நச்சத்திரங்களை எண்ணிக்கிட்டு ஒக்காந்திருக்கேன்... ஒக்காரு... சாப்பிட்டியா...? கோழிக் கொழம்பு... கொஞ்சம் சாப்பிடு...”
“சாப்பிட்டேன்... படுக்கப் போனேன்... ஒண்ணுக்குப் பொயிட்டு படுக்கலாம்ன்னு வந்தேன்... மாடுக புது வக்கல்ல... அதான் திங்காம இழுத்துப் போட்டு படுத்திருந்துச்சுக... எழுப்பி விட்டு குமிச்சி வச்சிட்டு வாறேன்... ஆமா அறுப்பெல்லாம் முடிச்சிட்டே... இனி சின்னவன் வீட்டுக்கு அரிசி கொண்டுக்கிட்டு ஓடுவியே...?”
“ஆமா... செல்வி இருக்கும்போதே அவிச்சிரலாம்ன்னு பாத்தேன்... நாளக்கி காலயிலதான் அவிக்கணும்... சாதிச் சங்க போர்டு வேற வைக்க வர்றாக...”
“நானும் கேக்கணுமின்னு நினைச்சேன்... இந்தப் பயலுக வண்டியில் முன்னாடி பின்னாடியெல்லாம் சாதி பேரைப் போட்டு ஒரு மார்க்கமாத் திரியிறானுங்க... இதுல தலைவர் படம் வேற... அவரு சுதந்திரத்துக்கு போராடுன மனுசன்... அவரை சாதிக்குள்ள கொண்டு வர்றது நல்லாவா இருக்கு... இதுல சாதிப் போர்டு வேற... நல்லாயிருக்க ஊருக்குள்ள நாமளே எதுக்கு ஏழரையை இழுத்தாரணும்...”
“என்ன எழரையை இழுக்கிறோம்.... மத்த சாதிக்காரனுக தலைவரா வச்சிருக்கிற எல்லாருமே நாட்டுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடுனவுகதானே... நம்ம பயக வச்சா தப்பா.... நம்ம சாதிக்குன்னு சங்கப் போர்டு வைக்கிறதுல என்ன தப்பு இருக்குன்னேன்... இப்பத்தான் ஒருத்தரு எனக்கு பாடம் சொன்னாரு... அடுத்து நீயா...?” வேலாயுதம் கோபமாக் கேட்டார்.
“யாரு செல்வி வூட்டுக்காரரா...? அவருக்கிட்டயும்  சாதிக்காக சண்டை போட்டியா... ஏம்ப்பா.... அந்தாளு இங்க வந்து மாங்கு மாங்குன்னு வேல பாக்கணுமின்னு என்ன இருக்கு... சின்னவனுக்குத்தானே அரிசியெல்லாம் போவும்... அவன் வந்தானா... தேவையில்லாம உனக்கு ஓடியாந்து பாக்குற மனுசனுக்கிட்ட எதுக்கு சத்தம் போடுறே...?”
“அட நீ வேற... இதே வேற யாராச்சும் எங்கிட்ட பேசியிருந்தா வேற மாதிரி நடந்திருக்கும்.... மாப்ள பேசினாரு... பேசாம வந்துட்டேன்... ஆனா எனக்கு சாதியும் கௌரவமுந்தான் முக்கியம்... உனக்கு சாதி தேவையில்லை... எனக்கு அது தேவை...”
“சரி விடு... படுக்கப் போகயில எதுக்கு உங்கிட்ட தர்க்கம் பண்ணிக்கிட்டு... ஆமா பெரியாண்ணன் பொண்டாட்டி செத்துப் போச்சாமேப்பா... “
“ஆமா... கேள்விப்பட்டேன்... நாளைக்கி பத்து மணிக்கு மேல போயிட்டு வருவோமா...?”
“சரி போவோம்... எனக்கு ஒறக்கம் வருது... “ என்றபடி பஞ்சநாதன் கிளம்ப, திண்ணையில் சாய்ந்து கைகளை தலைக்கு வைத்தபடி வானம் பார்த்தார்.  விண்மீன்கள் சில மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மேகத்தோடு நிலவு கண்டொழிந்து விளையாடியது. ஒரு ஏரோப்பிளேன் சிவப்பு விளக்கு மினுங்க போய்க் கொண்டிருந்தது.
தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 P02



ப்பத்தாவின் கத்தலை பொருட்படுத்தாமல் உள்ளே சென்ற அபி, ‘கண்ணண்ணா... ‘ என்று அவனருகில் அமர்ந்து மற்றவர்களை ‘வாங்கண்ணா’ என்றாள்.
“வந்ததும் உன்னைத்தான் கேட்டேன் தெரியுமா..? நீ டியூசன் பொயிட்டேன்னு அம்மா சொன்னாங்க...”
“நான் எங்கே போனேன்... அம்மாதான் விரட்டி அடிச்சாங்க... ஆமா எங்க பாட்டி எதாச்சும் சொல்லியிருக்குமே...?” என்றாள்.
“அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை... “ வேகமாகச் சொன்னான் அம்பேத்கார்.
“ஏய்... போய் காலம்பிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிண்டு வாடி...” அவளை விரட்டினான் சாரதி.
“எங்கடா... அம்மு பொயிட்டாளா?” என சாரதியிடம் கேட்டாள் அபி.
“அவதான் போறா... இங்க உக்காந்து கதை அடிச்சிண்டிருந்டா... சும்மா வம்பிழுத்தேன்... முஞ்சியை தூக்கி வச்சிண்டு உள்ளாற பொயிட்டா... அம்மாவும் பின்னாலயே போயாச்சு...”
“எப்பப் பார்த்தாலும் அவ கூட சண்டை போட்டிண்டே இரு...” என்றபடி உள்ளே போனாள்.
“அதென்னடா... அம்மு..?” மெல்லக் கேட்டான் ஜாகீர்.
“எங்க வீட்ல எல்லாருக்கும் செல்லப் பேர் இருக்கு... அவளை எல்லாரும் அம்முதான் கூப்பிடுவாங்க...”
“அம்மு... கும்முன்னுல்ல இருக்கா...?” வேகமாகச் சொன்னார் பிரவீன்.
கண்ணன் முறைக்க, “சும்மா ஜாலிக்காகச் சொன்னேன்டா... அவங்க இனி அண்ணி... கேலியெல்லாம் பண்ணமாட்டேன்... ஆமா சாரதி... உனக்கென்னடா செல்லப் பேர்..?”
“நான் சொல்ல மாட்டேன்... அப்புறம் காலேசுல அதைச் சொல்லி கூப்பிடுவீங்க...”
“இல்ல சுபஸ்ரீ பார்த்தசாரதியை விட.... அம்முவோட உன்னோட செல்லப்பேரைச் சேர்த்தா நல்லா வருதான்னு பார்க்கத்தான் கேட்டேன்...”
“எம் பேரு பார்த்தாடா...? போதுமா..?”
“இதுல என்ன செல்லம் இருக்கு...? எம்பேரு அம்பேத்கார்... எங்க வீட்ல அம்பேத்துன்னு சுருக்கி கூப்பிடுவாங்க... நீங்க அம்பேத்.. அம்பேத்துன்னு சொல்லுவீங்க... பார்த்தசாரதி... பார்த்தா.... செல்லப் பேராம்...” எனச் சிரித்த அம்பேத்கார்.... “அம்மு பார்த்தா... ஆத்தி... சொன்னா வேற மாதிரியில்ல அர்த்தம் வருது...” என்று சிரிக்க எல்லாரும் சிரித்தனர்.
“ஏய் அபி... அங்க என்னடி பண்றே...? கோவில் பக்கம் போறோம்... வாறியா... இல்லையா..? வர்றதா இருந்தா அவளையும்  கூட்டிண்டு வேகமா வாடி...” சாரதி கத்த, எல்லாரும் எழுந்து வீதிக்கு வந்தனர்.
கொஞ்ச நேரத்தில் அபி வெளியில் வந்தாள். “எங்கடி அவ...? வரலையாமா...?” வருத்தத்தோடு கேட்டான் சாரதி.
“வரலைன்னு சொல்லிட்டா... நீ அவளை ரொம்பத்தான் படுத்துறே... பார்த்தா அங்கயும் போயி என்னைக் கேலி பண்ணிண்டு இருப்பான்... நான் எங்க ஆத்துக்கு போறேன்னுட்டா....” வருத்தமாய்ச் சொன்னாள் அபி.
“டேய்... ரொம்ப ஜாலியாப் பேசினாங்கடா... எதுக்குடா தேவையில்லாம கேலி பண்ணி அவங்களை கோபப்பட வச்சே.... போ... போய் நீ கூப்பிட்டா அவங்க வருவாங்க... போடா...” என்றான் கண்ணன்.
“அடப்போடா... ரொம்ப சீன் காட்டுறா... வாங்க நாம போவோம்...” என்று சாரதி நடக்க, மற்றவர்கள் அவன் பின்னே நடக்க... அபியும் கண்ணனும் சிரித்தபடி பேசிக்கொண்டு நடக்க....
சுபஸ்ரீ வேகமாக ஓடிவந்து அபியின் தோள் பிடித்துச் சிரித்து கண்ணனைப் பார்த்தாள்.

நன்றி : படத்தை வரைந்த ஓவியருக்கு... இணையம் கொடுத்தது.
(அடுத்த சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே..குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by நேசமுடன் ஹாசிம் Sun Feb 21, 2016 3:30 pm

தொடருங்கள் அண்ணா படித்துவிட்டு எழுதுகிறேன்


தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by Nisha Sun Feb 21, 2016 5:00 pm

சே.குமார் wrote:
பானுஷபானா wrote:அருமை குமார் முழுக்கதையும் படிக்கும் ஆவல் வருகிறது. இனி 5 பாகம் எப்போதோ?????

தங்கள் ஊக்கத்திற்கு நன்றி அக்கா...
தொடர் வாசிப்பிற்கும் நன்றி...
சனிக்கிழமைகளில் தொடர்வேன்... தொடர்ந்து எழுதுவதா இல்லை நிறுத்திவிடலாமாங்கிற மனநிலையில்தான் பயணிக்கிறது....
நிறுத்தினால் கூட முழுவதும் எழுதியதும் தங்களுக்கு படிக்கத் தருகிறேன்... நன்றி.

இது என்ன புதுக்கதை குமார்? இந்த கதையெல்லாம் வேண்டாம், ஒழுங்கா முழுக்கதையையும் எழுதி பதிவிடணும், சொல்லி விட்டேன்!  சொன்னால் சொன்னது தான் நிஷாவின் சட்டம்.

 நான் நாளைக்கு படித்து கருத்து இடுவேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by பானுஷபானா Wed Feb 24, 2016 1:03 pm

கதை அருமையா போய்ட்டு இருக்கு குமார்.


ஏன் எழுதுவதை நிறுத்தப் போறீங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-6)

Post by சே.குமார் Sun Feb 28, 2016 10:29 am

சுபஸ்ரீ ஓடிவந்த வேகத்தில் அபியின் தோள் பிடித்து கண்ணனைப் பார்த்ததும் “என்னங்க நீங்க... அவன்தான் கிண்டல் பண்றான்னா... அதுக்காக கோவிச்சிக்கிட்டு...”

“அலோ... அவரு எப்பவுந்தான் கிண்டல் பண்ணுவார்... அவர் பண்றச்சே எல்லாம் பொறுத்துண்டுதான் இருக்கோம்... அதுக்காக முன்னப்பின்ன தெரியாதவாவை வச்சிண்டு கிண்டல் செய்யலாமோ...?”

“இல்ல... எங்ககிட்ட நீங்க ஜாலியா பேசிக்கிட்டு இருந்தீங்க...? திடீர்ன்னு கோபம் வந்துச்சா அதான் கேட்டேன்...”

“வீட்டுக்கு வந்த மனுசாக்கிட்ட எங்க பாட்டி மாதிரி பேசச் சொல்றீங்களா? அவருக்கு எனக்குந்தான் மேரேஜ்ன்னு வீட்ல பேசி வச்சிருக்கா...? அதுக்காக எப்பவும் கேலி பண்ணிட்டு இருந்தா... இப்ப இருக்கிற மாதிரித்தானே மேரேஜ்க்கு அப்புறமும் இருக்கச் சொல்லும்... அப்ப எங்களுக்குள்ள வீணாவுல பிரச்சினை வராதா...? ஏன் டைவர்ஸ் வரைக்கும் கூட போகலாம்தானே...”

“எதுக்குங்க டைவர்ஸ் அது இதுன்னு... சாரதி ரொம்ப நல்லவன்... யாரையும் கஷ்டப்படுத்த விரும்பமாட்டான்... அத்தை பொண்ணுன்னு ஜாலியா பேசிட்டான் விடுங்க...”
அவள் ஒன்றும் சொல்லாமல் நடக்க, அபி கண்ணனைப் பார்த்து “கண்ணண்ணா... பாட்டி என்ன சொன்னாங்க..?” என்றாள்.

“ஏய் அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை... “ மழுப்பினான் கண்ணன்.

“இல்லை நீங்க மறைக்கிறீங்க... ஏய் அம்மு பாட்டி என்ன சொன்னா..?” சுபஸ்ரீயைப் பார்த்துக் கேட்டாள் அபி.

“என்னத்தை சொல்லப் போறா... ஆச்சாரம், அனுஷ்டானம்ன்னு அந்தக் காலத்து பல்லவி பாடினா... உடனே உங்கண்ணன் பிரண்ட்... அதான் உங்க கண்ணண்ணனுக்கு கோபம், அப்புறம் அத்தை சமாதானப்படுத்தி இவாளை உள்ளற கூட்டிண்டு வந்தா...”

“அது சரி... எப்பவும் பாட்டிக்கு இதே வேலையாப் போச்சு... சாதி அது இதுன்னு பேசிண்டு... படிக்கிற இடத்துல சாதி பாக்க முடியுமா...?”

“முடியாதுதான்... பெரியவா.... அதுலயே ஊறுனவா... காலையில் எழுந்து குளிச்சிண்டு சூரிய நமஸ்காரம் பண்ணிட்டான்னா பின்னே... ஆத்துக்குள்ள வர்ற ஒவ்வொண்ணையும் கவனிக்க ஆரம்பிச்சிருவா... அவா எல்லாம் அப்படியே வளந்தவாதானேடி... இதுல வருத்தப்பட என்ன இருக்கு...”

“அதுக்காக..?”

“அபி ஒண்ணும் பிரச்சினை இல்லை... பெரிய மனுஷி... என்ன சாதி... என்ன மதம்ன்னு கேட்கிறது தப்பில்லைதானே... அதுதான் பாட்டியும் பண்ணினாங்க... விடு...”

“இந்தப் பெரியவங்கதாண்ணே பிரச்சினையே...”

“எல்லா இடத்திலும் அப்படித்தான்... சாதி, சாதியின்னு சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க... ஏன் இவரு வீட்ல கூட சாதியில ஊறின பெரியவங்க யாராச்சும் இருப்பாங்க... நாளைக்கு நாம அங்க போனா.... இவாள்ளம் எதுக்கு இங்க கூட்டிண்டு வாறேன்னு கத்துவாங்க... எல்லாத்தையும் விலக்கிட்டு நமக்குப் பிடிச்ச பாதையில பயணிக்கணும்... அதுதான் என்னோட பாதை... என்னோட பயணம்... இங்க இவங்களுக்காக ஆச்சாரமா இருக்க நான், கல்லூரி பிரண்ட்ஸ் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிட்டிருக்கேன்... அது நமக்கான வாழ்க்கை... நண்பர்கள் சூழ் உலகம்... அதுல நீ எஸ்.சியா, நான் எப்.சி என்றெல்லாம் பார்க்க முடியாது... பார்க்கவும் கூடாது. அப்படிப் பார்த்தா அதுக்கு பேர் நட்பே இல்லை... முதல் தடவை என்னோட பிரண்ட் மீனா வீட்டுக்குப் போனப்போ அவங்க அப்பா, ‘தாயி நீயெல்லாம் இங்க வரக்கூடாது’ என்றார். எதுக்கு வரக்கூடாது... என்னோட பிரண்ட் வீடு... அவளோட அப்பா அம்மா எனக்கும் அப்பா அம்மாதான்.... அப்புறம் எதுக்கு வரக்கூடாதுங்கிறீங்க... சாதியால உயர்ந்தவள்ன்னா... அடப்போங்கப்பா... உங்க ரத்தம், என் ரத்தம் எல்லாம் ஒண்ணுதான்... நாளைக்கே நான் அடிப்பட்டுக் கிடந்து ரத்தம் ஏத்தினாலும் அதுல இது எப்.சி. இது பி.சி, இது எஸ்.டி எஸ்.சியின்னோ... இல்ல இது முதலியார், இது யாதவர், இது செட்டியார் அப்படின்னோ எழுதியிருக்கப் போறதும் இல்லை... இது எந்த உடம்புல ஓடுன ரத்தம்ன்னும் யாரும் ஆராயப் போறதுமில்லை... இந்தக் குரூப் ரத்தம் இருக்கான்னுதான் பார்ப்பாங்க... அந்த நேரத்துல அந்த ரத்தம் தேவை அவ்வளவுதான்... குப்பனோட ரத்தம் குருக்களுக்குப் பொருந்தலாம்... குருக்களோட ரத்தம் ஆல்பர்ட்டுக்குப் பொருந்தலாம்... ஆல்பர்டோட ரத்தம் முகமதுக்கும் பொருந்தலாம்... அப்ப நமக்கு சாதியும் மதமும் பெரிசாத் தெரிவதில்லை... உயிர்தான் பெரிசாத் தெரியும்... சாகக்கிடக்கிறவன் இந்துன்னு சொல்லி முஸ்லீமோ, கிறிஸ்டியன்னு சொல்லி இந்தோ ரத்தம் கொடுக்க மறுப்பதில்லை... நான் கொடுக்கிறேன்னு சாதி மதம் கடந்து நிறையப் பேர் முன்னால வருவாங்க... இது எல்லாத்திலும் இருந்தா நல்லாயிருக்கும்... அப்படின்னு பேசினதும் என்ன அழகாப் பேசுறேம்மா... ஆனா ஊரு உலகம் என்ன பேசும் தெரியுமா? என்றார் ஆற்றாமையுடன். யார் பேசினா என்னன்னு நான் அவங்க வீட்டில் சாப்பிட்டேன். எனக்கு ஒண்ணும் ஆகலையே... அதான் சொல்றேன் பெரியவங்க அவங்க பாதையில பயணிச்சு நிறுத்தத்தை நெருங்கிக்கிட்டு இருக்காங்க.. அவங்க சாதி, மதத்தை சுமந்தது சுமந்ததுதான் போகும்போது நம்மக்கிட்ட இறக்கி வச்சாலும் அதை நாம தூக்கி சுமக்காம இறக்கி வச்ச இடத்திலேயே விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கணும்...” சுபஸ்ரீ நீளமாய் பேசி முடித்தாள்.

“அடேயப்பா... இப்படி நீ பேசினா அப்புறம் உனக்கு பரிசு கிடைக்காம வேற யாருக்குடி கிடைக்கும்... பாவம் எங்கண்ணன்... அவன் உன்னைக் கேலி பண்ணினா நீ அவனை பேசியே கொன்னுருவேன்னு நினைக்கிறேன்.... நீ சொன்னது எல்லாம் உண்மைதான்டி அம்மு... உன்னை மாதிரித்தான் நானும் சாதி மத வட்டத்துக்குள்ள உக்காரப் பிடிக்காதவள்...”

‘என்னமாப் பேசுறா...? எப்ப்ப்....பா... பேசினாள்ன்னா மெய் மறந்து கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலவே’ என்று நினைத்தபடி, ‘உண்மைதாங்க... அருமையாப் பேசினீங்க... இந்தா இங்க வந்திருக்கானே அம்பேத்கார்... அவங்க ஊர் திருவிழாவுக்குத்தான் முதல்ல போனோம்... சாரதி வரலை... மத்தவங்கதான் போனோம்.... எல்லாருக்கும் கலர் கொடுத்தாங்க... நான் சாப்பாடு இல்லையான்னு கேட்டதும்... தம்பி நீங்கள்லாம் நம்ம வீட்டுல.... அப்படின்னு இழுத்தாங்க... அட போங்கங்க அங்கிட்டு சாப்பாட்டைப் போடுங்கன்னு பந்தியில போயி உக்காந்தா... சாப்பாடு போடுறவன்ல இருந்து எங்களைச் சுத்தி நின்ன அவனோட சொந்தங்கள் எல்லாம் எங்களை புதுசாப் பாக்குற மாதிரி பார்த்தாங்க... அதுல ஒரு பொம்பளை...” பேச்சை நிறுத்தி சுபஸ்ரீயைப் பார்த்தான். அவள் ஒன்றும் பேசாமல் நடக்க, “சாரிங்க... எப்பவும் போல பொம்பளைன்னு சொல்லிட்டேன்... நீங்களெல்லாம் டீசெண்டா பேசுற ஆளுங்க... எங்க ஸ்லாங்க் அப்ப அப்ப இப்படித்தான்... ஒரு லேடி... பாருவே... அவனுங்கதான் சாப்பிடுறேன்னு சொன்னா இவங்க போடலாமா அப்படின்னு எங்க காதுபடவே சொன்னுச்சு... நாங்க வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பினோம். நான் வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி எங்கப்பாவுக்கு செய்தி போயாச்சு.... சாமி குத்தம் ஆயிடும்... நீ எப்படி அங்க சாப்பிடுவே.... முதல்ல குளிச்சிட்டு உள்ள வான்னு ஒரே கத்தல்... நானும் உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி எதிர் பாட்டுப் பாடிப் பார்த்தேன்... முடியலை... தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையை அடிக்காதீங்க... என எங்கம்மா சொல்லும் வரை நீடித்தது. அப்புறம் அப்பாவுக்கும் எனக்கும் ரொம்ப பேச்சு வார்த்தை இல்லை... ஆனாலும் நான் பிரண்ட்ஸ் வீடுகளுக்குப் போறதோ... சாப்பிடுறதோ குறையலை.... எதுக்காக நான் மாறணும்... சாதி சாதியின்னு திரியிற இந்த சமூகம் மாறட்டும்... இந்தச் சமூகத்தை மாற்றுவதில் என்னோட பங்கு சிறதளவேணும் இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன்... பார்க்கலாம்”

“ம்... ரெண்டு புரட்சியாளருக்கு இடையில் நான் மாட்டிக்கிட்டேன்...” என்று அபி சிரிக்க, சுபஸ்ரீ எதுவும் பேசாமல் நடக்க, சாரதி ‘கண்ணா வேகமாக வாங்கடா... அப்புறம் பேசிக்கலாம்’ என்று கத்த, நடையின் வேகம் கூடியது.

பெருமாள் கோவில் கோபுரம் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது.

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 South_tower



சுதந்திரத்துக்குப் போராடி, தன்னுயிரை பீரங்கிக் குண்டுக்கு இரையாக்கிய வீரனின் படம்... சீறும் சிங்கம்... சாதிக்கட்சிக்கான கொடி... அந்தச் சாதியைச் சேர்ந்த சினிமா நடிகரின் படம் என எல்லாம் வரையப்பட்டு முக்கியஸ்தர்களின் பெயரையும் சுமந்து புதிய மாலை போடப்பட்ட அந்த சாதிச் சங்கப் பலகை ஜொலித்தது. அருகே கொடி மரத்தில் கட்டப்பட்ட கொடி காற்றில் பறந்தது.

“எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா... நம்ம சாதிப் பசங்க இவ்வளவு ஆர்வமா சாதியை கொண்டாடுறதே பெருமைதானே... இன்னைக்கு அம்புட்டுப் பயலுக வண்டியிலயும் சாதியும் அரிவாளும் தலைவரோட படமுமா இருக்கு...  அன்னைக்கு கல்யாணப் பத்திரிக்கையில பேர் போட்டா போதும்ன்னு சொன்னோம்... இன்னைக்கு இருக்கிற இளைய தலைமுறை சாதியோட போடுது... சாதி உயிர்ப்பா இருக்கணும்ய்யா... இங்க இந்த போர்டு வைக்க ரொம்ப தீவிரமா முயற்சி செய்தது நம்ம வேலாயுதம்தான்... அவரு நம்ம சாதிச் சங்கத்துக்கு இந்த ஊரு தலைவரா இருக்கது பெருமையான விஷயம்... இனி நம்ம சாதித் தலைவரோட ஒவ்வொரு பிறந்தநாளையும் நீங்க மிகச் சிறப்பாக் கொண்டாடணும்...” என்று பிரசிடெண்ட் பேசிக் கொண்டிருக்க, அப்போது வேகமாக வண்டியில் வந்த மற்றொரு சாதிப் பசங்க மூணு பேர் “ டேய் மாப்ள... அந்த இடத்தைப் பாரு... சரியா வருமா... நம்ம போர்டு சும்மா அங்க இருந்து பாத்தாலே தெரியணும்... கரெக்டா இடம் பாரு... “ என்று சொல்லியபடி இறங்க, அவர்களின் பைக்கில் இன்னுமொரு சுதந்திரப் போராட்ட வீரர் சாதித் தலைவராய் சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கீழே ரத்தச் சிவப்பில் ‘.................’வன்டா என எழுதப்பட்டிருந்தது.
-‘பரிவை’ சே..குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by Nisha Wed Mar 02, 2016 6:50 am

ஆஹா மிக மிக மிக அருமையான கருத்தோடு கலக்குறிங்க குமார்!இரு வேறு பட்ட சூழலை மிக அழகாக குழப்பமில்லாமல் கையாள்வது சிறப்பு!

அந்தக்காலத்தில் எங்கப்பா இப்படித்தான் இருந்தார், அவர் கூட வேலை செய்பவர்கள் எந்த சாதியாயிருந்தாலும் அவங்க வீட்டில் போய் சாப்பிட்டு வருவார். எங்க அம்மம்மா அப்படி இல்லை, துணி துவைக்கும் ஆட்கள் வந்தால் அவங்களுக்கு டீ குடிக்க என தனி கிளாஸ் வைத்திருந்தா!அதற்கும் முன் தேங்காய் சிரட்டையை நன்கு மொழு மொழுவென சீவி அதில்  தான்  தண்ணீர் குடிக்க கொடுப்பார்கள். வீட்டுக்குள் எடுக்காமல் வெளி முற்றத்தில் வைத்து பேசி அனுப்புவா! நான் அறிந்து எங்கூரிலும் இந்த சாதிக்கட்டுப்பாடு இருந்ததை அறிந்து உணர்ந்தாலும் நானும் அனைவர் வீட்டுக்கும் போவேன்,போனாலும் அவர்கள் தாங்களாகவே  டீயெல்லாம் தராமல் கடையில் வாங்கும் கூல்ரிங்க்ஸ் தான் தருவார்கள் என்பது வேற கதை!இருந்தாலும் தட்டில் சம்பிரதாயமாய் தரும் ஸ்விட்ஸ்களை நசுக்கு பார்த்து நகர்த்தாமல் நல்லா சாப்பிட்டு விட்டு தான் வருவேன், இதற்காகவே என் அம்மா இப்படி எவரேனும் வீட்டு விஷேசம் அது இது என அழைப்பு தந்தால் என்னை அனுப்பி வைப்பார்! நானும் ஜாலியா கிளம்பிருவேன்ல!

 நான் ஊரில் இருந்த வரை என் நட்பின் ஐயர் பெண்ணும் இருந்தாள், சலவை செய்யும் வீட்டுக்கார பெண்ணும் இருந்தாள் 

உங்கள் கதையை படிக்கும் போது அப்பேத்கார் பற்றி அறியாமலேயே எங்கப்பா எங்களுக்கு அனைவரும் ஒரே சாதி என்பதை கற்றுதந்தார் என தோன்றுகின்றது.மதமு,சாதியும் நமக்குள் நுழையவே கூடாது குமார். அன்பு மட்டும் தான் அனைத்திலும் இருக்க வேண்டும், கதையில் சொல்லப்படும் கருத்துக்களுக்காக் உங்களுக்கு பத்து தடவை தமிழ் மண வாக்கு போடலாம், 

என் பாராட்டுகளும் வாழ்த்துகளும், கதையை நிறுத்தாமல் தொடர்ந்து எழுத வேண்டும் எனும் என் வேண்டுகோளை ஏற்பீர்கள் என நம்புகின்றேன். 
பின்னூட்டம் வந்தாலும் வராவிட்டாலும் கதை தொடர வேண்டும், சோர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் எழுத்தில் என்றும் பிரகாசிக்க வேண்டும்,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by பானுஷபானா Tue Mar 08, 2016 7:01 pm

அருமை குமார் இனி வரும் காலத்தில் எல்லாம் இந்த சாதியை கட்டிக் கொண்டு அழ யாரும் இருக்க மாட்டார்கள்.....

தொடர்ந்து எழுதுங்க......
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-7)

Post by சே.குமார் Wed Mar 09, 2016 11:19 pm

“ டேய் மாப்ள... அந்த இடத்தைப் பாரு... சரியா வருமா... நம்ம போர்டு சும்மா அங்க இருந்து பாத்தாலே தெரியணும்... கரெக்டா இடம் பாரு... “ என்று மூன்று பேர் இறங்க, பிரசிடெண்ட் பேச்சை நிறுத்தினார். சுற்றிலும் வேடிக்கை பார்த்த ஊர் மக்களும்,  வெள்ளையும் சொள்ளையுமாக நின்ற பெரிசுகள் ஏதாவது பிரச்சினை வருமோ என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

“என்ன செல்லையா... ?” வேலாயுதம் வந்திருந்த மூவரில் ஒருவனைப் பார்த்துக் கூப்பிட்டார்.

“என்ன மாமா?” என்றான் கருப்புச் சட்டை போட்டிருந்தவன்.

“ஏம்ப்பா.... போர்டு வைக்கிறீங்களா? நம்மது முடிஞ்சதும் வந்திருக்கலாமே?”

“மாமா... பிரச்சினைக்காகவெல்லாம் வரலை மாமா... தப்பா நினைக்காதீங்க.... நீங்க போர்டு வச்சிட்டீங்க... நாளைக்கு நல்லது கெட்டதுக்கு வர்ற சாதி சனம்... இந்த ஊருக்குள்ள இருக்க நாலு சாதியையும் பற்றி தெரிஞ்சிக்கணுமில்ல... நீங்க மட்டும் வச்சிட்டா... மத்த சாதிக்காரனெல்லாம் ஒண்ணுமில்லாதவானாப் போயிடுவானுல்ல... எங்களால உங்களுக்கு பிரச்சினை வராது மாமா... நாம ஊருக்குள்ள அப்படியா பழகியிருக்கோம்... நீங்க இந்த மாதிரி சாதிப் போர்டு வச்சி, கொடி ஏத்தப் போறோம்ன்னு சொல்லியிருந்தா... நாங்களும் சேர்ந்து நின்னிருப்போம்... எதுவுமே சொல்லாம நீங்க மட்டும் பண்ணினா என்ன மாமா நியாயம்...? ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனி கோவில் இருந்தாலும் திருவிழா, பொங்கல்ன்னு எல்லாம் எல்லாருமா கொண்டாடுறோம்.... இப்ப சாதிப் போர்டு வைக்கிறதுலயும் எல்லாரும் ஒண்ணா வைக்கலாமே...?”

“உங்களை யாருப்பா வைக்க வேண்டான்னு சொன்னா...? இடம் பாக்குறது அப்புறம் பாக்க வேண்டியதுதானே...?”

“இப்ப என்ன மாமா ஆச்சு... நாங்க அங்கிட்டுப் பாத்துட்டு அளந்துக்கிட்டு போகப் போறோம்... அதுல உங்களுக்கு என்ன பிரச்சினை...?”

“டேய் என்னடா... இப்பத்தான் பேசிக்கிட்டு... அவுக சாதிக்கு போர்டு வச்சிட்டாங்கதானே... பின்ன நாம வச்சா இவங்களுக்கு என்ன... வாடா...” இன்னொரு சிகப்புச் சட்டை கோபமாகப் பேசினான்.

“என்ன ராசு... பேசிக்கிட்டு இருக்கும் போது தேவையில்லாமப் பேசுறே...?” கோபமாகக் கேட்டான் முத்துக்குமார். இவன்தான் இளைஞர் மன்றத் தலைவர்.

“இங்க பாரு முத்து... நீங்க பாட்டுக்கு விழா நடத்துங்க... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம்.... நாங்க டிஸ்டர்ப் பண்ண வரலை...” என்றான் ராசு என்கிற சிகப்புச் சட்டைக்காரன்.

“நீங்க வந்திருக்கிறதைப் பார்த்தா... பிரச்சினைக்கு வந்த மாதிரித்தான் தெரியுது...” என்றார் வேலாயுதம்.

“ஏய் வேலாயுதம்... எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு... நாம செய்யும் போது அவனுக செஞ்சா என்ன... நீயும் அப்படித்தானே சொன்னே... பின்ன எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு.... நாம எல்லாரும் ஒண்ணுதானேப்பா... சாதியால பிரிஞ்சி நிக்க வேணுமான்னு கேட்டா, நீங்களெல்லாம் குதிப்பீங்க... இப்ப நாம வச்சாச்சு... இனி அவங்க வைக்கட்டும்... அப்புறம் அடுத்த ரெண்டு சாதிக்காரனும் வைக்கட்டும்... இதெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சதுதானே...” மெதுவாகச் சொன்னார் பஞ்சநாதன்.

“நீ வேறப்பா... எப்பப்பாரு எதாவது பேசிக்கிட்டு.... அவனுங்க செய்யட்டும் வேணாங்கலே... அதுக்கு இதுதான் நேரமா..? பேசிக்கிட்டு இருக்கும் போது பிரச்சினை பண்ற மாதிரி...”

“சரி விடு... அவனுங்க போகட்டும்... அப்புறம் பேசலாம்...” என்றார் பஞ்சநாதன்.

“இல்ல மாமா... நாங்க பிரச்சினை பண்ண வரலை...” என்று செல்லையா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஏய் ராசு... அங்க என்ன பிரச்சினை..?” என்றபடி வண்டியை நிறுத்தினார் வாத்தியார் வாசுதேவன்.

“இல்ல சித்தப்பா... ஒண்ணுமில்ல...” தலையைச் சொறிந்தான் ராசு.

“போங்கடா... போயி வேலையைப் பாருங்க... நல்லாயிருக்க ஊருக்குள்ள தேவையில்லாத வேலை பாத்துக்கிட்டு... சுயமா சிந்திங்கடா... படிக்கிற வயசுல எதைச் செய்யணுமோ அதைச் செய்யிங்க... சில பேருக்கு வயசானாலும் புத்தி வராது... போங்கடா... போர்டு, கொடியின்னு தூக்கிக்கிட்டு திரிஞ்சீங்க... எல்லாப் பயலையும் வெட்டி பொலி போட்டுருவேன்...” என்றபடி வேலாயுதத்தை முறைக்க,  அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

ராசு தன் நண்பர்களுடன் வண்டியை எடுக்க, “ஊரைக் கெடுக்குறதுக்குன்னே இருக்குதுக.. போய்ச் சேராம...” என்றபடி வண்டியை நகர்த்தினார் வாத்தியார்.

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Fuyqm_265604



பெருமாள் கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு பிரகாரம் சுற்றி வந்து வெளிப் பிரகாரத்தில் ஒரு ஓரமாக அமர, சாரதி கோவிலின் பெருமைகளையும் வரலாற்றையும் சொல்லி முடித்திருந்தான். அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அம்பேத்கார், “படிப்பு முடிச்சதும் எங்களுக்கெல்லாம் வேலை கிடக்காம தெருவுல திரிஞ்சாலும் உனக்கு மட்டும் வேலை இருக்கும் மாப்ள...” என்றான் சிரிக்காமல்.

“எனக்கு என்ன வேலை இருக்கு....?” சாரதி

“என்ன மாப்ள இப்படிச் சொல்லிட்டே... போட்டிருக்கிற சட்டையை கழட்டிட்டு வேஷ்டி, பூணூல், உடம்புல ஒரு துண்டைப் போட்டுக்கிட்டு “மாமி யாரு பேருக்கு அர்ச்சனை’யின்னு பேஷா சம்பாரிக்கலாமேடா...”

“ஏய்.... என்ன கிண்டலா...? இதெல்லாம் சரி வாரதுடா...”

“ஏன் வராது.... இன்னைக்கு நிலமைக்கு செலவில்லாத சம்பாத்யம்டா.... ஒரு அர்ச்சனைக்கு பத்து ரூபாய்... அப்புறம் என்ன...” சீண்டினான் பிரவீண்.

“சரி வாங்கடா... ஜாகீர் உள்ள வரலைன்னு வெளிய நிக்கிறான்... அங்கிட்டுப் போயி உக்காந்து பேசலாம்...”

“அவனைப் புரிஞ்சிக்க முடியலை... காலேஜ் போகும் போது வழியில இருக்க முருகன் கோவில் விபூதியை நம்ம கூட சேர்ந்து நெற்றியில இட்டுக்கிறான்... அப்ப நாம எதாவது சொன்னா அடப் போங்கடா.... உனக்கு முருகன் எனக்கு அல்லான்னு சிரிப்பான். ஆனா இங்க கோவிலுக்குள்ள வர்றதுக்கு யோசிக்கிறான்டா... சாரதி எவ்வளவோ கூப்பிட்டும் வரலைன்னு சொல்லிட்டான்...” என்றான் வருத்தமாய் அம்பேத்கார்.

“டேய்... அவனோட மனசு தெரியும்... ஆனா அவங்களுக்குன்னு ஒரு சில விதிமுறைகள் இருக்கும்... எதுக்கு அதை ஆராய்ந்துக்கிட்டு... ஒருவேளை அவனும் நம்ம கூட உள்ள வந்து நாம பேச்சு வாக்கில ஜாகீர்ன்னு சொல்லி, யாராவது கேட்டாங்கன்னா உடனே முஸ்லீம் பையனை எதுக்கு நம்ம ஐயர் மகன் கோவிலுக்குள்ள கூட்டியாந்திருக்கான்னு பேசுவாங்க... வீணாவுல எதுக்கு பிரச்சினை... வாங்க போகலாம்....”

வெளியில் வந்து எல்லாருமாக அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “சாரதி நாங்க நைட்டே கிளம்புறோம்டா... “ என்றான் கண்ணன்.

“ஏன்டா... காலையில பிள்ளையார்பட்டி பொயிட்டு அப்புறம் போகலம்டா... நைட் எங்க பழைய வீட்ல போயி தங்கலாம்...” என்றான் சாரதி.

“இல்லடா... நாளை மறுநாள் நடவு இருக்கு... நாளைக்கு நாத்துப் பறிக்க ஆள் வருதுன்னு அப்பா சொன்னாரு... நானும் இருந்தா வேலை ஆட்களோட என்னால முடிஞ்சளவு நாத்துப் பறிச்சி வைக்கலாம்... அப்பா வரும்போதே சொல்லித்தான் விட்டாரு...”

“அட.... விவசாய வேலை எல்லாம் தெரியுமா உங்களுக்கு...?” வேகமாகக் கேட்டாள் சுபஸ்ரீ.

“உனக்குத்தான் சுடுதண்ணி வைக்கவே தெரியாது... விவசாயக் குடும்பத்துல பிறந்தவனுக்கு விவசாயம் தெரியாதா என்ன... மண்டு...” என்றான் சாரதி.

“சாரதி நீ சும்மா இரு... மறுபடிக்கும் அவங்க கோவிச்சிக்கப் போறாங்க... எனக்கு எல்லா வேலையும் தெரியுங்க... “ என்றான் கண்ணன்.

“கண்ணண்ணா... எங்க அம்மு எல்லா வேலையும் நன்னா பார்ப்பா... அவ சமைச்சா அவ்வளவு டேஸ்டா இருக்கும்... எங்கண்ணா அவளை சும்மா வம்புக்கு இழுக்கிறான்...” என்றாள் அபி.

“அதானே... எப்பவும் சாரதிக்கு அவங்களை எதாச்சும் சொல்லணும்... அடியேய் ஆயுசுக்கும் அவங்க கையாலதான் சாப்பிடணும்... தெரிஞ்சிக்க” எனச் சிரித்தான் ஜாகீர்.

“அண்ணா... பேஸ்புக்ல கலக்கலா எழுதுறீங்க... நான் என் பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் எங்கண்ணன் எழுதியதுன்னு சொல்லி காட்டுவேன்...” என்றாள் அபி.

“அட ஏம்மா நீ வேற... நான் ரொம்ப நெருக்கமானவங்க தவிர வேற யாரையும் பிரண்ட்ஸா சேர்க்கிறதில்லை... சும்மாவே அப்பா கத்துறாரு... அதனால அதிகமா பேஸ்புக்ல இருக்கதில்லை... சரிடா சாரதி வாடா வீட்டுக்குப் பொயிட்டு சாப்பிட்டு கிளம்ப சரியா இருக்கும்” என்றான் கண்ணன்.

வீடு நோக்கி நடக்கும் போது “ஏய் அபி... அவரு ஐடி என்னடி...” மெதுவாகக் கேட்டாள் சுபஸ்ரீ.
(அடுத்த சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே..குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7) - Page 2 Empty Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum