சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Khan11

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

5 posters

Go down

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Empty சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

Post by *சம்ஸ் Sat 25 May 2013 - 12:03

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

பல்லாயிரக்கணக்கான திரை ரசிகர்களுக்கு 'நகைச்சுவை' எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.



1889-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சாப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.





உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Empty Re: சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

Post by *சம்ஸ் Sat 25 May 2013 - 12:04

அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலில் வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14-ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1913 ஆம் ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும், கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.



1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின்.

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான 'தி கிட்' 1921ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.



அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88-ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"

என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்.



'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற திருக்குறளின் வரியை நாம் கேள்வி பட்டிருப்போம். ஒரு சோகமான குடும்ப பின்னணியில் உதித்தாலும் நகைச்சுவை எனும் ஆயுதத்தை கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். குடும்ப பின்னனி சரியாக இல்லாவிட்டாலும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதை வாழ்ந்து காட்டியவர் சார்லி சாப்ளின். சார்லி சாப்ளினைப்போலவே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் எந்த வானத்தையும் வசப்படுத்த முடியும் என்பதுதான் சார்லி சாப்ளின் நமது காதோரம் சொல்லும் உண்மை.

MysteRy:
இசை மேதை மோட்ஸார்ட் (Mozart) - வரலாற்று நாயகர்

எதற்கும் மயங்காத உள்ளம் இசைக்கு மயங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். உலகத்திற்கே பொதுவான ஒரு மொழி என்றால் அது இசையாகத்தான் இருக்க முடியும். மனிதனின் எந்த ஒரு மனோநிலைக்கும் உகந்த ஒரு மொழி இசை. அப்படிப்பட்ட இசையை பாமரனால்கூட ரசிக்க முடியும் ஆனால் ஒரு சிலரால்தான் அற்புதமான உயிரோட்டமுள்ள இசையை உருவாக்க முடியும். அந்த ஒருசிலரில் முக்கியமானவர் தன் வாழ்நாளில் இசைபட வாழ்ந்தவரும் உலகிற்கு ஆஸ்திரியா வழங்கிய இசைகொடையுமான இசைமேதை மோட்ஸார்ட்.

1756 ஆம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் பிறந்தார் வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட் (Wolfgang Amadeus Mozart). மோட்ஸார்ட் பிறவி மேதை என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தென்பட தொடங்கின. மோட்ஸார்ட்டின் தந்தை லேபோல்ட் மோட்ஸார்ட் ஒரு சிறந்த வயலின் இசைக்கலைஞர். மோட்ஸார்ட்டுக்கு அவர் இசை கற்பித்தார். மோட்ஸார்ட் இசைக்கருவியை வாசிக்க தொடங்கியபோது அவருக்கு வயது மூன்றுதான். நான்காவது வயதில் அவர் இசை நூல்களை படிக்கத் தொடங்கினார். ஐந்தாவது வயதில் அவரே பாடல்களை இயற்றி இசையமைக்கத் தொடங்கினார். ஏழு வயதில் சொனாட்டாக்களை எழுதத் தொடங்கிய அவர் தனது எட்டாவது வயதில் ஒரு சிம்ஃபொனியை எழுதி முடித்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!!



மோட்ஸார்ட்டுக்கும் முன்பும் பின்பும் எத்தனையோ இசை மேதைகள் உதித்திருக்கிறார்கள் ஆனால் அவரைப்போல அந்த சிறிய வயதில் அவர்கள் அத்தனை சிகரங்களை தொட்டதில்லை. பத்து வயதுக்குள் அனைத்து இசைக்கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொண்ட மோட்ஸார்ட்டை இசை உலகம் அதிசயமாக பார்த்தது. இசை விற்பன்னர்கள் மோட்ஸார்ட்டை ஒரு தவப்புதல்வனாக பார்த்தனர். இசை கச்சேரிகள் நடத்தித் தருமாறு பல தேசங்கள் அவருக்கு அழைப்பு விடுத்தன. எனவே விளையாடித் திரிய வேண்டிய அந்த பிஞ்சுப் பருவத்தில் ஒவ்வொரு இடமாக பயணம் செய்து இசை கச்சேரிகளை நடத்தினார் மோட்ஸார்ட். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் தனது இசையை கேட்டவர்களையெல்லாம் சொக்க வைத்தார் மோட்ஸார்ட். அதே நேரத்தில் அவர் இசைக்கும்போது ஒட்டுமொத்த அமைதியை எதிர்பார்ப்பார். எவராவது இருமினாலோ அல்லது தும்மினாலோகூட அவருக்கு கோபம் பொங்கிவருமாம் அந்தளவுக்கு தனது இசைக்கு மிக முக்கிய அந்தஸ்த்தை கொடுத்திருந்தார் மோட்ஸார்ட்.



மோட்ஸார்ட்டுக்கு பத்து வயதானபோது அவரது இசைத்திறனைப்பற்றி கேள்விபட்ட வியட்நா மகாராணி மோட்ஸார்ட்டை தனது அரண்மனைக்கு அழைத்து இசை மீட்டச் சொன்னார். அந்த பத்து வயது பாலகனின் இசை பிரபாகத்தை கேட்டு மெய் மறந்துபோன ராணியார் பாராட்ட வார்த்தையின்றி மோட்ஸார்ட்டை தனது மடியில் வைத்து முத்தமிட்டு மகிழ்ந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பனிரெண்டு வயதானபோது ஜெர்மன் மொழியில் ஒரு இசை கச்சேரியை நடத்தி முடித்தார் மோட்ஸார்ட். பதினான்கு வயதில் அவர் இயக்கி வழங்கிய librettist Lorenzo Da Ponte என்ற ஆப்ரா இசைக்கச்சேரி முடிந்தபோது அனைவரும் எழுந்து நின்று அரங்கம் அதிர கைதட்டு வழங்கினர் அந்த வயதில்தான் தியோப்லஸ் என்ற தன் பெயரை அமதியுஸ் என்று மாற்றிக்கொண்டார் மோட்ஸார்ட். அமதியுஸ் என்ற பெயர் அழகாக இருப்பதாக அவர் நினைத்ததே அதற்கு காரணம். அன்றிலிருந்து அவர் வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட் என்று அழைக்கப்பட்டார்.

மோட்ஸார்ட்டின் இசைத்திறமையை மெச்சிய சால்ஸ்பர்க் இளவரசன் தன் அரண்மனையில் இசைத் தலைவனாக இருக்குமாறு மோட்ஸார்ட்டுக்கு அழைப்பு விடுத்தார். அதில் அவருக்கு ஆர்வம் இல்லையென்றாலும் தனது தந்தையின் விருப்பத்திற்காக அந்த பொறுப்பை ஏற்று ஒன்பது ஆண்டுகள் அரண்மனையில் இருந்தார். ஆனால் இளவரசன் மோட்ஸார்ட்டை ஒரு வேலையாள் போல் நடத்தியதால் தனது 25 ஆவது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறினார். 26 ஆவது வயதில் மோட்ஸார்ட் கான்ஸ்டண்ட் என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துகொண்டார். இசை உலகில் கொடிகட்டி பறந்த அவரது குடும்ப வாழ்க்கையில் சோகத்திற்கு மேல் சோகம். மோட்ஸார்ட் தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் நான்கு குழந்தைகள் பிறந்து சில மணி நேரத்தில் இறந்தனர். இசையால் எவரையும் மசிய வைத்த அந்த மேதையை அந்த மரணங்கள் வெகுவாக பாதித்தன. அவரது கடைசிக் காலத்தில் கடன் தொல்லையால் அவதியுற்றார் என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

இசையை கையாண்ட அளவுக்கு மோட்ஸார்ட்டுக்கு நிதியை திறமையாக கையாளத் தெரியவில்லை. இசையில் ஓயாத ஆராய்ட்சி, ஓய்வில்லாத இசை நிகழ்ச்சிகள், புதிய இசைக்கூறுகளை உருவாக்குதல் என்று ஒவ்வொரு மணித்துளியையும் இசைக்காகவே செலவிட்டார் மோட்ஸார்ட் அதனால் அவரது உடல்நிலைகூட பாதிக்கப்பட்டது. நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தபோதுகூட அவரது படுக்கையில் ஏதாவது ஒரு இசைக்கருவி இருந்துகொண்டே இருக்கும். கண்மூடியபடி அவர் அந்தக் கருவிகளை மீட்டிக்கொண்டிருப்பார். தன் மரணப்படுக்கையில்கூட அவர் ‘ரெக்யும் மாஸ்’ என்ற இசைக்கூறை எப்படி நிறைவு செய்ய வேண்டும் என்று தனது மாணவர்களுக்கு கூறிக்கொண்டிருந்தாராம். இயற்கையையே தனது இசையால் மசிய வைத்த அந்த இசை மேதையின் வாழ்நாளை பொருத்தமட்டில் இயற்கை பாரபட்சமாகவே நடந்துகொண்டிருக்கிறது.

36 வயது நிறைவதற்கு இரண்டு மாதங்கள் இருந்தபோது 1791 ஆம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி அவரது மூச்சு நின்றது. அப்போது இசை உலகம் ஒரு கணம் ஸ்தம்பித்துபோனது. மோட்ஸார்ட்டின் நல்லுடல் ஆராவாரமின்றி கிராமத்து இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இசைக்கு முகவரி தந்த அந்த மேதைக்கு இடுகாட்டில்கூட முகவரி இல்லை. ஏனெனில் அந்தக்கால வழக்கத்தின்படி கல்லறையில் பெயர் பொறிக்காமலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். தான் வாழ்ந்த 36 ஆண்டுகளில் இசையின் எல்லாப் பிரிவுகளிலும் அழியா முத்திரைப்பதித்தார் மோட்ஸார்ட். The Marriage of Figaro, Don Giovanni, The Magic Flute ஆகிய மூன்று ஆப்ரா கச்சேரிகள் உலக இசை வரலாற்றில் ஆகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. அவரது இசைத் திறமையை மெச்சி அப்போது போப்பாக இருந்த கிளமென்ஸ் மோட்ஸார்ட்டுக்கு “நைட் ஆப் த கோல்டன்ஸ்பர்” என்ற தேவாலயத்தின் செவ்வாலியே விருதை வழங்கி கவுரவித்தார்.



மோட்ஸார்ட் ஒரு பிறவி மேதைதானே அவருக்கு வானம் வசப்பட்டுதானே ஆக வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அவ்வளவு ஞானம் இருந்தும் மோட்ஸார்ட் இசையையே எல்லாவற்றுக்கும் மேலாக நேசித்தார். ஊண் உறக்கம் மறந்து அந்த இசையையே சுவாசித்தார். அப்படிப்பட்ட ஒரு முழுமையான ஈடுபாடுதான் அவரை இசை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. பிறவி மேதை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். நமக்கும் எதிலும் பிறவித்திறன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் துறை, வேலை, வாழ்க்கை இப்படி எல்லாவற்றிலும் முழு ஈடுபாடு காட்டி முன்னேற்றம் நாடினால் நமக்கும் அந்த வானம் வசப்பட்டே ஆகவேண்டும்.

MysteRy:
தொலைபேசி உருவான கதை (அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்) - வரலாற்று நாயகர்

நமது வாழ்க்கையில் ஒரு பொருள் எவ்வளவு அத்தியாவசியம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த பொருள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால் போதும். உதாரணத்திற்கு தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Empty Re: சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

Post by *சம்ஸ் Sat 25 May 2013 - 12:05

1847 ஆம் ஆண்டு மார்ச் 3ந்தேதி ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் நகரில் பிறந்தார் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். சிறுவயதிலிருந்தே கிரஹாம் பெல் கல்வியில் அதிக ஆர்வம் காட்டினார். கல்வியை முடித்தபிறகு அவர் காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் கற்பிப்பதில் அதிக கவணம் செலுத்தினார். 1870ல் கனடாவுக்குச் சென்ற பெல் அங்கும் காது கேளாதோருக்கும், பேச முடியாதோருக்கும் கற்பித்தார். பின்னர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த பெல் அங்கு காது கேளாதோருக்காக சிறப்புப்பள்ளி ஒன்றை நிறுவினார். 1873ல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் பெல்லுக்கு பேராசிரியர் தகுதி கிடைத்தது. அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார். காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.



ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார். தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார். பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர். அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன. 1876 ஆம் ஆண்டு மார்ச் 10ந்தேதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார். திடிரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது. வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார். பெல்லின் கனவு நனவானது.



அதே ஆண்டு பெலஃடால்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பை காட்சிக்கு வைத்திருந்தார் பெல். பெரும்பாலோனோர் அதனை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரேசிலின் மன்னர் டான்.பெண்ட்ரோ கருவியை காதில் வைத்து சோதித்தார். மறுமுனையில் பெல் “To be or not To be" என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளை வாசித்தார். அதனை தெளிவாக கேட்டு அதிசயித்த மன்னர் "My God its Beats" என்று நம்ப முடியாமல் கூறினார். அதன்பிறகு அந்த கண்காட்சியில் பெல்லின் கண்டுபிடிப்பு பலரின் கவணத்தை ஈர்த்தது. அதே காலகட்டத்தில் வேறு சிலரும் தாங்கள்தான் தொலைபேசியை கண்டுபிடித்ததாக கூறிக்கொண்டனர். அதனால் பெல் பலமுறை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஒவ்வொரு வழக்கிலும் பெல்லுக்கே வெற்றி கிடைத்தது. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்தான் தொலைபேசியைக் கண்டுபிடித்தார் என்பது உறுதிபடுத்தப்பட்டது.



அதன்பின்னர் பெல் வேறு சில கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தினார். ஆனால் தொலைபேசிதான் அவரது பெயர் சொல்லும் கண்டுபிடிப்பாக இருந்தது. 1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ந்தேதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார். அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை மிகச் சிறந்த மனிதராக வருணிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். உதவி தேவைப்பட்டோருக்கு எப்போதுமே மறுக்காமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். காது கேளாதோர் மற்றும் பேச முடியாதோர் நலனில் அவர் அதிக அக்கறைக் காட்டினார். இன்னும் ஒரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் பெல் நேபல் ஹபர்ட் என்ற காது கேளாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார். தொலைபேசியின் தந்தை கிரஹாம் பெல் இறந்தபோது வட அமெரிக்கா முழுவதும் அவருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தினர். பெல்லின் இறுதிச் சடங்கின்போது வட அமெரிக்காவில் இருந்த அனைத்து தொலைபேசிகளையும் சில நிமிடங்களுக்கு பயன்படுத்தாமல் தங்கள் மரியாதையைச் செலுத்தினர் அமெரிக்கர்கள்.





உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Empty Re: சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

Post by *சம்ஸ் Sat 25 May 2013 - 12:05

தொலைபேசியை நமக்கு தந்ததன் மூலம் உலகை ஒரு குக்கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லையேச் சேரும். உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் தொலைபேசிக்கும் நிச்சயம் இடம் உண்டு. உடல் குறை உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பெல்லின் உயரிய எண்ணமே அந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்த அவருக்கு உதவியது. உயரிய எண்ணங்கள் நம்மை உயர்த்தும் என்பதும் அந்த உயர்வால் நாம் விரும்பும் வானமும் வசப்படும் என்பதுதான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் நம் காதுகளில் சொல்லும் செய்தியாக இருக்கும்.

MysteRy:
சாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) - வரலாற்று நாயகர்

மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் கி.மு.469 ஆம் ஆண்டு பிறந்தார் சாக்ரடீஸ். ஏழ்மையில்தான் பிறந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார்.

சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது அற்புதமானது. அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனங்களில் விதைப்பார்.



சாக்ரடீஸ் வாழ்ந்த காலகட்டம் கிறிஸ்துவம், இஸ்லாம், பெளத்தம், சமணம், சீக்கியம், போன்ற மதங்கள் தோன்றாத காலம். அபோது ஏதென்ஸ் மக்கள் நிலவையும், சூரியனையும், இதிகாச நாயகர்களையும் கடவுளாக வழிபட்டு வந்தனர். அதனை எதிர்த்து துணிந்து கேள்வி கேட்டார் சாக்ரடீஸ். துணிந்து கேள்வி கேட்டவர்களை எள்ளி நகையாடுவதும், அவர்கள் பணிந்து போக வேண்டும் என்று துன்புறுத்தி வற்புறுத்துவதும்தான் வரலாறு முழுவதும் காணப்படும் உண்மை. கேள்வி கேட்க கேட்க சாக்ரடீஸின் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது. சாக்ரடீஸின் அறிவுப்பூர்வ பேச்சால் புரட்சி வெடிக்கலாம் என அஞ்சினர் ஆட்சியாளர்கள். சமுதாயத்தை சீர்திருத்த நினைத்தவர் மீது கிரேக்க இளையர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புகிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மறுத்தாலும் தனது 70 ஆவது வயதில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார் சாக்ரடீஸ்.

என்னை நீதிமன்றத்தின்முன் நிறுத்திய என் எதிரிகளை நான் குறுக்குவிசாரணை செய்யவிரும்பவில்லை. என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான். நான் கல்லையும், மண்ணையும் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் கல்லுக்கும் மண்ணுக்குமல்ல ஒரு பெண்ணுக்குதான் பிறந்தேன். கடவுளைப்பற்றி ஆராய்ட்சி செய்வது நாத்திகம் என்றால் கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம். நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தைத் தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை நான் எனது அறிவீனத்தை உணர்ந்தேன் அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குதான் அஞ்சுகிறேன் எனக்கும் உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன். இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸுக்கு மரணமா, மன்னிப்பா என்று முடிவு செய்ய 501 நபர்கள் கொண்ட நீதிக்குழு வாக்களித்தனர் அதில் 220 பேர் மன்னிப்புக்கும் மீதி 281 பேர்கள் மரணத்திற்கும் வாக்களித்தனர். மரண தண்டனை உறுதியானது. ஆனால் அப்போதுகூட கலங்கவில்லை சாக்ரடீஸ் ஏனெனில் மரணத்தைப்பற்றி அவரே ஒருமுறை இவ்வாறு கூறியிருந்தார் “மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை” . சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ஏதென்ஸில் விழாக்காலமாக இருந்ததால் அவரது மரணம் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்டது. கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சாக்ரடீஸை எப்படியாவது விடுவித்துவிட வேண்டுமென்று என்று துணிந்த சாக்ரடீஸ் நண்பரும், மாணவருமான கிரீட்டோ சிறைக்குள் புகுந்தார் தப்பி ஓடிவிடலாம் என சாக்ரடீஸை கெஞ்சினார். அதற்கு சாக்ரடீஸ் “என்னருமை கிரீட்டோ நான் நீதியை நேசித்தவன் நேர்மையானவன் என்ற நற்பெயரோடு இறந்துவிடுகிறேன் எவரும் கவலைப்பட வேண்டாம் என் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற குழப்பமும் வேண்டாம் இறந்தபிறகு உடலில் நான் ஏது அது வெறும் உணர்வற்ற சடலம்தான் அதை எப்படி செய்தால் என்ன” கி.மு.399 ஆம் ஆண்டு சாக்ரடீஸின் மரணம் குறிக்கப்பட்ட நாள் வந்தபோது ஒரு விஷக்கோப்பையை சாக்ரடீஸுக்கு கொடுத்த சிறை அதிகாரி அறிவுத் தெளிவுடன் இருக்கும் தங்களுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை வருத்துகிறது என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதார். புன்னகையுடன் விஷக்கோப்பையைப் பெற்று மறுமொழி சொல்லாமல் விஷத்தை அருந்தி உயிர் துறந்தார் சாக்ரடீஸ்.



வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்ட சாக்ரடீஸ் தனது மரணத்தைப்பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. சாக்ரடீஸின் இறுதி ஊர்வலத்தில் பேசிய அவரது மாணவரும் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவ மேதையுமான பிளேட்டோ இவ்வாறு கூறினார் ஏதென்ஸ் நகர நண்பர்களே ஒரு நல்லவரை மாபெரும் அறிஞரை வீண்பழி சுமத்தி கொன்றுவிட்ட குறை மதிப்படைந்த நாடு என்ற தீராத பழிச்சொல்லை ஏதென்ஸ் சுமக்கப் போகிறது. சாக்ரடீஸின் உயிர் பிரிந்த சில நாட்களிலிலேயே தனது தவறை உணர்ந்தது ஏதென்ஸ். சாக்ரடீஸின்மீது பழி சுமத்தியவர்களில் சிலர் பிறகு குற்ற உணர்வால் தூக்கிலிட்டு கொன்றதாக வரலாறு கூறுகிறது.

“உன்னையே நீ அறிவாய்” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள் என்ற சிந்தனைதான் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு விட்டுச்சென்ற மாபெரும் சொத்து. “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து காட்டியவர் சாக்ரடீஸ். ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் அந்த பாடல்வரி இடம்பெற்றிருந்தது. சளைக்காமல் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டதால் சாக்ரடீஸை ஆயிரத்தில் அல்ல ஆயிரம் கோடியில் ஒருவராக இன்று மதிக்கிறது உலகம்.

நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். நமது வாழ்க்கையை முடக்கும் சில மூட நம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸைப்போல நமக்கும் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்துவிட்டால் அந்த வானம் என்ன உலகமே வசப்படும்.

MysteRy:
சர் ரோஜர் பேனிஸ்டர் ( ' The Miracle Mile Man') - (வரலாற்று நாயகர்)

வாழ்க்கையில் வெற்றிபெற பல வழிகள் உண்டு. இதுவரை எட்டப்படாத ஓர் இலக்கை தீர்மானித்து மற்றவர்கள் அந்த இலக்கை அடையுமுன் நாம் அந்த இலக்கை அடைவது அந்த வழிகளில் ஒன்று. எதையுமே முதலில் சாதிப்பவர்களுக்குதான் வரலாறும் முதல் மரியாதை தருகிறது. புதிய இலக்குகளை அடைவது என்பது விளையாட்டு உலகத்திற்கும் பொருந்தும் ஒன்று. ஒரு மைல் தொலைவை ஓடிக்கடக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு மைல் ஓட்டத்திற்கு '4 மினிட் ஃபேரியர்' என்ற ஒரு இலக்கு இருந்தது. நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடிக்கடப்பது என்பது பகல் கனவாக இருந்த காலம் அது. தனது திறமையின்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தவர்கள்கூட அதனை அடைய முடியாத ஓர் இலக்காக கருதினர்.

1954ல் ஒருவர் ஓடினார் '4 மினிட் ஃபேரியர்' என்ற சொற்றொடர் காற்றோடு கரைந்தது. அவர் பெயர் ரோஜர் பேனிஸ்டர். 1929 ஆம் ஆண்டு மார்ச் 23ந்தேதி இங்கிலாந்தின் ஹெரோ என்ற நகரில் பிறந்தார் பேனிஸ்டர். அவர் ஆரம்ப பள்ளியில் படிக்கும்போதே திடல் திட போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டினார். அவரது பெற்றோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பல்கலைக்கழக படிப்புக்கு பெற்றோரால் உதவ முடியாது என்பது பேனிஸ்டருக்கு புரிந்தது. எனவே எப்படியாவது உபகாரச்சம்பளம் பெற்று மிகச்சிறந்த பல்கலைகழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை சிறு வயதிலிருந்தே வளர்த்து வந்தார்.



இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது பேனிஸ்டரின் குடும்பம் இங்கிலாந்தின் வரலாற்றுப் புகழ்மிக்க பாத் என்ற நகருக்கு குடி பெயர்ந்தது. அங்கு சென்ற பிறகு தினசரி பள்ளிக்கு ஓடிச்செல்வார் பேனிஸ்டர். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடியே வருவார். படிப்பிலும் அவர் அதிக கவணம் செலுத்தியதால் ஆரம்பத்தில் சக மாணவர்களின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் ஓட்டப்பந்தயத்தில் அவருக்கு இருந்த திறமையைக்கண்டு அனைவருக்கும் அவர் மேல் நன்மதிப்பு ஏற்பட்டது. அவரது கடும் உழைப்பு அவர் கனவு கண்டதைப்போலவே உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க உபகாரச்சம்பளத்தை பெற்றுத்தந்தது. பல்கலைகழகத்திலும் அவர் திடல்திட போட்டிகளில் ஈடுபட்டார். 1500 மீட்டர் மற்றும் ஒரு மைல் ஓட்டத்தில் அவர் காட்டிய வேகம் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர்களின் கவணத்தை அவர் பக்கம் ஈர்த்தது. ஒரு தேசமே பேனிஸ்டரை நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்தது.

ஆனால் கல்விக்கே முதலிடம் தந்த பேனிஸ்டர் 1948 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்தை பிரதிநிதிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதற்கான காரணத்தை கேட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள் பேனிஸ்டர் தனது மருத்துவ படிப்பில் முழு கவணம் செலுத்த விரும்பியது முதல் காரணம், இரண்டாவது காரணம் தன் தேசத்தை பிரதிநிதிக்கும் அளவுக்கு தனக்கு இன்னும் தகுதி இல்லை என்று அவர் நினைத்தது. வாழ்க்கையில் நாம் இதுபோன்ற எத்தனை விளையாட்டு வீரர்களை சந்திக்க முடியும்! அவர் அப்படி சொன்னாலும் ஆனால் அடுத்த மூன்றே ஆண்டுகளில் அதாவது 1951ல் ஒரு மைல் ஓட்டத்தில் இங்கிலாந்தின் ஆகச்சிறந்த வீரராக உருப்பெற்றார் பேனிஸ்டர். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தான் தயார் என்று உணர்ந்தார்.

ஆனால் 1952 ஆம் ஆண்டில் ஹல்சிங்கி ஒலிம்பிக் போட்டிகளில் கடைசி நிமிட நேர மாற்றங்களால் போட்டிகளுக்கு இடையில் போதிய ஓய்வு இல்லாமல் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவரால் 1500 மீட்டர் ஓட்டத்தில் நான்காவதாகத்தான் வர முடிந்தது. பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் அவரை எள்ளி நகையாடின. பாரம்பரிய பயிற்சி முறைகளை பேனிஸ்டர் ஒதுக்கியதால்தான் பேனிஸ்டர் தோற்றார் என்று காரணம் கற்பித்தன. ஆனால் மனம் தளராத பேனிஸ்டர் ஒரு மைல் தொலைவு ஓட்டத்தில் உலக சாதனை நிகழ்த்தி பத்திரிக்கையாளர்களின் வாயை அடைக்க விடா முயற்சியோடு செயல்பட்டார். மருத்துவ படிப்பு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் அவரால் ஒரு நாளைக்கு 45 நிமிடத்தைதான் பயிற்சிக்கு ஒதுக்க முடிந்தது. ஆனாலும் தனது விடா முயற்சியில் நம்பிக்கை வைத்து படிப்பையும் பயிற்சியையும் தொடர்ந்தார்.



ஆண்டு 1954 மே திங்கள் 6 ந்தேதி வயது 25 ஆக்ஸ்பர்டில் நடைபெற்ற ஒரு போட்டியில் பிரிட்டிஷ் திடல்திட கழகத்தை பிரதிநிதித்து ஒரு மைல் பிரிவில் ஓடினார் பேனிஸ்டர். உலகச்சாதனையை நோக்கி விரைந்த அவரது கால்கள் 3 நிமிடம் 59.4 வினாடியில் கடிகாரத்தை உறைய வைத்தன. பேனிஸ்டருக்கு மூச்சு முட்டியது, விளையாட்டு உலகம் ஒரு கணம் மூக்கின்மேல் விரலை வைத்து மூச்சுவிட மறந்தது. 25 வயதில் வரலாற்றில் தடம் பதித்தார் பேனிஸ்டர். நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவு ஓடுவது மனித உடலுக்கு அப்பாற்பட்டது என்பதுதான் அப்போதைய விளையாட்டு வீரர்களின் பயிற்றுவிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அது சாதிக்கக்கூடிய ஒன்று என்று நம்பினார் பேனிஸ்டர். தனது மருத்துவ படிப்பின் மூலம் உடல்கூறுகளை கூர்ந்துகற்ற அவர் ஓடுவதைப்பற்றி நிறைய ஆராய்ட்சிகள் செய்ததோடு மட்டுமல்லாமல் அறிவியல் அடிப்படையிலான புதிய பயிற்சி முறைகளை வகுத்துக்கொண்டார்.



நம்பிக்கையோடு அந்த முறைகளை கையாண்டு வெற்றியும் பெற்றார். பேனிஸ்டர் சாதித்த அடுத்த மாதமே ஆஸ்திரேலியாவின் ஜான் லேண்ட் பி என்ற வீரரும் நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடி முடித்தார். அப்போதுதான் தடை உடலுக்கு அல்ல உள்ளத்துக்குதான் என்பதை உலகம் உணர்ந்தது. மிகப்பெரும் சாதனையை செய்த அதே ஆண்டு திடல்திட போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று தனது மருத்துவ கல்வியை தொடர்ந்தார் பேனிஸ்டர். பின்னர் சிறப்பாக தேர்ச்சி பெற்று நரம்பியல் மருத்துவரானார். எப்படி ஒரு மைல் சாதனையை நிகழ்த்துனீர்கள் என்று ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டபோது “உங்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் திறமைதான்" காரணம் என்று கூறினார் பேனிஸ்டர்.

ஒருமுறை அவரை எள்ளி நகையாடிய பத்திரிக்கைகள் “The man who ran the miracle mile" அதாவது அதிசய மைல் மனிதன் என்று இப்போது பாராட்டின. 1975 ஆம் ஆண்டு பேனிஸ்டருக்கு “சர்” பட்டம் வழங்கி கவுரவித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ வீரர்கள் ஒரு மைல் தொலைவை நான்கு நிமிடத்திற்குள் ஓடி முடித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே பேனிஸ்டரால் எட்டபட்ட இலக்கைதான் எட்டியிருக்கின்றனர். நான்கு நிமிட இலக்கை முதன்முதலாக முறியடித்ததால்தான் 50 ஆண்டுகள் கடந்தும் பேனிஸ்டரின் பெயரை பெருமையுடன் சுமந்து நிற்கிறது வரலாறு. ஒருவேளை இன்னொரு வீரர் மூன்று நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடி முடித்தால் பேனிஸ்டரின் பெயர் மறக்கப்படலாம், ஆனால் முடியாது என்று கருதப்பட்டதை முடியும் என்று செய்து காட்டியதாலேயே மூன்று நிமிட இலக்கையும் ஏன் முறியடிக்க முடியாது!! என்ற சிந்தனையை பல வீரர்களின் உள்ளங்களில் உருவாக்கியிருக்கிறார் பேனிஸ்டர். இது ஒன்றே பேனிஸ்டரின் வெற்றியாகும்.



உங்கள் வாழ்வில் நீங்கள் வகுத்துக்கொள்ளும் இலக்கு எது? மற்றவர்களின் இலக்குப்போலவே சாதாரணமாக இருந்தால் வாழ்க்கையும் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் பேனிஸ்டரைப்போல் உங்கள் இலக்கும் உயர்வாக இருந்து விடா முயற்சியோடு வியர்வை சிந்தி உழைத்தால் வாழ்க்கையும் உயரும் அதனால் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Empty Re: சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

Post by பானுஷபானா Sat 25 May 2013 - 12:15

ரொம்ப பெருசா இருக்கு அப்புறமா படிக்கிறேன் :]
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Empty Re: சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

Post by rammalar Sat 25 May 2013 - 14:48

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் 800522
-

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை
வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும்,

வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும்
சிரிப்புதான்"
-
>சார்லி சாப்ளின்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Empty Re: சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

Post by Muthumohamed Sat 25 May 2013 - 16:40

நல்ல தகவல் பகிர்வு நன்றி சம்ஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Empty Re: சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

Post by ahmad78 Sun 26 May 2013 - 9:49

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை
வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும்,

வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும்
சிரிப்புதான்"
-
>சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் 800522சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் 2027189708


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் Empty Re: சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum