சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Khan11

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

3 posters

Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 16:54

சென்ரியூ - இலக்கணம்


(சுருக்கமாகச்  சொல்வதென்றால்  கவித்துவம்  அதிகமாக  இருந்தால் ‘ஹைக்கூ’.  கவித்துவம்  குறைந்து  நகைச்சுவை  உணர்வு  மேலோங்கி  இருந்தால்  அது  ‘சென்ரியூ’. )

சென்ரியூவும்   ஜப்பானிய  மொழிக்கவிதை.  3  அடிகள்  கொண்டது.   ஜென்  தத்துவம்,  இயற்கை  மற்றும்  மெய்யியலோடும்  சிறிது  தொடர்பு  கொண்டு   நகைச்சுவை  உணர்வை  நோக்கமாகக்  கொண்டு  எழுதப்படுவது  சென்ரியூ  ஆகும்.  சென்ரியூ சமூகம்,  அரசியல்  ஆகியவை  குறித்து  நகைச்சுவை  உணர்வோடும்  அங்கத  உணர்வோடும்  வெளிப்படுத்தும்.  

‘சென்ரியூ’  என்னும்  புனைப்பெயரைக்  கொண்ட  ‘கராய்ஹச்சிமோன்’  என்னும்  ஜப்பானியக்  கவிஞர்  கி.பி.  18ஆம்  நூற்றாண்டில்  இவ்விலக்கியத்தை  அளித்தார்.  பின்னர்  அக்கவிஞரின்  புனைப்  பெயரே  அக்கவிதை  வகைகளுக்கான  பெயரும்  ஆயிற்று.  தமிழில்  இவ்வகையை  நகைப்பா  என்கிறார்கள்.  

தமிழ்நாட்டு  ‘சென்ரியூ’  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுகிறது.  அவ்வாறு  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுவதை  தமிழ்  அறிஞர்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு    ‘சென்ரியூ’  வடிவமாகவும்  அங்கீகரித்துள்ளார்கள்.  இது  இந்திய  சமூகம்,  அரசியல்  ஆகியவை  குறித்த  போக்கை  நகைச்சுவை  உணர்வோடும்  அங்கத  உணர்வோடும்  வெளிப்படுத்த  ஏற்ற  மிகச்  சிறந்த  வடிவம்  ஆகும்.  எனவே  இந்தியாவின்  சூழலுக்கு  தமிழில்  ‘ஹைக்கூ’வை  விட   ‘சென்ரியூ’  சிறந்த  வடிவம்  /உள்ளடக்கம்  ஆகும்.

தேனீர்க்  கடைகளிலும்,  மதுபானக்  கடைகளிலும்  ஒருவரோடு   ஒருவர்  போட்டி  போட்டுக்கொண்டு  இவ்வகைக்  கவிதைகளைச்  சொல்லும்  மரபு  ஜப்பானில்  இயல்பாக  இருக்கிறது.  சென்ரியூ கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் அந்த வடிவத்துக்கு உட்பட்டு எழுதலாம். (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைப்புலம் வேண்டும்) நீங்கள்  கூட  ஒரு  நாளைக்கு  ஒரு  செய்தித்தாள் மட்டுமே கூட வாசித்தால்  ஏறக்குறைய  100  சென்ரியூ  கவிதைகள்  எழுதிவிட  முடியும். தேனீர்க்  கடைகளிலும்,  மதுபானக்  கடைகளிலும்  எளிய  மனிதர்கள்  இலக்கிய  நயங்களை,  இயற்கையை,  கவித்துவத்தை,  கவிதைப்  பற்றிய  உட்சிந்தனையை  விரும்பாதவர்கள்  ஒருவரோடு   ஒருவர்  களிப்பூட்டிக்  கொள்ளும்  முறையில்  பேசிக்கொள்ளும்  போது,  அங்கதக்  கவிதைகளில்  அர்த்தச்  செறிவும்  கவித்துவமும்  ஹைக்கூவாகவும்  பேசிக்  கொண்டிருக்க  மாட்டார்கள்  என்பது  நாம்  அறிந்ததே.

இயற்கை, மெய்யியல்  மற்றும்  கவித்துவம், குறியீடு,  படிமம்,  தொன்மம்  ஆகியவற்றையும்  அவற்றின்  வகைகளையும்  கருத்துச்  செறிவையும் கொண்டதாக  இருக்கும் ஹைக்கூவைத் தவிர பிற  அனைத்தும் சென்ரியூ வகையைச்  சேர்ந்ததாகும்.  நம்பிக்கையிழந்ததால்,  பிற  சூழ்நிலைகளை  இழித்துப்  பேசும்  தன்மையும்  இவற்றில்  உண்டு.  பல  சென்ரியூக்கள்  கருத்தில்  நேர்த்தியில்லாத,  சிறிதும்  கலையழகும்  வேலைப்பாடுமற்ற  வெளிப்படையான  விமர்சனங்கள்  ஆகும்.  

மூட  நம்பிக்கைகள்,  காதல்  மற்றும்  அதோடு  தொடர்புடைய  பலவும்,  கொலை,  கொள்ளை,  கற்பழிப்பு, பிச்சை, வறுமை, சாதி,  மதம்,  வரதட்சணை,  பெண்ணியத்தின்  சாடல்  போன்ற  சமுதாயச்  சீர்கேடுகளும்,  நீதியின்  முரண்பாடுகள்,  நோய்கள்,   அன்றாடச்  செய்திகள்,  அரசியல்  சார்ந்த  விமர்சனங்கள்  மற்றும்  புகழ்பாடுதல்,  உரைநடை  போன்ற  அமைப்பில்  நேரடியாகக்  கருத்தை  சொல்லுதல்  மற்றும்  அறிவுறுத்தல்கள்,    இவை  போன்ற  பிற  (புதுக்  கவிதையில்  கருப்பொருளாகப் பயன்படுத்தும் மேலும் பல) அனைத்தும் சென்ரியூ வகையைச்  சார்ந்தவையாகும்.  தமிழ்  ஹைக்கூக்  கவிஞர்  பெரும்பான்மையும்  இவ்வகைக்  கவிதைகளையே  அதிகம்  படைத்துவிட்டு  ஹைக்கூ  என்று  தலைப்பிட்டுக்  கொள்கிறார்கள்.  தற்போது உங்களால் எது ஹைக்கூ? எது சென்ரியூ? என்று   பிரித்து  அடையாளம்  காண  முடியும்  என  நினைக்கிறேன்.

தமிழ்  ஹைக்கூ,  ஜப்பானியப்  பாரம்பரியத்தைப்  பின்பற்றுவதாய்த்  தெரியவில்லை.  இதற்குப்  படைப்பாளர்  சிலரின்  அறியாமையும்,  ஒரு  காரணமாயிருக்கலாம்,  சிலர்  அதனைப்  பொருட்படுத்தாமையும்  காரணமாயிருக்கலாம் என்கிறார்  டாக்டர்  பட்டத்துக்காகத்  தமிழ்  ஹைக்கூக்களைப்  பல்கலைக்கழகத்துக்காக  ஆய்வு  செய்த  நிர்மலா  சுரேஷ்  அவர்கள்.

தமிழில்  முதன்முதலாக  ஈரோடு  தமிழன்பன்  ‘சென்ரியூ’  படைத்துள்ளார்.  தமிழில்  சிலரே  ‘சென்ரியூ’  எழுதி  வருகிறார்கள்.  தமிழில்  ‘ஹைக்கூ’  பற்றிய  சரியான  புரிதல்  இல்லாமல்  எழுதப்படும்  ‘ஹைக்கூ’  எல்லாம்  ‘சென்ரியூ’ கவிதையாகவே  காணப்படுகின்றன.  

குருக்களாகிவிட்ட  கடவுள்
மறுபடியும்  கடவுளாகவில்லை
தட்டு  நிறையக்  காணிக்கை - ஈரோடு  தமிழன்பன்  -  சென்ரியூ

யார்  சொல்லிக்  கொடுத்தவன்?
அடி  பிள்ளைக்கு
வலி  வாத்தியாருக்கு  - ஈரோடு  தமிழன்பன்  -  சென்ரியூ
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 17:19

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ புத்தகத்திற்கு நான் எழுதிய கருத்துரையையும் பின்னர் மேற்கண்ட கவிதைத் தொகுதிக்கு ந.க.துறைவன் அவர்கள் வழங்கிய ஆய்வுரையையும் இணைக்கிறேன். 

சென்ரியூ எழுத நினைப்பவர்கள் கொஞ்சம் அவசரம் காட்டாமல் குறிப்புகளைப் படித்துக்கொண்டு கவிதைகள் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் எழுதும் கவிதைகளுக்குத் திருத்தம் தேவைப்படின் நிச்சயம் செய்து தருகிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 17:20

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ (சென்ரியூ) நூலின் என்னுரை
 
இவை  ஹைக்கூ அல்ல! சென்ரியூ!!
ஆம்! இப்படிச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமோ, அல்லது என்னுடைய இந்தச் சென்ரியூ தொகுப்பு இலக்கியவாதிகளிடமிருந்து புறக்கணிக்கப் பட்டுவிடு மென்ற பயமோ இல்லை; ஆம் இவை சென்ரியூதான். ஏனெனில், இதுவரை வெளிவந்துள்ள சில சென்ரியூ தொகுப்பில் நேரடியாக இது சென்ரியூ கவிதைகள் என்று சுட்ட கவிஞர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். தமிழன்பனின் ஒரு வண்டி சென்ரியு, கவினின் ஒரு டீ சொல்லுங்கள் என்ற இரண்டு தொகுப்பும் நேரடியாக சென்ரியூவென வெளிப்டையாகச் சொல்லுகின்றன. சில தொகுப்புகள் ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ என்று மூன்றையும் சேர்த்து கவிதைகளைப் பிரித்து தராமல்  வாசகர்களைக் குழப்பியுள்ளன.
நான் பல கவிஞர்களுடன் உரையாடியதிலிருந்து, சென்ரியூ என்று தலைப்பிட்டால் அந்தத் தொகுப்பு புறக்கணிக்கப்பட்டு விடும் என்று அச்சம் கொள்வதாக அறியமுடிகிறது. எங்கே புதுக்கவிதை விமர்சனத்திற்கு உள்ளானதுபோல சென்ரியூ என்று பெயரிட்டால்  தம் கவிதைகளும் அந்தச் சிக்கலை சந்திக்குமே என்ற அச்சம் அவர்களிடம் மேலோங்கியுள்ளது. இனி இவ் வகை அச்சம் தவிர்க்க வேண்டும். காரணம்,
ஹைக்கூ தொகுப்புகளிலிருந்து சென்ரியூக்களைப் பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. வருங்காலத்தில் சென்ரியூத் தொகுப்புகளைக் கவிஞர் தனியே வெளி யிடுதல் நன்று என்றும், தமிழ்க் கவிஞர்கள், ஹைக்கூ வில் சென்ரியூப் பண்பினைக் கலத்தலைக் கைவிட்டு, நடப்பியல் கூறும் சென்ரியூத் தொகுப்புகளைத் தனியே வெளியிடுதல், இலக்கிய வளர்ச்சியை முறைப் படுத்தும் (நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல், ப.290) என்று முன்வைத்திருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
 
இந்தியாவின் சூழலுக்குத் தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியூ’ பாடுபொருள் நிறைந்த உள்ளடக்கம் ஆகும்.  ஜப்பானிய மொழியில் இன்னும் - இன்றும் ஹைக்கூ, ஹைக்கூவாகவே இருக்கிறது. ஹைக்கூ எழுத முடியாதவர்கள் சென்ரியூ வகையைக் கவிதை களாக்குகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஹைக்கூக் கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ள வேண்டும்; அல்லது தொடர்ந்து ஹைக்கூவிற்குள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும்; நூற்றுக்கணக்கான ஹைக்கூ படைத்து வருவதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற போலியான தன்முனைப்பாலும் சென்ரியூ வகைக் கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு; சென்ரியூவின் உள்ளடக்கம் வேறு என்று அவர்களுக்குத் தெரிந்திருந் தும் ஹைக்கூ நிறைய எழுத முடியாதக் காரணத்தால் சென்ரியூ வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். புதிதாக ஹைக்கூ எழுத நினைக்கும் இளையவர்களுக்கும் அவர்கள் தவறான வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இதன் காரணமாகச் சென்ரியூ என்ற ஒரு வடிவம் இருப்பதை அவர்களால் வெளிக் காட்டாமல் இருட்டடிப்பும் செய்யப்படுகிறது. அவ்வகை சென்ரியூஹைக்கூ சிறப்பிதழ்கள் மற்றும் வணிக இதழ்களில் இடம் பெறுகின்றன. இந்த நிலை இன்னும் ஓராண்டு வரை நீடித்தால் கூடச் சென்ரியூ கவிதைதான் தமிழின் ஹைக்கூக்கள் என்று வாசகர் மனத்தில் பதிந்து போய்விடும்.  தமிழில், ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் ‘சென்ரியூ’வாகவே காணப்படுகின்றன. ஜப்பானிய உள்ளடக்கத்தைப் போல் தமிழில் ஹைக்கூ எழுதிய கவிஞர்கள் ஒன்றிரண்டு தொகுதிகளோடு நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்; அவர்களைப் பாராட்டியாக வேண்டும்.
 
தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதை களின் எண்ணிக்கையை கணக்கிட்டுத்தான் ‘ஹைக்கூ கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது விருதும் பட்டமும் கொடுக்கப்படுகிறது. இது தவறு. பத்து ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்று கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவ லாக்கப்பட வேண்டும். 
 
தேநீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகை கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருக்கிறது என்பார் ஞானி. சென்ரியூக் கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டு மானாலும் அந்த வடிவத்துக்கும் பண்புக்கும் உட்பட்டு எழுதலாம் (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைபுலம் வேண்டும்). நீங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு செய்தித்தாள் மட்டுமே வாசித்தால் கூட ஏறக் குறைய 100 சென்ரியூ கவிதைகள் எழுதிவிட முடியும்.
ஏனெனில், இயற்கையை தவிர்த்த மூட நம்பிக்கை கள், காதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிச்சை யெடுத்தல், வறுமை, சாதி, மதம், வரதட்சணை, பெண்ணியம், தலித்தியம் போன்ற சமுதாயச் சிக்கல் களும், நீதியின் முரண்பாடுகள், நோய்கள், அன்றாட செய்திகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள், உரை நடை போன்ற அமைப்பில் நேரடியாகக் கருத்தை சொல்லுதல்; அறிவுறுத்தல் இவை போன்ற பிற கருப் பொருள்கள் அனைத்தும் சென்ரியூ வகையைச் சார்ந்தவையாகும். 
தேநீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் எளிய மனிதர்கள் இலக்கிய நயங்களை இயற்கையை, கவித்துவத்தை, கவிதைப் பற்றிய உட்சிந்தனையை விரும்பாதவர்கள் ஒருவரோடு ஒருவர் களிப்பூட்டிக் கொள்ளும் முறையில் பேசிக் கொள்ளும் போது, அங்கதக் கவிதைகளில் அர்த்தச் செறிவும் கவித்து வமும் ஹைக்கூவாகவும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே  என்ற ஞானி யின் கூற்று முற்றிலும் சரியானதேயாகும்.
 
 
என்னுடைய ‘சென்ரியூ’ கவிதை முயற்சிக்குக் காரணமாக இருந்தவர் ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் கேசவன் அவர்கள் ஆவார்:
 
ஒரு நாள் முதுகலைத் தமிழ்ப் பாட வேளையில், “ஈரோடு தமிழன்பன் ‘சென்ரியூ’ என்றொரு புதிய கவிதை வடிவத்தை படைத்துள்ளார்” என்றார். அந்தக்  கவிதை வடிவம் ‘ஹைக்கூ’வின் பரிமாணம் என்றும் சுருக்கமாகச் சொன்னார். நான் அந்த 2004ஆம் ஆண்டு கால கட்டத்தில்  ஹைக்கூ பற்றிய  புரிதல்  இல்லாமல் அது மூன்று அடிகள் என்று நினைத்துக் கொண்டு எழுதிவந்தேன்.  கடந்த  ஐந்து ஆண்டுகளில்  என்னுடைய ஆராய்ச்சிப் பட்டங்களுக்கான தேடல்,  இதழியல்  தொடர்பு,  நவீனக்  கவிதை  வாசிப்புப்  பயிற்சி  இவை  அனைத்தும்  ஹைக்கூ பற்றிய  மிகச்  சரியான  புரிதலை  எனக்குத்  தந்தது. 
 
பல  ஹைக்கூக் கவிதைகள்  படைத்தப்  பின்னர்,  பேராசிரியர் சொன்ன ‘சென்ரியூ’ வகைமையை அறிய புத்தகங்களையும்  நூலகத்தையும் நாடிச் சென்றேன்.  ‘சென்ரியூ’வின் வடிவம், உள்ளடக்கம், நுட்பங்களை தெரிந்து கொண்டேன். நான் எழுதி வைத்திருந்த பல ஹைக்கூக் கவிதைகள் சென்ரியூ கவிதைகள் என்பதை இனம் காண முடிந்தது.  கல்லூரிக்  காலத்தில் (2005)  பேராசிரியர் கேசவன்  அவர்கள் எம் மனத்தில் ஊன்றி  வைத்த ஒரு வார்த்தையான ‘சென்ரியூ’ எனும் வித்து  இன்று விருட்சமாகக் கிளைத்திருக்கிறது. அவருக்கு  இந்தப் படைப்பின் மூலம் நன்றி கூறுவதோடு  அமையாமல்  இந்த  நூலை அவருக்குக்  காணிக்கை யாக்குவதில்  மகிழ்கிறேன்.

                                                                          - ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 17:23

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ (சென்ரியூ) நூலின் ஆய்வுரை
 ந.க. துறைவன்
பிளாட் நம்பர் 20, வசந்தம் நகர் விரிவு,
பேஸ் 3, சத்துவாச்சாரி
வேலூர் – 632 009.

செல்: 9442234822; 8903905822


 நகைப்பிற்குரிய மென்மையான கோபம்...
ஜப்பானிய ஹைக்கூ வகைமைகளில் சென்ரியூவும் ஒரு வடிவமாகும். எது ஹைக்கூ எது  சென்ரியூ என வகை பிரித்து வாசிப்பது வாசகனுக்குச்  சிரமமாகத் தோன்றும். அந்த அளவுக்கு ஹைக்கூவும் சென்ரியூவும் மயக்கமுற்றுக் காணப்படும். ஆனாலும், ஹைக்கூ, சென்ரியூவின் கரு வேறாகும். இதனை,
ஹைக்கூவில் இயற்கை உள்ளது. அது ஒரு நிகழ்வு ஆயினும் அதன் பின்னணியில் இயற்கை உண்டு. சென்ரியூவில் மனிதர்களும் சமுதாயமுமே இடம் பெறுகின்றனர். ஒரு தேசியத்துக்கு உரித்தான குணங்கள், மனிதர்களின் நூதனங்கள், முட்டாள் தனங்கள் இவை னைத்தும் நகைச்சுவையோடு சுட்டி காட்டப்படும். ஹைக்கூ இயற்கைக் கவிதை சென்ரியூ மக்கள் கவிதை என்பார் ஆய்வாளர் நிர்மலா சுரேஷ். சென்ரியூவை அறிமுகப்படுத்தும் கீழ்க்கண்ட,
1.சிரிக்கும் வில்லோ மரம் - நிர்மலா சுரேஷ்
2.ஒரு வண்டி சென்ரியூ - ஈரோடு தமிழன்பன்
3.சில ஹைக்கூ சில சென்ரியூ - கவிஞர் அமரன்
4.ஞானக்கோமாளி - எஸ். ஷங்கரநாராயணன்
5.கூறாதது கூறல் - எஸ். ஷங்கரநாராயணன்
6.ஊர்வலத்தில் கடைசி மனிதன் - எஸ். ஷங்கர நாராயணன்
7. திறந்திடு சிஷேம் - எஸ். ஷங்கரநாராயணன்
8. கடவுளின் கடைசி கவிதை - மணிகண்டன் (மாமதயானை)
 
9. ஒரு டீ சொல்லுங்கள் - கவின்
ஆகியோரின் மேற்கண்ட தொகுப்புகள் சென்ரியூ கவிதைகளாகவும் சென்ரியூ கட்டுரைகளாகவும் இது வரை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகிய உள்ளன. கவியருவி ம. ரமேஷின் இந்தச் சென்ரியூ தொகுதி இவர்களுக்கு அடுத்த வரிசையில் இடம் பெறுவது மட்டுமல்லாமல் தற்சமயம்,
தமிழில் வெளிவரும் ஏராளமான சென்ரியூ கவிதை களையே  ஹைக்கூ கவிதைகள் என்று அழைக்கும் அறியாமைத் தனத்தை ஹைக்கூத் தொகுதிகளும் வணிக, சிற்றிதழ்களும் செய்து வரும் சூழலில் இந்தச் சென்ரியூ தொகுதி வருவது பாராட்டுக்குரியதும் சிறப்புக்குரியதும் கவனிப்புக்கு உரியதுமாகும்.
வாழ்க்கை முரண்கள், மனித குணநலன்கள், மன விகாரங்கள், நகைச்சுவை, அங்கதம், கேலி கிண்டல், மூடத்தனங்கள், அரசியல் விமர்சனங்கள் போன்ற இன்ன பிற அம்சங்கள் சென்ரியூவில் கையாளப்படும். பனித்துளியில் பனைமரம் என்னும் ஹைக்கூத் தொகுதியினை வெளியிட்டு அறிமுகமான கவியருவி ம.ரமேஷ், சென்ரியூவைப் படைத்துத் தந்துள்ளப் பாங்கினை இவ் ஆய்வுரை விளக்குகிறது.
பிள்ளைகளைப் பெற்றோர்கள் கொஞ்சம்கூட சுதந்திரமாய் இருக்கவிடுவதில்லை. வீட்டிற்குள்ளே கூட விளையாட அனுமதிக்காத நாம் வெளியில் சென்று விளையாடவும் அனுமதிப்பதில்லை. இதனை,
அம்மா விளையாடப்போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி
என்ற சென்ரியூவால் எடுத்துக்காட்டுகிறார். ஹைக்கூ வெளியீட்டு உத்தியை ஜப்பானிய சென்ரியூ கவிதை  கைவிட்டுவிடாதபடி காத்துவர கவியருவி ம.ரமேஷின் சென்ரியூ கவிதைகளும் ஹைக்கூ வெளியீட்டு உத்தி யையே பயன்படுத்தி சென்ரியூ கவிதைகளைப் படைத் தளித்துள்ளார். அம்மாவிடம் குழந்தை விளையாடப் போகிறேன் என்கிறான். அம்மா என்ன விளையாட்டு என்று கேட்கிறாள். வெளியே சென்று விளையாடப் போகும் விளையாட்டு பெயரை மூன்றாம் அடியில் சொல்வான் என்று நாம் எதிர் பார்த்தால், எதிர்பாராத திருப்பமாக ‘போய்ப் படி’ என்று முடிகிறது.
வீட்டில்தான் பெற்றோர்கள் இப்படியென்றால், பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்களும் மாணவர்களின் விஷயத்தில் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொள் கிறார்கள். இதனை,
பேசாமல் படி பேசாமல் படி
பேசிக்கொண்டே இருக்கும்
ஆசிரியர்
 
என்பதால் அறியலாம். ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் கருதிப் படிக்கும் எந்திரமாக மாற்றி அமைக்கப் படி படி என்று நச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் படித்துக் கொண்டிருக்கச் சிலர் பேசிக்கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுமிருக்க படி படி என்று ஆசிரியரே சப்தம் எழுப்பிக் கொண்டு இருக்கிறார். இதில் ஆசிரியரின் சப்தம் என்பது மாணவர்களின் நலனைச் சார்ந்தே அமைந்துள்ள தெனினும் வகுப்பு அறையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எரிச்சலாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறதென்று நகைக்கிறார்.
கிராமங்களில் விவசாயம் நொடிந்து வருகிறது. வயல் வேலைக்குக் கூலியாட்கள் கிடைப்பதும் அரிதாகி விட்டது. அவர்கள் வேறு வேலைகளுக்கு நகரங் களுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள். வயல் வெளிகள் வீட்டுமனைகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின் றன.  இந்நிலையில்,
மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக் கொண்டிருந்தான்
கம்ப்யூட்டரில் விவசாயி
என்று இனி வரும் சில ஆண்டுகளில் நவீனமாக்கப்படும் வேளாண்மையைக் கல்வியை நினைத்து தற்போதே நகைக்கிறார்.
கல்வி என்பது இன்று தாராளமயமாக்கப்பட்ட வியாபாரம் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கல்விக் கடவுளான சரஸ்வதிக்குக் கையில் புத்தகமும் வீணையும்தான் இருக்கும். ஆனால் கவிஞரோ,
சரஸ்வதி கையில்
உண்டியல்
கல்வி வியாபாரம்
என்று கல்வி நிறுவனங்களின் இன்றையப் போக்கைச் சாடுகிறார்.
தமிழக அரசின் கஜானாவை அதிகம் நிரப்பிக் கொண்டிருக்கும் வருமானம், மதுக்கடைகளிலிருந்தும் மணல் குவாரிகளிலிருந்தும் கிடைக்கும் பெரும் பண மாகும். இவ்வருவாய் இல்லையெனில் அரசின் பல இலவசத் திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் போகும் என்பது மக்கள் அறிந்ததே. உயிர்ப் பலிகள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்புகள், பொதுமக்களின் போராட் டங்கள் என்று எதையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
பல மொழிகளில்
குடிகாரன் வாசித்தான்
மதுக்கடையின் பெயர்
என்னும் சென்ரியூவில் விளம்பரம் ஏதும் தேவையே இல்லாத மதுக்கடைக்குப் பல மொழிகளில் மதுக்கடை என்னும் பெயரை எழுதி விளம்பரம் செய்வதைக் கிண்டல் செய்கிறார். அதையும் அங்குக் குடிக்கும் ஒரு குடிகாரன் வாசித்துக் கொண்டிருந்தான் என்பதுதான் நகைப்புக்குரியதாகிறது. அதாவது, பல மொழிகள் தெரிந்த; நன்றாகப் படித்த ஒருவன் குடிப்பது என்பது படித்தவர்களிடமும் ஒழுக்கம் இன்று சிதைந்து விட்டதைக் காட்டக் கவிஞர் இச்சென்ரியூவைப் படைத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
கிராமங்களில் இன்றும் பொதுவான சுடுகாடு என்பது இல்லை. சுடுகாடு வேண்டிப் போராடும் அவல நிலையிலேயே மக்கள் உள்ளனர். அப்படியே சுடுகாடு ஒதுக்க நிலம் கிடைத்தாலும், அதுவே,
சாதிக்கொரு சுடுகாடு
மாற்றம் ஏற்பட்டது
கட்சிக்கொரு சுடுகாடு
என்று அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகிறார். சாதிக்கொரு சுடுகாடு / மாற்றம் ஏற்பட்டது என்ற இரண்டு அடிகளை நாம் வாசிக்கும்போது சாதிகள் ஒழிந்து ஒன்றுபட்டு இருக்குமோ என்று நாம் எண்ணி மகிழும் நேரத்தில் அடுத்த அடியில் நம்மை எதிர்ப்பாராத அதிர்ச்சிக்கு இட்டுச் சென்றிருக்கிறார்.
இந்நூற்றாண்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. சமுதாய ஒற்றுமையும் உதவும் மனப்பான்மையும் பெரிதும் குறைந்துவிட்டது. தன் குடும்பம், தன் வேலை, தன்னுடைய வருமானம் என்று மனிதர்கள் இயங்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் பிறருக்காக வருந்தும் நிலையில் இல்லை  என்பதை இன்றைய இயல்பான நடைமுறைப் போக்கிலேயே கவிஞர் எடுத்துரைப்பதைப் பாருங்கள்:
அண்டை வீட்டில் இழவு
பக்கத்து வீட்டில் சப்தமாய்
தொலைக்காட்சித் தொடர்கள்
அண்டை வீட்டில் இழவு / பக்கத்து வீட்டில் சப்தமாய் என்று முதல் இரண்டு அடிகளைப் படைத்து மூன்றாவது அடியில் தொலைக்காட்சித் தொடர்கள் என்று முடிக்கிறார். முதல் இரண்டு அடிகளைப் படித்ததும்  பக்கத்து வீட்டிலிருந்து சப்தமாய் யாராவது அழுது கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கடைசி அடியை வாசித்தால் பெரும் அதிர்ச்சி ஏற்படு கிறது; தொலைக்காட்சித் தொடர்களை அதுவும் சப்தமாய் வைத்து; அழுகை ஒலி அவர்களின் காது களுக்குக் கேட்கக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்வதால் அண்டை வீட்டாரிடமே நாம் மனித நேயத்தைக் கடை பிடிப்பதில்லை என்று தெரிகிறது. மறையும் மனித நேயத்தை நாம் மீட்டு எடுக்க வேண்டும் என்றும் சமுதாயத்துக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார் கவிஞர்.
கடந்த பத்தாண்டுகளில் விவாகரத்துகளும் வழக்கு களும் அதிகரித்துள்ளன என்று நீதி மன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துக்கு முக்கிய  காரணம் சகிப்புத் தன்மையின்மையே ஆகும். மெத்த படித்தவர் களும், பெரும் சம்பளம் வாங்குபவர்களும் மேற்கத்திய நாகரிகத்தைக் கண் மூடித்தனமாகக் கடைபிடிக்க விழைபவர்களுமே விவாகரத்து வேண்டி நீதிமன்றம் செல்கின்றனர். மேலும், குடும்பத்திற்குள் இருக்கும் இருவருக்கும் உள்ள ஒழுக்கச் சிதைவும் விவாகரத்துக் குக் காரணமாகின்றன.
விவாகரத்து
முடிந்த பின்னும் சண்டை
குழந்தைக்காக!
குடும்பத்திலிருந்து விலகினாலும் வருங்காலத்தின் குழந்தையின் பாதுகாப்பு கருதிக் குழந்தை யார் பக்கம் பிரித்துவிடுவது என்ற தீர்ப்பை நீதிமன்றம் கொடுத் தாலும் மீண்டும் குழந்தைக்காகச் சண்டை ஏற்படு வதை எடுத்துக்காட்டும் சென்ரியூவால் எப்படியும் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலை விவாகரத்துகள் செய்கின்றன என்று கூறிச் சமூக அவலமாகி வரும் இன்றைய விவாகரத்து வழக்குகளை நகைக்கிறார். கவிஞர் மட்டுமல்ல,
நீதிமன்றத்தில் பெற்றோர்
கைகொட்டிச் சிரிக்கிறது
நீதிதேவதையைப் பார்த்து குழந்தை
என்று ஏதுமறியாத குழந்தை நீதிதேவதையைப் பார்த்து அல்ல சமுதாயத்தைப் பார்த்தே சிரிக்கிறது எனலாம். இவ்வாறு பலரும் நகைக்குமுன் நாம் விவாகரத்தை ஒழிப்பது சமுதாயக் கடமையாகிறது. விவாகரத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பச் சிதையும், தாய் தந்தை உடன் இல்லாததும் காரணம் என்கிறார் கவிஞர்:
அம்மா  அப்பா
முதியோர்  இல்லத்தில்
மகன்  மருமகள்  விவாகரத்து
 
ந்தச் சென்ரியூ தொகுப்பில் சென்ரியூக்கான பண்புகள், வெளியீட்டு முறைமைகள் ஆகியவற்றைக் கைவிடாமல் படைத்திருப்பது  பாராட்டுக்குரியதாகும். கிராமம்; கிராமம் சார்ந்த சூழல்கள், குடும்பச் சிக்கல் களால் சமுதாயச் சிக்கலாக மாறிப்போன தீமைகள், முதியோர்களின் அவல நிலை, இளைஞன் - இளைஞி களின் மனப் போக்குகள், காதல் வெற்றித் தோல்வி கள், திருமணம், விவாகரத்து, விபச்சாரம், திரைப் படம்; தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களின் போக்கும்; நடிகர் நடிகைகளின் செயல்பாடுகளும், அரசியல்வாதிகள், ஊழல்கள், சாதி மத இனங்களின் மூடத்தனங்கள், புகை; மதுவின் தீமைகள், கடவுள்; தெய்வங்களின் மீதான பார்வை, சுற்றுச்சூழல் என இந்தச் சமுதாயத்தில் நிகழும் முரணான சம்பவங்களை  நகைப்புக்கு ரியதாக்கிச் சற்று மென்மையான கோபத்தில் தன் சென்ரியூ கவிதைகளின் வாயிலாக வெளிக்காட்டியுள்ளார். சமுதாயத்தில் இந்தப் புதிய வகைச் சென்ரியூ கவிதைகள் மலர்ந்து மனம் வீசி பரவும்போது துர்நாற்றமெடுத்திருக்கும் சமுதாயச் சிக்கல்கள் அனைத்தும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி நல்லதொரு மனம் நிறைந்த சமுதாயமாக மாற்றம் பெரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
- ந.க. துறைவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by ராகவா Wed 26 Mar 2014 - 17:56

மிக தெளிவாக சொல்லிய விதம் மிக அருமை நண்பா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by ந.க.துறைவன் Thu 27 Mar 2014 - 13:01

நல்ல அறிமுகம் . தொடரட்டும்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 18:07

ந.க.துறைவன் wrote:நல்ல அறிமுகம் . தொடரட்டும்...
இப்பகுதியில் திருத்தம் தேவைப்பட்டால் தாங்களும் கருத்துரைத்து படைப்புகளை செம்மைபடுத்துங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by ராகவா Fri 28 Mar 2014 - 6:10

கவியருவி ம. ரமேஷ் wrote:
ந.க.துறைவன் wrote:நல்ல அறிமுகம் . தொடரட்டும்...
இப்பகுதியில் திருத்தம் தேவைப்பட்டால் தாங்களும் கருத்துரைத்து படைப்புகளை செம்மைபடுத்துங்கள்...
சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Images?q=tbn:ANd9GcRwB0bydIyIO9L6hCOVr2rsGW8SSFmqQSmb70fgAKA3BOc3_rMEuAஎல்லோரும் கலக்கலாம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 28 Mar 2014 - 8:04

தொடரலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 21 Jul 2014 - 5:16

குழந்தை நரபலி
பலி வாங்காமல் தீர்ப்பு

ஆயுள் தண்டனை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum